Published : 26 Apr 2017 09:59 AM
Last Updated : 26 Apr 2017 09:59 AM

காரணம் ஆயிரம்: பீரங்கிகள் ஏன் மேல் நோக்கி இருக்கின்றன?

விளையாட்டுத் துப்பாக்கிகளில் தக்கை வைத்துச் சுடும்போது நேருக்கு நேர்தானே சுடுகிறோம். திரைப்படங்களில் கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்கும்போது போலீசார் நேருக்கு நேர்தானே துப்பாக்கியைப் பிடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் போர்க்களத்தில் போர் செய்யும் பீரங்கிகள் மட்டும் ஏன் எதிரிகளை நேருக்கு நேர் நோக்குவதில்லை..? எங்கேயோ வானத்தைப் பார்த்து வைக்கப்பட்டிருக்கின்றன ஏன்?

பீரங்கிகளை இயக்கி எதிரிகளின் முகாம்களை அழிக்க வேண்டும் என்றால், அவை முகாம்களை நேருக்கு நேர்தானே குறி வைக்க வேண்டும்.

குண்டுகள் மலைகளைத் தாண்டிச் சென்று விழ வேண்டும் என்பதற்காக வானத்தை நோக்கியதுபோல வைக்கப்படுகின்றன என்று நீங்கள் கூறினால் உங்கள் விடை தவறு. ஏனெனில், சமவெளிகளில் நின்று போர் செய்யும்போதுகூடப் பீரங்கி வண்டிகளின் குண்டுகள் பாயும் குழல்கள் மேல் நோக்கியே இருக்கும். பார்ப்பதற்கு ஏதோ வானத்து நட்சத்திரங்களை வீழத்துவதற்கு வைக்கப்பட்டுள்ளதுபோலத் தோன்றும்.

இதற்கான காரணத்தை ஒரே வரியில் சொல்லிவிடலாம். காற்றின் விசையிலிருந்து தப்பிக்கவே பீரங்கிகள் மேல்நோக்கிய திசையில் வைக்கப்படுகின்றன. ஆம், பீரங்கிக் குண்டுகளைக் காற்று தடுத்து, அதன் வேகத்தைக் குறைத்துவிடுகிறது. மேல் நோக்கிக் குண்டுகளைச் செலுத்துவதால் பீரங்கிக் குண்டுகளுக்கு எதிராகக் காற்றின் சக்தியை முழுவதும் குறைத்துவிட முடியாது. ஏதோ முடிந்த வரை குறைக்கலாம்.

அப்படியென்றால் பீரங்கிக் குண்டுகளை விட காற்று அதிக சக்தி மிக்கதா என்று நீங்கள் ஆச்சரியமாகக் கேட்கலாம். உங்கள் ஆச்சரியம் உண்மைதான். பீரங்கிக் குண்டுகளை விடவும் காற்று பல மடங்கு சக்தி வாய்ந்தது.

காற்று என்றால் புயல் மாதிரி அடித்து வீசுகிற காற்று அல்ல. சாதாரணமாக நம்மைச் சுற்றி ஆடாமல் அசையாமல் இருக்கிற காற்றுக்கே அவ்வளவு சக்தி உண்டு.

எவ்வளவு சக்தி?

ஒரு கைத்துப்பாக்கியை ஒரு போலீஸ்காரர் அல்லது ராணுவ வீரர், சற்று மேல் நோக்கியபடி சாய்வாக, 30 அல்லது 40 டிகிரி சாய்வான கோணத்தில், பிடித்துக்கொண்டு இயக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது துப்பாக்கியிலிருந்து நிமிடத்துக்கு 250 கி.மீ. வேகத்தில் புறப்படும் குண்டு அதிகபட்சமாக 10 அல்லது 15 கி.மீ. உயரத்தை அடைந்து, பிறகு கீழே விழுந்துவிடும். காற்றே இல்லாத வெற்றிடத்தில் இப்படி நீங்கள் துப்பாக்கியால் சுட்டிருந்தால் அது ஐம்பது கி.மீ. தூரம் வரை பயணித்திருக்கும். இதன் பயண தூரம் ஒரு வளைகோடாக அமைந்திருக்கும். நம் முகத்தில் பரவிப் படர்ந்து பரவசத்தை ஏற்படுத்தும் காற்றின் பலத்தைப் பார்த்தீர்களா? துப்பாக்கிக் குண்டு பயணித்திருக்க வேண்டிய 50 கி.மீ. தூரத்தை எப்படிச் சுருக்கிவிட்டது காற்று! காற்றின் இவ்வளவு வலுவான எதிர்ப்பு சக்தியை மீறித்தான் கைத்துப்பாக்கிகள் செயல்படுகின்றன.

இதற்கும் பீரங்கிகள் வானத்தை நோக்கியபடி சாய்வாக வைக்கப்பட்டிருப்பதற்கும் இடையே என்ன தொடர்பு? தொடர்பு இருக்கிறது.

பீரங்கிக் குண்டுகளை மேல் நோக்கிச் சுடும்போது அவை அதிக உயரத்துக்குச் செல்கின்றன. மேலே செல்லச் செல்ல வளிமண்டல அழுத்தம் குறைகிறது. வளிமண்டல அழுத்தம் குறைகிறபோது பீரங்கிக் குண்டுகளின் வேகத்தைப் பாதிக்கும் காற்றின் எதிர்ப்புச் சக்தியும் குறைகிறது. எனவே, பீரங்கிக் குண்டுகள் நீண்ட தூரம் பயணிக்கின்றன. நீண்ட வளைகோட்டில் பயணம் செய்து தூரத்தில் இருக்கும் இலக்கைத் தாக்குகின்றன. 30 டிகிரி சாய்வுக் கோணத்தில் வைக்கப்பட்டிருக்கும் பீரங்கியிலிருந்து செல்லும் குண்டுகளை விட 40 டிகிரி சாய்வுக் கோணத்தில் வைக்கப்பட்டிருக்கும் பீரங்கியின் குண்டுகள் அதிக தூரம் பயணித்து நீண்ட தூர இலக்கைத் தாக்குகின்றன.

வளிமண்டலத்தில் பல்வேறு அடுக்குகள் இருப்பதைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். பூமியின் மேல் பகுதியில் டிராபோஸ்பியர் என்ற அடுக்கு அடியடுக்காக உள்ளது. இது துருவப் பகுதியில் 8 கி.மீ. உயரம் வரையிலும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் 18 கி.மீ. உயரம் வரையிலும் பரவியிருக்கும். இதற்கு மேல் உள்ள அடுக்கு ஸ்ட்ராடோஸ்பியர். இது பூமியின் மேற்பரப்பில் 80 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளது. (ஜெட் விமானங்கள் இந்த அடுக்கில்தான் பயணிக்கின்றன).

டிராபோஸ்பியர் அடுக்கில் சுடப்படும் பீரங்கிக் குண்டு இலக்கை அடைய இரண்டு நிமிடம் எடுத்துக்கொண்டால் அதே குண்டு டிராபோஸ்பியருக்கு மேல் அடுக்கான ஸ்ட்ராடோஸ்பியரில் ஒரு நிமிட நேரமே எடுத்துக்கொள்கிறது. ஏனெனில், ஸ்ட்ராடோஸ்பியரின் வளிமண்டல அழுத்தம் டிராபோஸ்பியரைவிடக் குறைவாகவே இருக்கிறது.

மாணவர்களே, பீரங்கிகள் ஏன் மேல் நோக்கி இருக்கின்றன என்பது இப்போது புரிகிறதா? ஜெர்மானியர்கள் முதல் உலகப்போரின்போதே (1914-1918) இதைப் புரிந்துகொண்டுவிட்டார்கள். பிரான்ஸின் மீது பீரங்கிகளைக் கொண்டு தாக்கிக்கொண்டிருந்தபோது உயரமான பாதையில் சென்ற குண்டுகள் நீண்ட தூரம் பயணிப்பதை எதேச்சையாத்தான் பார்த்தார்கள். பிறகுதான் எதிரிகளை எட்ட நின்று தாக்கும் வித்தையை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதிக உயரமாக அடிக்கப்பட்ட பந்து எந்தப் பக்கம் போகிறது என்று ஊகிக்க முடியாமல் அதைப் பிடிக்க ஓடி வருபவர்கள் தடுமாறுவதற்கும் காற்றுதான் காரணம், கண்மணிகளே!

- (காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர். தொடர்புக்கு:suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x