Published : 27 Aug 2014 12:00 AM
Last Updated : 27 Aug 2014 12:00 AM

அந்தரத்தில் மிதக்கும் அதிசயம்!

நிலவில் இறங்கி மனிதன் நடந்த காலம் மலையேறிப் போச்சு. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பி வைப்பதில் நாடுகள் போட்டி போடும் காலம் வந்தாச்சு. பூமிக்கு வெளியே மனிதர்கள் வாழ இடம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்து விட்டோம்.

பூமிக்கும் வெளியே வேறு கிரகங்களில் ‘வேற்றுக் கிரகவாசிகள்’ வசிக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்வதிலும் நமக்கு த்ரில்லான குஷி.

இவற்றோடு பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை மிதக்கவிட்டு, தகவல் தொடர்பு, ரிமோட் சென்சிங் எனப்படும் தொலையுணர்வு தொழில்நுட்பத்தில் நம் நாடு பல நாடுகள் சாதனைப் படைத்து வருகின்றன.

நாம் பேசும் மொபைல் போன், டி.டி.எச் டி.வி., கூகுள் மேப் என எல்லாமே மேலே மிதக்கும் செயற்கைக் கோள்களின் உதவியால்தான் முடிகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இப்படி பூமிக்கு மேலே வான்வெளியை மையமாக வைத்து நடத்தப்படும் அத்தனை ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படை அமைத்துக் கொடுத்தது விண்வெளி ஆய்வுதான். எதிர்காலத்தில் நீங்கள் விண்வெளி வீரராக விரும்பினால் இப்போதிருந்தே விண்வெளி ஆய்வைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் இல்லையா?

பூமியிலிருந்து விண்வெளி ஆய்வு செய்வது ஒருவகை. ஆனால் பூமியிலிருந்து 240 கிலோ மீட்டர் உயரத்தில் வானில் மிதந்தபடி விண்வெளி ஆய்வு செய்ய முடியுமா? முடியும் என்று அந்த அற்புதத்தை சாத்தியப்படுத்துவிட்டது, வானில் மிதக்கும் அறிவியல் ஆச்சர்யமான ‘சர்வதேச விண்வெளி நிலையம்’.

15 நாடுகள் இணைந்தன

உலகின் வலிமை மிக்க நாடுகள் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களுக்கென்று பிரம்மாண்ட விண்வெளி நிலையங்களை வானில் நிலைநிறுத்தி இருக்கின்றன. இவர்களது விண்வெளி நிலையங்களை மற்ற நாடுகள் பயன்படுத்த முடியாதல்லவா? அப்போதுதான் 15 நாடுகள் இணைந்து தங்களுக்கென சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்க முடிவு செய்தன.

விண்வெளிக் கப்பல்கள் (ஸ்பேஸ் ஷிப்ஸ்) மூலம், பத்து ஆண்டுகள் தொடர்ந்து இதற்கான பாகங்கள் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. 1998-ம் ஆண்டில் பூமியில் சுற்றுவட்டப் பாதையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இவை மிதக்கவிடப்பட்டன. பிறகு விண்வெளி வீரர்கள் முப்பது முறை விண்வெளிக்குச் சென்று இந்தப் பாகங்களை மெல்ல மெல்ல வெற்றிகரமாக ஒன்றிணைத்தார்கள். இப்படி உருவாக்கப்பட்டதுதான்

‘ஐ.எஸ்.எஸ்.’ என்றழைக்கப்படும் (International Space Station) சர்வதேச விண்வெளி நிலையம். இதன் மொத்த எடை 460 டன் (1 டன் என்றால் ஆயிரம் கிலோ), ஒரு கால்பந்து மைதானம் அளவு பரப்பளவு கொண்டது என்றால் இதன் பிரம்மாண்டத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பூமியிருந்து 240 மைல் உயரத்தில் மிதந்தபடி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இது வலம் வருகிறது.

என்ன செய்கிறார்கள் இங்கே?

இந்த விண்வெளி நிலையத்துக்குச் செலவிட்ட நாடுகள் விண் கப்பல்கள் மூலம் இங்கே பயணம் செய்து பூமியின் இயக்கம், அதன் சுற்றுச்சூழல் மாற்றங்கள், கடலில் உருவாகும் புயல்களின் நகர்வுகளைக் கண்காணித்தல், பால்வெளியை நோக்குதல் எனத் தொடர்ச்சியாக வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கிறார்கள்.

இங்கே தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை மட்டும்தான் உண்கிறார்கள். இந்த உணவுகளையும் மாத்திரை வடிவில் எடுத்துச் செல்வதும் உண்டு. சூரிய ஒளி மூலம் நிலையத்துக்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறது.

சுவாசிக்கத் தேவையான அளவு ஆக்ஸிஜன் இங்கே சேமிக்கப்பட்டுள்ளது. குடிக்கத் தண்ணீரும்தான்.

அப்புறமென்ன? ஆராய்ச்சிகள் ஜாம் ஜாமென்று நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x