Published : 08 Nov 2017 10:38 AM
Last Updated : 08 Nov 2017 10:38 AM

வியப்பூட்டும் இந்தியா: இந்தியாவின் கிராண்ட் கேன்யன்!

 

கி

ராண்ட் கேன்யன் என்றால் மிகப் பெரிய பள்ளத்தாக்கு என்று பொருள். உலகிலேயே மிகப் பெரிய பள்ளத்தாக்கு அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இருக்கிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது இந்தப் பள்ளத்தாக்கு. கொலரோடா என்ற மிகப் பெரிய நதியின் ஓட்டத்தாலும் அழுத்தத்தாலும் பாறைகள் அரிக்கப்பப்டுகின்றன. காலப்போக்கில் இப்படிப் பள்ளத்தாக்கை உருவாக்கிவிடுகின்றன. பூமியின் மீதுள்ள டெக்டோனிக் தகடுகளின் செயல்பாடுகளும் பள்ளத்தாக்கு ஏற்பட உதவுகின்றன.

கொலரோடா நதி பாறைகளைப் பிளந்து 446 கி.மீ. நீளமும் 29 கி.மீ. அகலமும், 1800 மீட்டர் ஆழமும் உடைய மிகப் பெரிய பள்ளத்தாக்கை உருவாக்கியிருக்கிறது. நிலவியலாளர்கள் கிராண்ட் கேன்யன் உருவாகி சுமார் 7 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள். இது ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதுபோன்ற மிகப் பெரிய பள்ளத்தாக்கு இந்தியாவிலும் இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் இருக்கும் கந்திகோட்டா என்ற சிறிய கிராமத்துக்குச் சென்றால் இதைப் பார்த்துவிடலாம். ‘கந்தி’ என்றால் தெலுங்கில் பள்ளத்தாக்கு என்று பொருள். அமெரிக்கப் பள்ளத்தாக்கு அளவுக்குப் பெரியதாக இல்லாவிட்டாலும் மிக அற்புதமான, அனைவரும் கண்டுகளிக்கக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்று.

பென்னாறு நதி எர்ராமலையின் குறுக்கே ஓடுவதால் இந்தப் பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளது. பாறைகளை வெட்டி, அவற்றைக் கைகளால் அடுக்கிவைத்ததுபோல் உள்ளது! சிவப்பும் மஞ்சளும் பழுப்புமாகப் பல்வேறு வண்ணங்களில் பாறைகள் மிக அழகாகக் காணப்படுகின்றன. இரண்டு பக்கமும் உள்ள பாறை அடுக்குகளுக்கு நடுவே பென்னாறு ஓடுவது அவ்வளவு அற்புதமாக இருக்கும்! இந்தியாவில் மறைந்திருக்கும் அதிசயங்களில் கந்திகோட்டா பள்ளதாக்கும் ஒன்று.

இங்கே மிகப் பெரிய கோட்டை ஒன்றும் கட்டப்பட்டிருக்கிறது. இப்பொழுது அந்தக் கோட்டைச் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.ஐந்து கி.மீ. சுற்றளவில் இந்தக் கோட்டையின் மதில் சுவர் அமைந்துள்ளது. 20 அடி உயரத்தில் கோட்டையின் நுழைவாயில் உள்ளது.

கோட்டையில் 101 இடங்களில் 40 அடி உயரத்துக்கு முகப்பு அமைப்புகள் உள்ளன. 13-ம் நூற்றாண்டில் கப்பா என்ற அரசரால் கட்டப்பட்ட இது, தென்னிந்தியாவில் மிகப் பெரிய கோட்டைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. விஜயநகர மன்னர்களின் படைத் தளபதிகளான பெம்மாசனி நாயுடு பரம்பரை 13-ம் நூற்றாண்டிலிருந்து 282 ஆண்டுகள் ஆண்டிருக்கிறது.

கோட்டை வளாகத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் மிகவும் பழமையானதாகவும் அழகான கட்டிடக்கலையுடனும் காட்சியளிக்கிறது. இங்குள்ள மாதவ சுவாமி கோயிலின் கட்டிடக்கலை ஹம்பிக்கு ஈடாக இருக்கிறது. வெளிப்புற அமைப்பைவிட உட்புறம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாமியா மசூதியை ஒட்டி மிகப் பெரிய தானியக் கிடங்கு ஒன்றும் உள்ளது. இந்தக் கோட்டைக்கு அரணாக இந்தக் கந்திகோட்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

இயற்கையை நேசிப்பவர்கள் அவசியம் ஒருமுறை கந்திகோட்டா பள்ளத்தாக்கைக் கண்டு ரசிக்க வேண்டும்.

தொடர்புக்கு: mangai.teach@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x