Last Updated : 17 Feb, 2016 11:26 AM

 

Published : 17 Feb 2016 11:26 AM
Last Updated : 17 Feb 2016 11:26 AM

வாண்டு பாண்டு: புது தினுசா ஒரு மீனு!

வாண்டு: ஹாய் வாண்டு... காலையில உங்க வீட்டுக்கு வந்தேன். நீ இல்லையே. எங்க போய்ட்ட?

பாண்டு: ஓ... அதுவா, காலையில அப்பாகூட மீன் தொட்டி வாங்கப் போயிருந்தேன்.

வாண்டு: மீன் தொட்டியா? வீட்டுல மீன் வளர்க்கப் போறியா?

பாண்டு: ஆமா வாண்டு. உங்க வீட்டுல அழகான மீன்களை வளர்க்குறீங்க இல்லையா? நானும் மீன் வளர்க்கணும்னு அப்பாகிட்ட ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருந்தேன். இப்போதான் அப்பா அதுக்கு ஒத்துக்கிட்டாரு.

வாண்டு: ம்... இனி விதவிதமா எங்கே மீன் கிடைக்கும்ணு அலைய ஆரம்பிச்சுடுவ…

பாண்டு: அழகான மீன் எங்கே கிடைக்கும்னு நீயே சொல்லேன்.

வாண்டு: நிச்சயமா சொல்றேன். மீனைப் பத்தி சொல்றப்பதான் எனக்குப் புதுசா கண்டுபிடிச்ச மீனோட ஞாபகம் வருது பாண்டு.

பாண்டு: அப்படியா? எங்க கண்டுபிடிச்சாங்க?

வாண்டு: வட அமெரிக்கா, ஜப்பான்ல இரண்டு புது வகை மீன்களோட ஃபாசில்னு சொல்லுவாங்களே, புதைபடிவங்களைக் கண்டுபிடிச்சிருக்காங்க.

பாண்டு: ஓ... அப்படி அது என்ன மீனு வாண்டு?

வாண்டு: இது ‘ரைன்கானிசிதிஸ்’ன்ற (Rhinconichthys) குடும்பத்தைச் சேர்ந்த மீனாம். இந்த மீனோட வாய் ரொம்ப வித்தியாசமா இருக்கும். மேலே பறக்குறப்ப பாராசூட் விரியுமில்லையா? அது போல இந்த மீனோட வாய் அழகா விரியுமாம். கடல் பாசிகளைச் சாப்பிட ரொம்பப் பிடிக்குமாம்.

பாண்டு: இப்பவும் இந்த மீன் இருக்காப்பா?

வாண்டு: இல்லை பாண்டு. 9.2 கோடி ஆண்டுகளுக்கு முன்னால இந்த மீன் இருந்திருக்கு. இப்போதைய இங்கிலாந்தை ஒட்டி இந்த மீன் அதிகமா இருந்துச்சாம். ஆனா, இப்போ வடஅமெரிக்கா, ஜப்பான்ல இதோட புதைபடிவங்கள் கிடைச்சிருக்கு. அதனால இந்த மீனைப் பத்தி விஞ்ஞானிகள் நிறைய ஆராய்ச்சி செய்றாங்க.

பாண்டு: மீன் வளர்க்க போற நேரத்துல புதுசா ஒரு மீனைப் பத்தி இன்னிக்கு நான் தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம், சென்னையில் ஒரு குட்டிப் பையன் மாநில அளவுல ஓவியப் போட்டியில் ஜெயிச்சது பற்றி நீ கேள்விப்பட்டியா?

வாண்டு: இல்லையே பாண்டு. எந்த ஓவியப் போட்டியில ஜெயிச்சாங்க?

பாண்டு: அந்தக் குட்டிப் பையனோட பேரு ராபின். ஆறாம் வகுப்பு படிக்கிறான். ஓவியம் வரையறுதுல ஆர்வம் ரொம்ப அதிகம். தேசிய எரிசக்தி அமைச்சகம் இருக்கு இல்லையா? அவுங்க ‘ஆற்றல் பாதுகாப்பு’ தொடர்பா ஒரு ஓவியப் போட்டியை நடத்துனாங்க.

வாண்டு: ஓ... அப்படியா? எவ்வளவு பேரு போட்டியில கலந்துக்கிட்டாங்க பாண்டு?

பாண்டு: இந்தப் போட்டியில் இந்தியா முழுக்க மொத்தம் ஆறு லட்சம் குட்டிப் பசங்க கலந்துக்கிட்டாங்க. அதுல 3 பேரை மாநில அளவுல ஜெயிச்சதா அறிவிச்சாங்க. அதுல ராபின் தமிழ்நாட்டுல முதலிடம் பிடிச்சுருக்கான். போட்டியில ஜெயிச்ச ராபினுக்கு 20 ஆயிரம் ரூபா பரிசு கொடுத்திருக்காங்க. அதுமட்டுல்ல, டெல்லிக்கு ஐந்து நாள் சுற்றுலாவும் கூட்டிட்டுப் போயிக்காங்க.

வாண்டு: டெல்லி சுற்றுலா வேறயா? ரொம்ப ஜாலிதான் போல.

பாண்டு: அடுத்த முறை இப்படிப் போட்டி அறிவிக்குறப்ப நாமும் அதுல கலந்துக்குவோமா வாண்டு?

வாண்டு: நிச்சயமா. சரி பாண்டு, நான் டியூஷன் போகணும். அப்போ வரட்டுமா?

பாண்டு: எனக்கும் டியூஷனுக்கு டைம் ஆகிடுச்சு. நானும் வரேன். டாடா வாண்டு

வாண்டு: டாடா... பைபை...

- ராபின்





ராபினின் ஓவியம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x