Last Updated : 21 Oct, 2015 01:14 PM

 

Published : 21 Oct 2015 01:14 PM
Last Updated : 21 Oct 2015 01:14 PM

பசுமைப் பள்ளி- 6: அன்பே ஓங்கில்

முன்பனிக் காலம். தாழைப் புதர்கள் அடர்ந்த கடற்கரையோரமாக, பசுமைப் பள்ளியின் குழந்தைகள் நடந்து சென்றார்கள். கடல் ஆலாக்கள் தாழப் பறந்துகொண்டிருந்தன. ஒவ்வோர் அலையும் குழந்தைகளின் காலடிகளை ஆர்வத்தோடு முத்தமிட்டன. பிஞ்சுப் பாதங்களைத் தொட்ட மகிழ்ச்சியில் மீண்டும் கடல் திரும்பின.

“டால்பின்… டால்பின்… “ என்று கத்தினான் கவின்.

கடலில் டால்பின்கள் வரிசையாகத் தாவித் தாவிச் சென்றன. குழந்தைகளைக் கவனித்துவிட்ட ஒரு டால்பின், கரையை நோக்கி நெருங்கி வந்தது. சற்று தொலைவிலேயே நின்று கவினை அழைத்தது.

“நீதானே என்னை டால்பின் என்று அழைத்தாய்?”

“ஆமாம், ஆமாம்” என்று குதூகலமானான் கவின்.

“என்னுடைய தமிழ்ப் பெயர் ‘ஓங்கில்’. இனி அந்தப் பெயரிலேயே என்னைக் கூப்பிடு”

“சரி, ஓங்கில்”, மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர் குழந்தைகள்.

கவின் சொன்னான்: “உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஓங்கில். ஒருமுறை கடலில் மூழ்கிய ஒரு குழந்தையை ஓங்கில் ஒன்று காப்பாற்றியச் செய்தியைப் படித்தோம். எங்கள் மேல்தான் உங்களுக்கு எவ்வளவு அன்பு”.

“கடலில் யார் விழுந்தாலும் நாங்கள் காப்பாற்றியிருக்கிறோம். காப்பாற்றுவது மட்டுமல்ல. அவர்களை சுறாக்கள் தாக்காதவாறு, அவற்றை விரட்டியும் விடுவோம்”.

“கடலில் யாராவது விழுந்தால், நீங்கள் எப்படி தெரிந்துக்கொள்கிறீர்கள்?”

“அது இயற்கை எங்களுக்கு அளித்த கொடை. எங்கள் உடலிலிருந்து வெளிவரும் பயோ-சோனார் (ஒரு வகை மீயொலி) ஒலியால் ஆபத்தில் சிக்கி இருப்பவர்களை தெரிந்துக்கொள்கிறோம். பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்புகளைக்கூட எங்களால் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். காப்பாற்ற, உடனே அங்கே சென்றுவிடுவோம்”.

“எங்கள் மேல்தான் உங்களுக்கு எவ்வளவு அன்பு”.

“ஆனால், மனிதர்கள் பலருக்கு எங்கள் மேல் அன்பே இல்லை. வேட்டையாடி எங்கள் இனத்தையே அழிக்கின்றனர். என்றாலும், தமிழக மீனவர்கள் எங்களை ‘குட்டியாண்டவர்’ எனக் கும்பிடுகின்றனர். அந்த வகையில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்”.

இப்போது ஓங்கில் கூட்டத்திடமிருந்து ஒரு சீழ்க்கை ஒலி கேட்டது. “சரி, குழந்தைகளே, என் குழுவினர் என் பெயரைச் சொல்லி அழைக்கின்றனர். நான் வரட்டுமா?”

“உனக்குப் பெயர் உண்டா ஓங்கில்?”

“மனிதர்களைப் போல் எங்களுக்கும் தனித்தனிப் பெயர் உண்டு. எங்களுக்குரிய சீழ்க்கை ஒலிமூலம் அந்தப் பெயர்மூலம் அழைத்துக்கொள்வோம்.”

“ஆமாம், இதை எங்கள் அறிவியலாளர்களும் இப்போது கண்டு பிடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நீங்கள்தான் மனிதருக்கு அடுத்து அறிவுள்ள உயிரினம் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.”

ஓங்கில் சிரித்தது, “எதையும் தாமதமாகக் கண்டுப்பிடிப்பதே உங்களுக்கு வேலை. சரி, வரட்டுமா?”

ஓங்கில் விரைந்து நீந்தி, தன் கூட்டத்தோடு இணைந்துகொண்டது. அத்தனை ஒங்கில்களும் தாவித்தாவி சென்றது, அவ்வளவு அழகாக இருந்தது.

அறிவில் வேண்டுமானால் ஓங்கில்கள் மனிதருக்கு அடுத்த நிலையில் இருக்கலாம். ஆனால், அன்பில் என்றும் அவற்றுக்கே முதலிடம்! ஏனென்றால் விபத்தில் சிக்கிய மனிதரைக் காப்பாற்ற, எல்லா மனிதர்களும் முன்வருவதில்லையே!

பாலூட்டியான ஓங்கிலுக்கு ஐந்தறிவு என்கிறார்கள். உண்மையில் ஐந்தறிவு மனிதர்களுக்கா? அல்லது அன்பான ஓங்கில்களுக்கா?

(அடுத்த புதன்கிழமை: நாட்டுமிராண்டிகள்)

கட்டுரையாளர், குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்

தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x