Last Updated : 24 Feb, 2016 02:22 PM

 

Published : 24 Feb 2016 02:22 PM
Last Updated : 24 Feb 2016 02:22 PM

தேசிய அறிவியல் நாள்: பிப் 28 - ராமன் கண்ட நீல வானம்

தேசிய அறிவியல் நாள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எதற்காக இந்தத் தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அதனால்தான் அன்றைக்கு தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு 1986-ம் ஆண்டு இந்தத் தினத்தை அறிவித்தது. அறி வியலைப் பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதும் இந்த நாளில் வழங்கப்பட்டு வருகிறது.

யார் இந்த ராமன்?

சர் சி.வி. ராமனின் முழுப் பெயர் சந்திரசேகர வெங்கட்ராமன். திருச்சிக்கு அருகே உள்ள திருவானைக்காவலில் 1888-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி பிறந்தார். இளம் வயதிலேயே அறிவுக்கூர்மையுடன் இருந்தார் ராமன். அவருக்கு 11 வயது ஆனபோது பள்ளிப் படிப்பை முடித்தார். 15-வது வயதில் சென்னை மாநிலக் கல்லூரியல் இயற்பியல் மற்றும் பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை முடித்து மாநிலத்தில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். தொடர்ந்து அதே கல்லூரியில் 19 வயது முடியும் முன்பே முதுகலைப் பட்டத்தையும் முடித்து மாநிலத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

இதன் பிறகு கொல்கத்தாவில் உதவி அக்கவுன்டன்ட் ஜெனரலாக ராமன் வேலைக்குச் சேர்ந்தார்.10 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த ராமனுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசியராக வேலை கிடைத்தது. அப்போது ஓய்வு நேரங்களில் அறிவியல் வளர்ச்சிக்காகப் பரிசோதனைக் கூடங்களில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவந்தார். ஒளிச்சிதறல் மற்றும் ஒலியியல் பற்றிய முக்கியமான ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன.

அதன் தொடர்ச்சியாக 1924-ம் ஆண்டு லண்டன் ராயல் அமைப்பின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது மட்டுமன்றி 1929-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு பிரிட்டிஷ் பேரரசின் வீரர் (Knight of the British Empire ) என்ற பட்டத்தை அளித்து கவுரவித்தது. இப்பட்டத்தை பெற்றதால்தான், அவர் சர் சி.வி.ராமன் என்று அழைக்கப்படுகிறார். 1930-ல் அவருக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது.

ராமன் விளைவு

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு ராமன் கப்பல் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது இயற்கை மீதிருந்த ஆர்வம் காரணமாக வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். தான் பார்த்த மத்திய தரைக் கடல் பகுதியின் வானம் ஏன் அவ்வளவு நீல நிறமாக காட்சியளிக்கிறது என்று சிந்தித்தார். இந்தக் கேள்வி அவருடைய மனதில் ஆழப் பதிந்தது. இதற்காகப் பின்னாளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒளி ஊடுருவக்கூடிய ஊடகம் திடப்பொருளாகவோ, திரவப்பொருளாகவோ அல்லது வாயுப்பொருளாகவோ இருக்கலாம். அந்த ஊடகங்களில் ஒளி செல்லும்போது அதன் இயல்பில் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்' (molecular scattering light ) ஏற்படுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். இந்த சிறப்பான ஆய்வுக்குத்தான் அவருக்கு நோபல் பரிசுக் கிடைத்தது.

அவர் தன்னுடைய ஆய்வின்போது வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவியை (spectrograph) பயன்படுத்தினார். சூரிய ஒளியை பல்வேறு ஊடகங்களின் வழியே செலுத்துவதன் மூலம், நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்' தோன்றுவதை அவர் கண்டார். அவை ‘ராமன் வரிகள்' என்றும், அவருடைய கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு' (Raman effect ) என்றும் பின்னாளில் அழைக்கப்படத் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x