Published : 16 Nov 2016 11:05 AM
Last Updated : 16 Nov 2016 11:05 AM

காரணம் ஆயிரம் 09: ஆழ்கடலில் ஓர் அதிசய டாக்டர்!

நமக்கெல்லாம் உடம்பு சரியல்லாமல் போனால் எங்கே போவோம்? ஆட்டோவைப் பிடித்து டாக்டரைப் போய்ப் பார்த்துவிடுவோம் இல்லையா? சரி, விலங்குகளுக்கு

உடம்பு சரியில்லாமல் போனால் என்ன செய்யும்? அதற்குத்தான் ‘வெர்ட்டினரி டாக்டர்’ இருக்காரே என்று நீங்கள் சொல்லலாம். ‘வெர்ட்டினரி டாக்டர் வீட்டு விலங்குகளுக்கு மருத்துவம் பார்ப்பவர்.

ஆனால், கடலில் வாழும் உயிரினங்களுக்கு உடம்பு முடியாமல் போனால் யார் வைத்தியம் பார்ப்பது? அங்கும் சிகிச்சைக்குக் கவலையில்லை. இதற்காகவே ஆழ்கடலுக்குள் சில மீன்கள் ‘கிளினிக் ஸ்டேஷன்’களைத் திறந்து வைத்துக்கொண்டு வைத்தியம் பார்க்கின்றன.

வீட்டு விலங்குகளுக்கு நோய் எப்படி வருகிறது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். விஷப் பூச்சிகள், அட்டைப் பூச்சிகள், ஒட்டுண்ணிப் பூச்சிகள் (உண்ணிப் பூச்சிகள்) கடிப்பதால் விலங்குகள் அதிகம் பாதிக்கப்படும். மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்துவிட்டுத் திரும்பும் ஆடு, மாடுகள் மீது அட்டைப் பூச்சிகள், உண்ணிப் பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப் பாதிப்புகளுக்குக் கோழி, காகம், கொக்கு போன்ற பறவைகள்தான் வைத்தியம் பார்க்கும் டாக்டர். கால்நடைகளைக் கடித்துக்கொண்டிருக்கும் உண்ணிப் பூச்சிகளை இவை கொத்தித் தின்றுவிடும்.

இதுபோலவே ஆழ்கடலில் வாழும் பூச்சிகளால் மீன்கள் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போவதுண்டு. சிறு சிறு பூச்சிகள் பெரிய மீன்களின் உடலைக் கடித்து ஒட்டிக்கொள்ளும். இந்த மாதிரியான பூச்சிகள் பெரிய மீன்களின் வாய் உதடு, தொண்டை, தாடை போன்ற இடங்களில் கடித்துக்கொண்டு பெரிய மீன்களுக்குத் தொந்தரவைத் தரும்.

பெரிய மீன்களுக்கு ஏற்படும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சுத்தம் செய்யும் மீன்கள் (Cleaner Fish) இருக்கின்றன. பெரிய மீன்களைக் கடித்துத் துன்புறுத்திப் பாதிப்புகளை ஏற்படுத்தும் பூச்சிகளை இந்த கிளீனர் மீன்கள் கடித்துச் சாப்பிட்டுவிடும்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட மீன்களைத் தேடி டாக்டர் மீன்கள் (கிளீனர் ஃபிஷ்) செல்வதில்லை. மாறாகப் பாதிக்கப்பட்ட பெரிய மீன்கள்தான் பாதிப்பைச் சரி செய்துகொள்ள டாக்டர் மீன்களைத் தேடிச் செல்கின்றன (நோயாளிகள்தானே டாக்டரைத் தேடிப் போக வேண்டும்). டாக்டர் மீன்களின் அருகில் வந்து தங்களுக்கு வைத்தியம் பார்க்கச் சொல்லும் விதமாக, வித்தியாசமான ஒலி எழுப்பி, அவை சுற்றிச் சுற்றி வரும். கிளீனர் மீன்கள் வாழும் இடங்களில் நோயாளி மீன்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றி வருவதை ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் பார்த்து உறுதிசெய்திருக்கிறார்கள்.

சம்பந்தமே இல்லாத ஓர் இடத்தில் பெரிய பெரிய மீன்கள் சுற்றிவந்தால், அங்கு டாக்டர் மீன் இருக்கிறார் என்று அர்த்தம். கூட்டம் கூட்டமாக அடித்துப் பிடித்து நீந்தி வந்து, இந்தப் பெரிய மீன்கள் சிறிய மீன்களிடம் மருத்துவம் பார்க்கச் சொல்லி ஒலியால் சமிக்ஞை கொடுக்கும். இறால்கள்கூட (Shrimp) இப்படி மருத்துவப் பணிகளைச் செய்வதுண்டு.

இறால் போன்ற சிறிய ரக மீன்கள், பெரிய மீன்களின் வாய்க்குள் சென்று அங்கே இருக்கும் நீர்வாழ் பூச்சிகளைச் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துவிடும். அதுவரை பெரிய மீன்கள் வாயைத் திறந்தே வைத்திருக்கும். இதில் சிலிர்ப்பான உண்மை என்னவென்றால், பெரிய வகை மீன்கள் சிறிய வகை மீன்களைத்தான் உணவாகச் சாப்பிடும். ஆனால், மருத்துவம் பார்க்கும்போது மட்டும் வாய்க்குள் சென்றால்கூட அவை சிறிய மீன்களைச் சாப்பிடுவதில்லை. இரு மீன்களும் சமிக்ஞைகள் செய்து இப்படி நடந்துகொள்கின்றன. எவ்வளவு பெரிய புரிந்துணர்வு?

பெரிய மீன்களுக்குச் சிறிய மீன்கள் பார்க்கும் வைத்தியம் அற்புதம் இல்லையா குழந்தைகளே!?

(காரணங்களை அலசுவோம்)

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x