Last Updated : 07 Jun, 2017 10:00 AM

 

Published : 07 Jun 2017 10:00 AM
Last Updated : 07 Jun 2017 10:00 AM

எப்படியிருந்தது அந்தக் காலப் பள்ளிக்கூடம்?

இன்றைக்கு மழைக்கும் வெயிலுக்கும் தாக்குப்பிடிக்கிற, இடிந்து விழுந்துவிடாத பள்ளிகளில் நீங்கள் படிக்கிறீர்கள். உங்கள் தாத்தா, பாட்டி; அவர்களின் அம்மா, அப்பா எங்கே படித்திருப்பார்கள்? அவர்கள் படித்த பள்ளி எப்படி இருந்திருக்கும்?

தமிழகத்தில் ஓரளவுக்குப் பரவலான கல்வியை சாத்தியப்படுத்திய இரண்டு இடங்கள் சமணப் பள்ளிகளும் திண்ணைப் பள்ளிகளும்தான். பல்லவர் காலத்தில் தமிழகத்தில் சமண மதத் தாக்கம் அதிகமாக இருந்தது. தமிழகமெங்கும் பரவலாக சமணத் துறவிகள் வாழ்ந்துவந்தனர். இயற்கையைச் சிதைக்காமல் வாழ வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட அவர்கள், ஓய்வு எடுப்பதற்கு பாறைக் குன்றுகளில் கல்லில் படுக்கைகளை வெட்டி வைத்திருந்தனர். பள்ளிகொள்ளும் அந்த இடம் பள்ளி எனப்பட்டது.

அந்த இடங்களில் மாணவர்களுக்கு கல்வியும் போதித்தனர். இந்தப் பள்ளிகளில் ஆரம்பத்தில் சமயக் கருத்துகளும், பின்னர் அறநெறிகளும் போதிக்கப்பட்டன. எழுத்தறிவும் இந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டது. அதனால்தான் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் இடம் பள்ளி என்று பின்னாளில் பெயர் வந்தது.

சமணர்களின் பள்ளி

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சி மாநகரில் உள்ள மலைக்கோட்டை, சிரா என்ற சமண முனிவர் வாழ்ந்த பள்ளிதான். அவருடைய பெயராலேயே திருச்சிராப்பள்ளி என்று அந்த ஊர் அழைக்கப்படுகிறது. அதேபோல தென் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமணக் குன்றான கழுகு மலையில் பயிற்றுவித்த சமண ஆசிரியர்கள் பற்றியும், பயின்ற மாணவர்கள் பற்றியும் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.

சமண, பௌத்த மதங்கள் கல்வியை கற்றுத்தர ஆரம்பித்ததைப் பார்த்தே மற்ற மதங்களும் கல்வியைப் போதிக்கும் பணியை பின்னர் மேற்கொள்ள ஆரம்பித்தன.

அனைவருக்கும் கல்வி

இந்தப் பள்ளிகள் சாதிகளைக் கடந்து அனைவருக்கும் கல்வி கற்றுத்தர முயற்சித்தன. பெண்களைச் சமமாகக் கருதிக் கல்வி கற்பிக்க சமண மதம் ஊக்கம் அளித்தது.

வந்தவாசி அருகேயுள்ள விடால் எனும் ஊரில் (தற்போது வேடல் எனப்படும் பகுதியில் உள்ள குன்றில் ஆண்டார் மடம்) இருந்த சமணப் பள்ளியில் பெண் துறவிகளும் பெண் குழந்தைகளுக்கு கல்வி போதித்துள்ளனர்.

இப்படி மலைக்குன்றுகளில் செயல்பட்டுவந்த சமணப் பள்ளிகள், பிற்காலத்தில் சமண மதம் செல்வாக்கு இழந்ததால் மறைந்து போயின. அதேநேரம் ஓரளவுக்குப் பரவலான கல்வியை அளிக்கும் பணியைத் திண்ணைப் பள்ளிகள் பிற்காலத்தில் மேற்கொண்டன.

வீட்டுப் பள்ளிகள்

திண்ணைப் பள்ளிகளுக்கு தினசரி நேர வரையறை கிடையாது. ஆண்டின் எந்தக் காலத்திலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். ஆண் மாணவர்களே இந்தப் பள்ளிகளில் படித்தார்கள்.

மதராஸ் மாகாணத்தில் 1822-ல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திண்ணைப் பள்ளிகள் இருந்ததாக அப்போது மாகாண ஆளுநராக இருந்த தாமஸ் மன்ரோ காலத்தைய கணக்கெடுப்பு கூறுகிறது. அந்தக் காலத்தில் சென்னை மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு பள்ளி இருந்ததாகத் தெரிகிறது. இந்த திண்ணைப் பள்ளிகளிலேயே மாணவர்கள் பரவலாகப் படித்தனர்.

இந்தக் காலத்தில்தான் ஆங்கிலேய அரசு தற்போது புழக்கத்தில் உள்ள ‘பள்ளி’ என்ற மேலைநாட்டுச் சிந்தனையைத் தமிழகத்தில் புகுத்தியது. அதன் பிறகே கிறிஸ்தவ மிஷனரிகள், அரசு சார்பில் தற்போதுள்ள முறையில் பள்ளிகள் அறிமுகமாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x