Published : 21 Aug 2014 12:00 AM
Last Updated : 21 Aug 2014 12:00 AM

வெலிங்டன் கன்டோண்மென்ட் தமிழ் வழி பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

குன்னூர் அருகே வெலிங்டன் கன்டோண்மென்ட் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள், வேறு பள்ளியின்கீழ் தேர்வு எழுதுவதால் நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளனர்.

வெலிங்டன் கன்டோண்மென்ட் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தமிழ் வழிப் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாததால், 10-ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளியின்கீழ் தேர்வு எழுதி வருகின்றனர்.

இதுதொடர்பாக ‘தி இந்து உங்கள் குரல்’ பகுதிக்கு அப்பகுதியைச் சேர்ந்த வாசகர் டிசோசா என்பவர் தொடர்பு கொண்டு பேசியது: தமிழகத்தில் 2851 அரசு உதவி பெறும் பள்ளிகள், 2731 உயர்நிலைப் பள்ளிகள், 2253 ஓராசிரியர் பள்ளிகளும், ஆசிரியர்கள் இல்லாமல் சத்துணவு அமைப்பாளர்கள் நிர்வகிக்கும் 16 பள்ளிகளும் உள்ளன. இந்நிலையில், ஓராசிரியர் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால், குன்னூர் அருகே வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியத்துக்கு உட்பட்ட தமிழ் வழிப் பள்ளிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சின்ன வண்டிசோலையில் இயங்கும் ஆங்கில வழிப் பள்ளியில் 380 மாணவர்களும், தமிழ் வழிப் பள்ளியில் 284 மாணவர்களும் படிக்கின்றனர்.

ஆங்கில வழிப் பள்ளியில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், புதிய வகுப்பறைகள் கட்ட பெற்றோர், வாரிய உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, ரூ.1.5 கோடி ஒதுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதனால், கடும் நெருக்கடியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் வழிப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள், பிற பள்ளி மாணவர்களுடன் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. உயர்நிலைப் பள்ளியாக அங்கீகரிக்கப்படாததால், கடந்த ஆண்டு எல்லநள்ளி பள்ளியின்கீழ் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த ஆண்டும் இப்பள்ளியின்கீழ் தான் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

தமிழ் வழிப் பள்ளியை நடுநிலையில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கல்வித் துறையிடம் கன்டோண்மென்ட் நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு தொடக்கப் பள்ளியை தனி வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், பள்ளியின் பரப்பு 54 சென்டாக இருக்க வேண்டும் என்றும், இந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்றும் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதுதொடர்பாக கன்டோண்மென்ட் வாரிய துணைத் தலைவர் வினோத்குமார் கூறியது:

ஆங்கில வழிப் பள்ளி 105 ஆண்டுகள் பழமையானது. இதற்கான அங்கீகாரம் 1926-ம் ஆண்டு பெறப்பட்டுள்ளது. பள்ளியை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டுப்பட்டு வருகின்றன.

தமிழ் வழிப் பள்ளியின் பரப்பு 51 சென்ட்டாக உள்ளதால், இதே வளாகத்தில் இயங்கி வந்த தொடக்கப் பள்ளி, கன்டோண்மென்ட் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மைதானத்துடன் சேர்த்து பள்ளியின் பரப்பு 1.20 ஏக்கராக உள்ளதால், கல்வித் துறை விதித்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றார்.

குன்னூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் லிங்கராஜ் கூறியது:

கன்டோண்மென்ட் பள்ளிக்கு அங்கீகாரம் கேட்டு வாரிய நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. அதன்படி, பள்ளியை ஆய்வு செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அங்கீ காரத்துக்காக முதல் முறையாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதால், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தான் அங்கீகாரம் வழங்குவார் என்றார்.

அங்கீகாரத்துக்கான ஆய்வு முடிந்துள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் இப்பள்ளிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x