Last Updated : 23 Jul, 2014 10:40 AM

 

Published : 23 Jul 2014 10:40 AM
Last Updated : 23 Jul 2014 10:40 AM

ஜப்பான் செல்லும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்: கிழக்காசிய இளைஞர் விழாவில் பங்கேற்பு

படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களில் மாவட்டத்துக்கு இருவரை தேர்வு செய்து ஜப்பானில் நடைபெறும் கிழக்காசிய மாணவர் மற்றும் இளைஞர் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்த ஆண்டுக்கான கிழக்காசிய மாணவர் மற்றும் இளைஞர் நிகழ்ச்சி (Jenesys) விரைவில் ஜப்பானில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளில் மாவட்டத்துக்கு தலா ஒரு மாணவர், மாணவி வீதம் 32 மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் 64 பேரைத் தேர்வு செய்து ஜப்பான் அனுப்ப கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகளும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச பயிற்சியாளர்களைக் கொண்டு சிறந்த பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகள் அரசு செலவிலேயே ஜப்பான் அழைத்துச் செல்லப்படுவர்.

இதற்காக படிப்பு மற்றும் விளையாட்டில் பங்கேற்றுள்ள தகுதிபெற்ற ஒரு மாணவரையும், ஒரு மாணவியையும் தேர்வுசெய்து அவர்களது விவரங்களை அனுப்பி வைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

கையுந்து பந்து, கால்பந்து

கையுந்து பந்து (Volleyball), கால்பந்து (Football) ஆகிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளில் மாவட்டத்துக்கு தலா ஒருவரை தேர்வு செய்யவும், தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் ஏற்கெனவே பாஸ்போர்ட் பெற்றவர்களாக இருப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெளிநாடு சென்றவர்களை தேர்வு செய்யக் கூடாது என்றும் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கான விசா படிவம் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான நுழைவு படிவம் www.mhrd.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட் டுள்ளது.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் மூலம் இப்படிவங்களை தெளிவாக பூர்த்திசெய்து, பள்ளிக் கல்வி இயக்ககத்தில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநரிடம் இம்மாதம் 25-ம் தேதியன்று நேரில் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x