Published : 30 Oct 2014 02:13 PM
Last Updated : 30 Oct 2014 02:13 PM

கருப்பு பணம் என்றால் என்ன?

வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு, பணப் பரிவர்த்தனை மூலமே நடைபெறுகிறது. ஆண்டுக்கு சுமார் 62 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு மளிகைப் பொருட்கள் வாங்கு கிறோம். அதற்குப் பதிலாகப் பணம் கொடுக் கிறோம். அதற்குப் பெரும்பாலும் ரசீது இல்லை. அந்தப் பணம் கருப்பு பணமாக மாறுகிறது. இதுதவிர ரியல் எஸ்டேட், உற்பத்தி பொருட்கள், தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கு வதில் ஏராளமான கருப்பு பணம் புழங்குவதாகக் கூறப்படுகிறது. கருப்பு பணம் எப்படி கை மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.

ரசீது இல்லாமல் புழங்கும் கருப்பு பணம்

ஒரு நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கான பொருட்களை இன்னொரு நிறுவனத்துக்குச் சப்ளை செய்கிறது. ஆனால், அதற்குரிய ரசீதை வழங்க வில்லை. அதன்பிறகு சப்ளை செய்த பொருட்களின் மதிப்பில் ரூ.60 ஆயிரத்துக்கு மட்டும் ரசீது வழங்குகிறது.

பொருட்களை வாங்கிய நிறுவனம், ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறது. ரூ.20 ஆயிரத்தை வரியாகக் கழித்து விடுகிறது.

ஒரு மாதம் கழித்து, மீதித் தொகை ரூ.40 ஆயிரம், பொருட்கள் சப்ளை செய்த நிறுவனத்துக்கு பணமாகக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் கணக்கிலேயே வராது. இதுதான் கருப்பு பணம்.

தனியார் நிறுவனங்களில் முதலீடு

ஒரு நிறுவனத்துக்கு ஒருவர் ரூ.10 கோடி கடனை பணமாகக் கொடுக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட நிறுவனம், தனது விற்பனையாளர்களுக்கு பணமாக முதலீடு செய்கிறது. கடைசியில் அந்த நிறுவனம் நுகர்வோர்களிடம் இருந்து காசோலையாகப் பணத்தைத் திரும்பப் பெறுகிறது. அதன்பின், 10 கோடி ரூபாய் கடனாக வழங்கியவர், பணத்துக்குப் பதில் நிறுவனத்திடமிருந்து பங்குகளாக வாங்கிக் கொள்கிறார்.

ரியல் எஸ்டேட்

ஒருவர் தன்னுடைய நிலத்தை ரூ.20 கோடிக்கு இன்னொருவருக்கு விற்கிறார். அதில் 50 சதவீதத் தொகையை (ரூ.10 கோடியை மட்டும்) பணமாகப் பெற்றுக் கொள்கிறார். மீதி 50 சதவீதத் தொகையை காசோலையாகப் பெறுகிறார். ரூ.10 கோடிக்கான காசோலையை வங்கியில் செலுத்தி, ஒரு பெருந் தொகையை பணமாக எடுத்துக் கொள்கிறார். மீதியை தங்கம் வர்த்தகம் செய்வதற்காக வங்கியில் இருந்து டிமாண்ட் டிராப்டாக பெற்றுக் கொள்கிறார்.

இந்த விஷயத்தில் முதலில் பணமாகப் பெற்ற ரூ.10 கோடி அரசுக்கு கணக்குக் காட்டப்படாமல் போகும். அது கருப்பு பணமாக மாறி விடும். இப்படி பல வழிகளில் அரசுக்குக் கணக்குக் காட்டாமல், வரியைத் தவிர்க்க சேர்க்கப்படும் பணம்தான் கருப்பு பணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x