Published : 22 Dec 2014 10:44 AM
Last Updated : 22 Dec 2014 10:44 AM

ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா: ஸ்ரீரங்கம் அருகே கட்டுமானப் பணிகள் தீவிரம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே 25 ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ ரூ.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் வண்ணத்துப்பூச்சி பூங்காவை வரும் பிப்ரவரி மாதத்தில் திறக்க திட்டமிடப்பட்டு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மனிதனின் உணவுப்பொருட் களில் தாவரங்களின் பங்கு முக்கி யமானது. தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பல்வேறு பூச்சி இனங்கள் உதவி புரிந்தாலும், இதில் வண்ணத்துப்பூச்சிக்கு முக்கியமான பங்குண்டு.

பெருகிவரும் நகரமயமாதல் காரணமாக வனப்பகுதிகள் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் அழிந்துவரும் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்கவும், அதன் இனத்தைப் பெருக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும், வண்ணத்துப் பூச்சி களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். அந்தவகையில் வண்ணத்துப் பூச்சிகளைப் பாதுகாக்க ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான வண்ணத்துப்பூச்சி பூங்காவை ஸ்ரீரங்கம் பகுதியில் அமைக்க 2012-ம் ஆண்டு மே மாதம் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, இங்கு பூங்கா அமைக்கும் பணிகள் 2013 ஜனவரியில் தொடங்கப்பட்டது.

பூங்காவின் சிறப்பம்சம் முட்டையிடுதல், புழு வளருதல், தேன் குடித்தல் ஆகிய தனது வாழ்க்கைச் சக்கரத்துக்காக வண்ணத்துப்பூச்சிகள் ஒவ்வொரு தாவரத்தையும் தேர்வுசெய்யும். இதற்கென இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, புலும்பாகோ, கோபி, அஸ்காப்பியா உள்ளிட்ட நூற்றுக் கணக்கான தாவரங்கள் பிற மாவட் டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப் பட்டுள்ளன. பூங்காவைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை முறைகள் குறித்து பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு திரையரங்கு, செயற்கைப் புல்வெளிகள், குழந்தைகள் விளையாட தனியிடம், மலைவாழ் மக்கள் வசிக்கும் மாதிரி குடிசை, செயற்கை நீரூற்று, பார்வையாளர் கள் சுற்றி வருவதற்கான சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு நடைபாதை ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகின்றன.

பொதுப்பணித்துறை சார்பில் ஏறத்தாழ ஒரு ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சிகளின் உற்பத் தியைப் பெருக்குவதற்கான நவீன வசதிகள் கொண்ட உள் அரங்கு கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதுதவிர நட்சத்திர வனம், பல்வேறு நீர் தாவரங்கள் கொண்ட குட்டைகள், சிறு மரப்பாலங்கள், பிரம்மாண்டமான அளவுகளில் வண்ணத்துப்பூச்சிகளின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வண்ணத்துப்பூச்சிகளுக்கு பல்வேறு இடங்களில் உள் அரங்குகள் அல்லது திறந்தவெளிப் பூங்காக்கள் தனித்தனியாக உள்ளன. ஆனால், இங்குதான் மிகப்பெரிய அளவில் உள் அரங்கு மற்றும் திறந்தவெளிப் பூங்கா ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் வனத்துறையினர்.

இந்த பூங்காவை வரும் பிப்ரவரியில் திறக்கும் வகையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பூங்கா, சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் மிகச்சிறந்த பொழுதுபோக்குத் தலமாகவும் இருக்கும் என்பதில் சந்தேக மில்லை.

காவிரியின் குறுக்கே பாலம், ரோப் கார்

இந்த பூங்கா காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. எதிர்கரையில் திருச்சி- கரூர் சாலை உள்ளது. அந்த சாலையிலிருந்து இந்த பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் அல்லது ரோப் கார் அமைத்தால் முக்கொம்பு சுற்றுலாத் தலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவுக்கும் வர ஏதுவாகும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x