Published : 02 Oct 2017 07:36 AM
Last Updated : 02 Oct 2017 07:36 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே 16! - நோய் வருமுன் காக்கும் யோகா

குடும்பங்களை நிலைநிறுத்த ஆண்கள் செய்யும் பணிகளே பெரும்பாலும் அதிகம் வெளியில் தெரிகின்றன. வெளிப்படையாகத் தெரியாமல் குடும்பங்களை தாங்கிப் பிடிக்கும் கடமையில் பெண்களே அதிகம் சிரமப்படுகின்றனர். ஒரு பக்கம் குடும்ப நிர்வாகம், குழந்தைகள் வளர்ப்பு, மறுபக்கம் வேலைக்குச் செல் லும் பெண்களுக்கு அலுவலகப் பணியில் ஏற்படும் வேலைப்பளு, மன அழுத்தம் என இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளம்போலவே அமைந்துள்ளது பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை.

இளமையில் வேக வேகமாக ஓட்டமெடுக்கிறது வாழ்க்கை. ஆனால், 40 வயதைக் கடக்கும்போது, சோர்வும், எரிச்சலும், ஏக்கமும் தானாக வந்து சேர்ந்துவிடுகிறது. உடலின் இயக்கங்களில் ஏற்படும் சிறு இடர்ப்பாடுகள்கூட பெரும் வலி, வேதனையைத் தருகின்றன. மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆகும் ஏராளமான பொருளாதாரச் செலவுகளும் இந்த சோகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.

வருமுன் காப்போம்.. வந்த பின்பு விரட்டுவோம். பொதுவாக வருமுன் காப்போம் என்பதே புத்திசாலித்தனம். சிறு வயது முதலே முறையாக யோகா செய்துவந்தால் உடல் சிக்கென்று இருப்பதுடன் எந்த நோய் நொடிகளும் அருகில் வராது. எனவே, 40 வயதைக் கடந்த பெண்கள், மெனோபாஸ் உள்ளிட்ட சிக்கல்களைக் கண்டு இனி வருந்த வேண்டாம். நோயோ, உடற் சிக்கலோ வந்த பிறகும், அதை விரட்டும் ஆற்றல் யோகாவுக்கு உள்ளது. தொடர்ந்த பயிற்சி மட்டுமே இதற்குத் தேவை.

நடுத்தர வயது பெண்கள் சிலருக்கு மெனோபாஸ் நிலையில் அதிக உதிரப்போக்கு ஏற்படுவதையும் பச்சிமோத்தாசனம் செய்வதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

பச்சிமோத்தாசனம் செய்வது எப்படி?

நேராக சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொண்டு, கால்களை நீட்ட வேண்டும். சுவாசத்தை நன்றாக உள்ளே இழுத்தபடி, இரு கைகளையும் மேலே உயர்த்த வேண்டும். பிறகு, சுவாசத்தை வெளியே விட்டுக்கொண்டே பொறுமையாக குனிந்து இரு கைகளாலும் கால்களைத் தொட வேண்டும். கால்களைத் தொட்ட நிலையிலேயே, மூக்கை இரு முட்டிகளுக்கு அருகே கொண்டுவர வேண்டும். இந்த ஆசனத்தை செய்வதால் வயிறு மற்றும் அதைச் சுற்றியுள்ள கருப்பை, கருக்குழாய்களுக்கு நல்ல அழுத்தம் கொடுக்கப்பட்டு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் அதிக உதிரப்போக்கு மற்றும் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். தேவையின்றி, கருப்பையை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படாது.

யோகா பயிற்சிகள் செய்வதற்கு நடுத்தர வயது பெண்களிடம் ஒருவித தயக்கம் காணப்படுகிறது. ‘இந்த வயதில் இதெல்லாம் தேவையா?’ என்பதைப் போன்ற தயக்கத்தை பெண்களிடம் காண முடிகிறது. எந்த வயதிலும் பயிலக்கூடிய அற்புதமான வரம்தான் யோகா. தயக்கங்களை தூர தள்ளிவைத்துவிட்டு எளிய யோகாப் பயிற்சிகளில் இருந்து தொடங்குங்கள். யோகாவை நம் வழக்கமாக்கிக் கொண்டால், எந்த வயதிலும் நமது இளமையையும், உடல் ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்ளலாம். நம் ஆரோக்கி யம் நம் கையில்தான் உள்ளது.

யோகா, பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு இல்லையா? என்று பலரும் கேட்கிறார்கள். குழந்தைப் பருவம் முதல் எல்லோரும் யோகா செய்யலாம். பின்னர், வயதுக்கேற்ப பெண்கள் அவர்களுக்கான யோகப் பயிற்சிகளைச் செய்வார்கள். அதேபோல, உடல், மன அளவில் மாற்றத்தைச் சந்திக்கும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் பிரத்யேக யோகாப் பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை அடுத்து பார்க்கலாம்.

- யோகம் வரும்...

ழுத்தாக்கம்:ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x