Published : 23 Sep 2017 11:38 AM
Last Updated : 23 Sep 2017 11:38 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே!- 7: இடுப்பில் தங்கும் கொழுப்பை கரைப்போம்

நம் வாழ்க்கையில் அன்பு, காதல், வேதனை, வெறுப்பு, கோபம், இழப்பு என எது ஏற்பட்டாலும், அதை முதலில் நம் இதயத்துடன்தான் தொடர்புப்படுத்தி பேசுகிறோம். உணர்வுகளுக்கான உத்தரவுகள் மூளையில் இருந்து பிறப்பிக்கப்பட்டாலும், இதயத்தோடுதான் உணர்வுகளைத் தொடர்புப்படுத்துகிறோம். அப்படிப்பட்ட இதயம் கடும் உழைப்பாளி. நமது பிறப்பில் இருந்து கடைசி வரை ஓய்வில்லாமல் இயங்கும் உழைப்பாளி.

இதயம் இடைவிடாமல் துடிக்கவேண்டும் என்றால் அதற்கு உதவி செய்வது நுரையீரல். நுரையீரலும், இதயமும் சேர்ந்து சுத்தமான பிராணவாயுவை ரத்தத்தோடு உடம்பு முழுவதும் கொண்டு செல்வதற்காகத்தான் நாம் தொடர்ந்து சுவாசத்தை இழுத்து விடுகிறோம். யோகாசனங்களின் போது சுவாசத்தை சீராக இழுத்து விடுவது உடலுக்கு இன்னும் அதிக பலனைத் தருகிறது. உடலை வளைக்கக் கற்ற நாம், தற்போது சுவாசத் தோடு சேர்த்து யோகாப் பயிற்சிகளைச் செய்யப் போகிறோம்.

முதலில் கை, கால்களைத் தூக்கி இறக்கினோம். பின்னர், சுவாசத்தை இழுக்கும்போது கையை நன்றாக தூக்க வேண்டும். சுவாசத்தை விடும்போது கையை பொறுமையாக இறக்க வேண்டும். அதேபோல, சுவாசத்தை இழுக்கும்போது காலை நன்றாகத் தூக்க வேண்டும். சுவாசத்தை வெளிவிடும்போது காலை இறக்க வேண்டும். இந்தப் பயிற்சியை 5 முறை செய்ய வேண்டும் என்று பார்த்தோம்.

அடுத்ததாக, நம் கழுத்தில் இருந்து இடுப்பு வரையுள்ள பகுதிக்கான பயிற்சியைப் பார்க்க லாம்.

முதலில் இரு கைகளையும் மார்புக்கு அருகே வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் தொடக்க நிலை. அடுத்து, வலது பக்கம் நன்றாகத் திரும்பி, பிறகு தொடக்க நிலைக்கு வரவேண்டும். அதேபோல இடது பக்கம் நன்றாகத் திரும்பி, பிறகு தொடக்க நிலைக்கு வரவேண்டும். இதைத்தான் Twist என்கிறோம். அதாவது, உடலை வளைப்பது.

உடல் நன்கு வளைவதற்கு போதிய இடம் வேண்டும். தவிர, இரு கால்களையும் சேர்த்து வைத்தால், இடது பக்கமும், வலது பக்கமும் திரும்பும்போது சமநிலை கிடைக்காது. பேலன்ஸ் இல்லாமல் தவறி விழுந்துவிட நேரிடும். அதைத் தவிர்ப்பதற்காக, இரு கால்களையும் போதிய இடைவெளி விட்டு தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும்.

கரும்பலகை பொருத்தும் ஸ்டாண்ட், கேமரா ஸ்டேண்ட் போன்றவற்றைப் பார்த்திருப்பீர்கள். கீழ்ப்பக்கம் அகலமாகவும், மேலே போகப் போக குறுகலாகவும் இருக்கும். கீழ்ப்பக்கம் அகன்று இருந்தால்தான் சமநிலை கிடைக்கும். இதனால்தான், உடலை வளைக்கும் பயிற்சியின்போது கால்களை அகன்ற நிலையில் வைத்துக்கொள்கிறோம். இரு கால்களையும் அகலமாக வைத்துக்கொண்டு, கை, கால்கள், உடலை இடதுபக்கமும், வலது பக்கமும் மாறி மாறி நன்கு திருப்பி பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சியை 5-10 முறை செய்ய வேண்டும்.

6-வது பயிற்சியாக, சுவாசத்தை உள்ளிழுத்தபடியே, மெதுவாக இரு கைகளையும் உயர்த்தி காதுகளை ஒட்டியவாறு வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சுவாசத்தை விட்டபடியே, கைகளைப்ற பொறுமையாக இறக்க வேண்டும்.

7-வது பயிற்சியாக, நேராக நிமிர்ந்து நின்றபடி வலது கையை வலது காதை ஒட்டி மேலே கூரையை நோக்கி உயர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, உடலை இடது பக்கமாக வளைக்க வேண்டும். பிறகு, இதேபோல இடது கையை உயர்த்தி உடலை வலது பக்கமாக வளைக்க வேண்டும். இப்பயிற்சியின்போது, காலை ஒன்றரை அடி இடைவெளிவிட்டு அகலமாக வைத்துக்கொள்ள வேண்டும். சற்று உயரமாக இருப்பவர்கள் 2 அடி இடைவெளி விட்டு காலை அகலமாக வைத்துக் கொள்ளலாம்.

யார் செய்யக்கூடாது?

முதுகெலும்பில் இருந்து மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபடும் நேரத்தில், எழுந்தால், நின்றால், குனிந்தால் சிலருக்கு தலைசுற்றல் வரும். அதுபோல Vertigo எனப்படும் தலைசுற்றல் பிரச்சினை இருப்பவர்கள், CervicalSpondilysis எனப்படும் கழுத்து வலி பிரச்சினை இருப்பவர்கள், அதற்காக கழுத்தில் காலர் அணிபவர்கள் இப்பயிற்சியை செய்யக் கூடாது. மற்றபடி, சாதாரண உடல்நிலை உள்ளவர்கள், பருமனாக உள்ளவர்கள் அனைவரும் முறைப்படி தெரிந்துகொண்டு செய்யலாம். இடுப்பில் அதிக சதை உள்ளவர்கள் தின மும் காலை, மாலை இரு வேளை யும் 5-10 முறை செய்தால், தேவையற்ற இடுப்பு கொழுப்பு 3 மாதத்தில் கரைந்துவிடும்.

- யோகம் வரும்...

எழுத்தாக்கம்:

ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x