Published : 20 Feb 2014 04:44 PM
Last Updated : 20 Feb 2014 04:44 PM

மாநகராட்சியாக மாறியது திண்டுக்கல் நகராட்சி: வரலாற்றுச் சிறப்புமிக்க 149 ஆண்டு கால பழமையான நகராட்சி

திண்டுக்கல் நகராட்சி உருவாகி, 149 ஆண்டுகள் ஆன நிலையில் புதன்கிழமை முதல் மாநகராட்சியாக செயல்படத் தொடங்கியது. நகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

திண்டுக்கல் 1866 நவ. 1-ம் தேதி முதல் நகராட்சியாக செயல்படுகிறது. இந்த நகராட்சியை பிரிட்டிஷார் உருவாக்கினர். 1988-ம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது. மிகவும் பழமை வாய்ந்த இந்த நகராட்சி 149 ஆண்டுகளைக் கடந்து 150-ம் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறது.

இந்த நகராட்சி மொத்தம் 14.01 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. நகராட்சியின் தற்போது மக்கள் தொகை, 2,07,225 ஆகும். தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து தினசரி 7 லட்சம் பொதுமக்கள், சுற்றுலா, ஆன்மிக யாத்திரை, வேலைவாய்ப்பு மற்றும் வியாபார ரீதியாக திண்டுக்கல் நகருக்கு வந்து செல்கின்றனர்.

தொழிலுக்குப் பெயர்பெற்றது

திண்டுக்கல் நகராட்சிக்கு ஆண்டுக்கு பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ரூ.30 கோடி வருமானம் கிடைக்கிறது. பூட்டுத் தொழிலுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் நகரில், தற்போது விவசாயம், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், நூற்பாலைகள் பெருகி தொழிற்சாலையிலும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.

திண்டுக்கல் அருகே உலக பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மேற்குத் தொடர்ச்சி மலையில் சர்வதேச கோடை வாசஸ்தலமான கொடைக்கானல், கிழக்குத் தொடர்ச்சி மலையில் சிறுமலை ஆகிய முக்கிய சுற்றுலா தலங்கள், ஏராளமான ஆன்மிக திருக்கோயில்கள் உள்ளன. அதனால், தினசரி ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் திண்டுக்கல் வந்து செல்கின்றனர்.

சுற்றுலா, தொழிற்துறை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆன்மிக நகராக விளங்குவதால், திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

அரசாணை வெளியீடு

இதையடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 2013 ஏப்ரல் 10-ம் தேதி திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்தார். ஆனால், அரசாணை வெளியிடப்படாததால் திண்டுக்கல் தொடர்ந்து நகராட்சியாகவே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, திண்டுக்கல் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட அரசு ஆணையை, மேயராகப் பதவியேற்க உள்ள வி.மருதராஜ், ஆணையர் ராஜன் ஆகியோரிடம் வழங்கி புதிய மாநகராட்சியைத் தொடங்கி வைத்தார்.

அதேநேரத்தில் திண்டுக்கல் நகராட்சி, மாநகராட்சியாக செயல்படத் தொடங்கியதற்கு அடையாளமாக, நகராட்சி அலுவலகப் பலகை மாற்றப்பட்டு மாநகராட்சி அறிவிப்பு பலகையை ஊழியர்கள் வைத்தனர்.

மேலும், நகராட்சி ஊழியர்கள், அ.தி.மு.க. கவுன்சிலர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நகராட்சி மாநகராட்சியாக மாறியதற்கான வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஓரிரு நாளில், நகராட்சித் தலைவர் வி.மருதராஜ், முறைப்படி மாநகராட்சி அலுவலகத்தில் மேயராகப் பதவியேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x