Published : 30 Jul 2014 10:22 AM
Last Updated : 30 Jul 2014 10:22 AM

பிறர் பசியாறவே எங்களின் வாழ்நாள்..! - ரெங்கராஜ தேசிக அறக்கட்டளை அன்பர்களின் தொண்டுள்ளம்

“அன்னதான வண்டி வந்துருச்சு சீக்கிரமா வாங்க...” திருச்சி அரசு பொதுமருத்துவமனை எதிரே உள்ள சிறிய தெருவில், இப்படி குரல்கள் ஒலிப்பதை தினமும் காலை 6 மணிக்கும் மதியம் 12 மணிக்கும் கேட்கமுடியும்.

அன்னதான வாகனம்! ஆம், தினமும் காலையில் 300 நோயாளிகளுக்கு கஞ்சி, மதியம் சுடச்சுட 300 முதல் 400 பேருக்கு உணவு என 22 ஆண்டுகளாக தொடர்ந்து தொய்வின்றி வழங்கி வருகின்றனர் ரெங்கராஜ தேசிக அறக்கட்டளை அன்பர்கள். ஒரு மதிய வேளையில் மிகுந்த அக்கறையுடன் சாம்பார் சாதம் வழங்கி கொண்டிந்த அறக்கட்டளை நிர்வாகி ரவீந்திரகுமாரிடம் பேசியபோது:

சுடுதண்ணீருக்காக

இப்போதெல்லாம் அரசு மருத்து வமனைகளில் ஏராளமான வசதிகள் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் நோயாளிகளுக்கு கொடுக்க சூடான தண்ணீருக்காக, நோயாளிகளின் உறவினர்கள் டீக்கடைகளைத் தேடி அலைவர். இதைப் பார்த்த என் தந்தை கோவிந்தராஜ், மருத்து வமனை எதிரே இருக்கும் தெருவில் சூடான தண்ணீரை தினந்தோறும் இலவசமாக வழங்கி வந்தார்.

அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது. நோயாளிகளுக்கு எளிதில் செரிக்கும் உணவாக மருத்துவர் பரிந்துரைக்கும் கஞ்சி மட்டும் மருத்துவமனையை சுற்றி எந்த கடையிலும் கிடைக்கவில்லை என்று. அதையடுத்து சில அன்பர்கள் உதவியுடன் தினமும் காலை 6 மணிக்கு இஞ்சி, பூண்டு கலந்த அரிசிக் கஞ்சி வழங்க ஆரம்பித்தவர், அன்பர்கள் பலரின் ஆதரவு கிடைக்கவே மதிய உணவும் வழங்க ஆரம்பித்து விட்டார்.

அதிகாலை 3 மணிக்கு எழுந்து

அன்று அவர் ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது என்றவர், “ஆரம்பத்தில் தந்தைக்கு உதவியாக சென்ற நான் பசியில் வருபவர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் ஏற்படும் மனதிருப்தியால் ஈர்க்கப்பட்டு, தற்போது முழு நேரமாக இச்சேவையில் ஈடுபட்டுள்ளேன். கஞ்சி தயாரிக்க அதிகாலை 3 மணிக்கே எழுந்து விடுவேன். சமையலில் என் மனைவி உதவுகிறார்.

ஏழை எளியவர்கள், பெரும் பாலும் சிகிச்சைக்கு வரும் அரசு மருத்துவமனையில் ஒரு வாரம் முதல் 15 நாள் வரை நோயாளிகள் தங்குகின்றனர். இவர்களை பார்த்துக்கொள்ளும் உறவினர்கள் கையில் கொண்டு வரும் பணம் ஒருசில நாட்களில் காலியாகிவிடும் அப்புறம் எங்கள் அன்னதான வாகனத்தைப் பற்றி பயனடைந்தவர் சொல்லக் கேட்டு இங்கு வருபவர்கள் சிகிச்சை முடிந்து செல்லும் வரை அன்னதான வாகனத்தின் வருகைக் காக காத்திருப்பது வழக்கம்.

அழுகையே வந்துவிட்டது

ஒரு மனிதனின் பசியை மட்டும் போக்கி விட்டால் அவனுக்கு அடுத்து தவறான சிந்தனை ஏதும் தோன்றாது என்பது என் கருத்து. நல் உள்ளம் கொண்ட பலர் தங்களின் திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நோயாளிகளுக்கு கஞ்சி மற்றும் உணவு வழங்க உதவி செய்து எங்களுக்கு தோள் கொடுக்கின்றனர்.

பொருளாதார சிக்கலால் சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மதியம் உணவு வழங்க செல்லவில்லை. அடுத்தநாள் வழக்கம் போல் சாதம் எடுத்துச் சென்றபோது, உணவு வாங்க காத்திருந்த ஒருவர் ‘‘நேற்று நீங்கள் வராததால் சாப்பிடவில்லை, கையில் காசும் இல்லைங்க ஐயா” என்றார். இதைக் கேட்டு நான் அழுதுவிட்டேன்.

அன்றுமுதல் எப்பாடுபட்டாவது ஒரு மாதம் உணவு வழங்க தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்களை சேமிப்பாக வைத்து விடுவேன். பண உதவி மட்டுமின்றி பொருட்களாக வழங்குபவர்கள், அன்னதானம் வழங்கும்போது உதவி செய்வது என பல அன்பர்கள் இருப்பதால் தொடர்ந்து தொய்வின்றி வழங்க முடிகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் சாப்பிடும் சாப்பாடு என்பதால் மிகவும் கவனமாக சமைக்கிறோம்’’ என்கிறார் கனிவுடன்.

அன்னதானம் வழங்குவதற் காகவே அர்ப்பணிப்புடன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுவரும் இவர்களின் சேவை மேலும் சிறக்க வாழ்த்துவோமே...!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x