Last Updated : 29 Apr, 2014 05:00 AM

 

Published : 29 Apr 2014 05:00 AM
Last Updated : 29 Apr 2014 05:00 AM

சோலைகளாகும் வறண்ட கிராமம்: சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பொதுமக்கள்

வறட்சியை சமாளிக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு வளம் சேர்க்கவும் கிராமத்திலும், சாலை ஓரங்களிலும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரித்து வருகின்றனர் விருதுநகர் அருகேயுள்ள பாவாளி கிராம மக்கள்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாகப் பருவ மழை பொய்த்தது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், ஓடைகள், கால்வாய்கள், கிணறுகள், குளங்கள் அனைத்தும் வறண்டுள்ளன.

இதற்குக் காரணம் மரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதே. நாம் வாழும் பூமியில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு மரங்களின் பங்கு இன்றியமையாதது. மரங்கள் பூமிக்கு ஆடைகளாய் அமைந்து புவியைப் பாதுகாப்பதோடு மண் வளத்தைப் பாதுகாப்பதிலும், நீர் வளத்தை நிலை நிறுத்துவதிலும் பங்களிப்பு செய்கின்றன. எனவே தான் புவிப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு மரங்கள் அடர்ந்து இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அண்மைக் காலங்களில் மரங்கள் பெருவாரியாக வெட்டப் படுவதால் சுற்றுச்சூழல் சமன்பாடு பாதிப்படைந்துள்ளது. மரங்களுக்கான தேவை அதிகரித்து வரும் இன்றைய சூழலில் காடுகளை மட்டுமே நம்பியிருக்காமல் தனியார் நிலங்களிலும் மரங்களை வளர்த்து மனிதத் தேவைகளை ஈடுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த பாவாளி கிராம மக்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து, பாவாளி ஊராட்சி மன்றத் தலைவர் கே.நாகராஜன் கூறிதாவது: விருதுநகர் நான்குவழிச் சாலையில் இருந்து பாவாளி வரை செல்லும் பிரிவு சாலை சுமார் 3 கி.மீ. தூரம் கொண்டது. கிராமத்தில் வசிக்கும் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த வழியாகத்தான் நகருக்குள் வந்து செல்கின்றனர்.

ஆனால், 3 கி.மீ. தூர சாலையில் எந்த இடத்திலும் மரங்கள் இல்லை. வெயில், மழைக்கு மக்கள் ஒதுங்கக்கூட இடமில்லை. எனவே, நான்குவழிச் சாலையில் இருந்து பாவாளி வரையுள்ள சாலையின் இருபுறமும் புங்கை, கொன்றை, நாவல், தேக்கு போன்ற சுமார் 320 மரக்கன்றுகளை வனத் துறையினரிடம் இருந்து பெற்று நட்டு வைத்துள்ளோம். மரக்கன்றுகளைப் பாதுகாக்க முள்வேலியும் அமைத்துள்ளோம்.

மேலும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் 70-க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டு தினந்தோறும் இந்த மரக்கன்றுகளுக்கு குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி வளர்க்கப்படுகிறது.

சாலையோரத்தில் மட்டுமின்றி பாவாளி கிராமத்தில் உள்ள கலைஞர் நகரில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மரக்கன்று என நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அதையும் அவர்கள் நட்டுவைத்து பராமரித்து வருவதாகவும் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.

இருப்பினும், கூலிக்காக வேலை பார்க்காமல் மரக்கன்றுகளை வளர்ப்பதிலும், அவற்றுக்கு தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவதிலும் இக்கிராம மக்களின் அக்கறையையும் ஆர்வத்தையும் காண முடிகிறது.

மரக்கன்றுகளை வளர்ப்பதால் தங்களுக்கும், தங்கள் தலை முறையினருக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் பாவாளி மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x