Published : 14 Jul 2016 11:21 AM
Last Updated : 14 Jul 2016 11:21 AM

சிலை சிலையாம் காரணமாம் - 7: விருஷ்னான யோகினி சிலை!

பாந்தா வந்து சேர்ந்த வாட்சன், கையோடு எடுத்து வந்திருந்த விருஷ்னான யோகினி சிலையின் படங்களைப் பாந்தா மாவட்ட மக்களிடம் காட்டி விசாரித்தார். அவை இங்கிருந்தவைதான் என் பதையும், அவற்றை யாரோ இங்கிருந்து திருடிவிட்டார்கள் என்பதையும் அந்த மக்கள் ஆதங்கத்துடன் விவரித்தார்கள். இந்த விசாரணையின் மூலம், ‘சத்தபிஸ்’ ஏஜெண்டுகள் கடத்தல் வேலைகளில் மட்டுமல்லாது திருட்டிலும் ஈடுபடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தினார் வாட்சன்.

இத்துடன் தனது ஸ்டிங் ஆபரேஷனை முடித்துக்கொண்ட அவர், தனது அனுபவத்தை ‘சத்தபிஸ் தி இன்சைடு ஸ்டோரி’ என்று புத்தகமாக எழுதி வெளி யிட்டார். இதில் இந்திய அனு பவம் குறித்து தனி அத்தி யாயமே எழுதினார். இந்தப் புத்தகம் வெளிவந்து பர பரப்பை ஏற்படுத்தியதுமே, இந்தியா மற்றும் இத்தாலிக்கான தங்களது தொடர்புகளையும் திரைமறைவு வர்த்தகத்தையும் உடனடியாக நிறுத்திக்கொண்டது ‘சத்தபிஸ்'.

அத்துடன், இந்தியாவுக்கான வியாபாரப் பிரதிநிதிகளாக நியமித்திருந்த ஆலிவர் ஃபோர் ஜையும், பிரிண்டன் லிஞ்சையும் பணி நீக்கமும் செய்தது. இந்நிலையில், பிரான்ஸ் மியூசியம் ஒன்றிலிருந்து யோகினி சிலை ஒன்று 2013 செப்டம்பர் 19-ல் இந்தியாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ‘சத்தபிஸ்' கேட்லாக்கில் இருந்த யோகினி வேறு திருப்பி கொடுத்த சிலை வேறு. பிரான்ஸில் இருந்து வந்த யோகினி சிலை தற்போது, டெல்லி நேஷனல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து, ராஜஸ்தா னில் ‘சத்தபிஸ்' ஏஜெண்டாக செயல்பட்ட வாமன் நாராயண் கியாவை ஜெய்பூர் காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் வத்சவாவும் ராம்சிங் என்ற போலீஸ்காரரும் சுற்றி வளைத்தார்கள்.

அந்த ஆபரேஷனை விவரிக் கும் முன்னதாக வாமன் நாராயண் கியாவைப் பற்றி ஓர் அறிமுகம்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஸ்டில்ஸ் ஸ்டுடியோ வைத்திருந்த பத்ரி நாராயண் என்பவரது மகன் வாமன் நாராயண் கியா. தந்தையின் ஸ்டுடியோவில் இருக்கும்போதே ராஜஸ்தான் ஓவியங்களை விற்றுக் காசு பார்த்த வாமன் கியா, தனியாக கைவினைப் பொருட்கள் விற்கும் கடையைத் தொடங்கி கடத்தல் சந்தையிலும் மெல்ல மெல்ல கால் பதித்தார்.

இந்நிலையில், ஜெய்பூரின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆனந்த் வத்சவா ஒருமுறை, கோயில் சிலை திருடர்கள் 34 பேரை ஒரே சம யத்தில் மடக்கிப் பிடித்தார். அவர்களிடம் நடத்திய விசா ரணையில்தான், வாமன் கியா வைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்தன. இன்றைக்கு, சுபாஷ் சந்திர கபூரை ‘சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன்’ என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் வாமன் நாராயண் கியா சிலைக் கடத்தலில் மன்னாதி மன்னன்!

வத்சவாவிடம் சிக்கிய கோயில் சிலைத் திருடர்கள் வாமன் கியாவை ‘இந்த உலகத் தின் ராஜா’ என்று புகழ்ந்தார்கள். அவர்கள் சொன்ன மேலதிக தகவல்களைக் கேட்டு அதிர்ந்து போன வத்சவா, வாமன் கியாவின் வியாபாரத் தொடர்பு களைத் தோண்ட ஆரம்பித்தார். கியாவின் வண்டவாளங்கள் அத்தனையும் அறிந்துகொண்டு அவரைச் சுற்றி வளைத்தார். அப்போது, சத்தபிஸில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஆலிவர் ஃபோர்ஜும் வாமன் கியாவின் வீட்டில் இருந்தார். எனினும், பெரிய அளவிலான அரசியல் அழுத்தம் இருந்ததால், இந்தியன் மெடிசி என்று வர்ணிக்கப்பட்ட வாமன் கியாவை அப்போது கைது செய்ய முடியவில்லை. ஆனாலும் மனம் தளராத வத்சவா, இன்னொரு தருணத்துக்காக காத்திருந்தார்.

சுற்றி வளைத்த போலீஸ்

2003 ஜூன் 7-ல் அந்தத் தருணம் வாய்த்தது. அன்றைய தினம் வாமன் கியாவைத் தேடி அவரது வீட்டுக்கு வத்சவா சென்ற போது வீடு பூட்டியிருந்தது. பூட்டிய வீட்டுக்குள் ஆட்கள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு பிடித்தவர், 24 போலீஸாருடன் சென்று வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றார். வீட்டின் உள் பகுதியில் பழமையான கலைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் படங்களையும் வாமனும் அவரது சகாக்களும் தீயில் போட்டு எரித்துக் கொண்டிருந்தனர். பாதி எரிந்த நிலையில் அந்த ஆவ ணங்களைக் கைப்பற்றி வாமனை கைது செய்தார் வத்சவா.

அப்போது அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 34 கேட்லாக்குகளில் ஏராளமான இந்திய கலைப் பொருட்கள் மற்றும் பழமையான சிலைகளின் படங்கள் இருந்தன. தென்கிழக்கு ராஜஸ்தானின் ஆற்று என்ற கிராமத்தில் இருந்து மிகப் பழமையான ‘வராகா’ கற்சிலை ஒன்றை வாமன் கியாவின் ஆட்கள் 1980-க்குப் பிறகு கடத்தி இருக்கிறார்கள். சுமார் 500 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட விசேஷமான அந்த ‘வராகா’ சிலையைப் பற்றிய தகவல்களும் அப்போது சிக்கின.

போலீஸ் திடீரென தன்னைச் சுற்றி வளைத்ததும் ‘எனது வீட்டுக்குள் போலீஸ் எப்படி நுழையலாம்? ’ என எகிறிக் குதித்த வாமன் கியா, முதல்கட்ட போலீஸ் விசாரணையில் வாயே திறக்கவில்லை. இரண்டு வாரம் கழித்து போலீஸ் பாணியில் விசாரணையை முடுக்கியதும் தான் மர்மங்கள் விலக ஆரம்பித்தன.

- சிலைகள் பேசும்..

முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 6: உ.பி. யோகினி சிலை தெரியுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x