Published : 04 Aug 2016 08:58 AM
Last Updated : 04 Aug 2016 08:58 AM

சிலை சிலையாம் காரணமாம் - 21: திருநீலக்குடி நடராஜர் சிலை!

லண்டனில் உள்ள ‘எவ ரெஸ்ட் ஆர்ட் கேலரி’ என்ற நிறுவனம் தன்னிடம் உள்ள பழமையான கலைப் பொருட்களை விற்பதற்காக 1976-ல் விற் பனை விளம்பரம் ஒன்றை பத் திரிகைகளில் வெளியிடுகிறது. தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றிய ராஜசேகரன் நாயர் என்பவர் எதார்த்தமாக அந்த விளம் பரத்தைப் பார்க்கிறார். அதில் தமிழகத் தின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருநீலக்குடி சிவன் கோயிலின் நடராஜர் சிலையின் போட்டோக்களும் அதில் இருந்தன.

திருநீலக்குடி கோயில் அர்ச்சகரும் அது அங்குள்ள நடராஜர்தான் என உறுதிப்படுத்துகிறார். அத்தோடு ஒதுங்கிவிடாத நாயர், இந்த விவகாரத்தை இந்தியத் தொல்லி யல்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படை யில் இந்திய தொல்லியல் துறையானது ‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீஸ் உதவியோடு லண்டன் ‘எவரெஸ்ட் ஆர்ட் கேலரி’க்கே நேரில் சென்று விசாரணை நடத்தியது. ஆனால், இந்தியத் தொல்லியல் அதிகாரிகள் அங்கு போவதற்குள் டெக்சாஸில் உள்ள ‘கிம்பெல் ஆர்ட் மியூசியத்துக்கு’ அந்தச் சிலையை ரூ.60 லட்சத்துக்கு விற்றுவிட்டது ‘எவரெஸ்ட் ஆர்ட் கேலரி’.

தங்களது முயற்சியை கைவிடாத நாயரும் இந்தியத் தொல்லியல் துறை யினரும் ‘எவரெஸ்ட் கேலரி’யை மேலும் துருவியபோது, நாகை மாவட் டம் செம்பனார்கோவில் நல்துணை ஈஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான வள்ளி, தெய்வானை உட்பட மொத் தம் 8 ஐம்பொன் சிலைகள் சிக்கின. (இவைகள் 1975-ல் அந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டவை) இதை யடுத்து, ‘எவரெஸ்ட் கேலரி’ சம்பந்தப் பட்ட மேலும் சில இடங்களைச் சோதனையிட்டபோது, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 240 ஐம்பொன் மற்றும் கற்சிலைகள் சிக்கின.

இப்படி ஒரே நேரத்தில் மொத்த மாக இவ்வளவு சிலைகள் சிக்கிக் கொண்டதால் மிரண்டுபோன எவ ரெஸ்ட் நிர்வாகம், தனது கவுரவத் தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக லண்டனின் ‘ராயல் கோர்ட் ஆஃப் ஜஸ்டீஸில்’ வழக்குப் போட்டது. அந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், பிடிபட்ட சிலை களை இந்தியாவுக்கு மீட்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேசமயம், கிம் பெல் மியூசியத்துக்கு விற்கப்பட்ட நடராஜர் சிலை மட்டும் மீட்டுவரப்பட் டது. இதன் தொடர் நடவடிக்கையாக ‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீஸார் எவரெஸ்ட் ‘ஆர்ட் கேலரி’யின் உரிமையாளர் எல்.பி.சொராரியாவை (L.P.Choraria) கைது செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

மேலும் 41 சிலைகள்

அங்கே, தஞ்சை திருநீலக்குடி சிவன் கோயிலுக்குச் சொந்தமான சந்திரசேகரர், நடராஜர், இரண்டு அம்மன்கள், மற்றும் விக்கிரமங்கலம் சிவன் கோயிலுக்குச் சொந்தமான சிலைகள் என மொத்தம் 41 சிலைகள் சிக்கின. இந்தச் சிலைகளையாவது மீட்டுவிடலாம் என நம்மவர்கள் முயற் சித்தபோது, நீதிமன்றத் தடை இந்தச் சிலைகளுக்கும் சேர்த்துத்தான் எனச் சொல்லித் தப்பித்துக் கொண்டது எவரெஸ்ட் நிறுவனம்.

தொடர்ந்து அந்த வழக்கை நடத்தி தடையை உடைப்பதற்கு இந்திய அரசிடம் இருந்து உரிய அனுசரணை கிடைக்காததால் களத்தில் நின்ற அதிகாரிகள் சோர்ந்து போனார்கள். இதனால், 281 சிலைகளையும் இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டு, முடிவு தெரியாமலேயே போய்விட்டது அந்த வழக்கும் சிலைகளின் நிலையும்.

சிலைகள் திருட்டுத்தனமாக கடத்தப்பட்டு அவை ‘வெளிநாட்டு ஆர்ட் கேலரி’களில் வைக்கப்பட்டிருந் தாலும் அவைகளை அவ்வளவு எளிதில் மீட்க முடியாது. எந்த நாட்டில் சிலை உள்ளதோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் சிலைகளை மீட்க முடியும்.

இழுத்தடிக்கும் சிங்கப்பூர் மியூசியம்

பொதுவாக ‘ஆர்ட் கேலரி’களில் திருட்டு சிலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், சம்பந்தப்பட்ட காலரியின் உரிமையாளர், ‘‘இதை நான் சட்டப்படி விலை கொடுத்து வாங்கி இருக்கிறேன்’’ என்று ஆவணங்களைக் காட்டி வாதம் செய்வதுதான் இதுவரை நடந்துவருகிறது. இதனாலேயே பெரும் பகுதியான சிலைகளை மீட்டு வருவதில் சட்டச் சிக்கல்கள் நீடிக்கின்றன.

அண்மைக்காலமாக இதுபோன்ற திருட்டு சிலை விவகாரங்கள் அதிகம் தலைதூக்க ஆரம்பித்திருப்பதை அடுத்து, மேலைநாடுகளில் உள்ள ஒருசில பெரிய அருங்காட்சியகங்கள் திருட்டு சிலைகளை வாங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றன. அதேசமயம், சிங்கப்பூரில் உள்ள ‘ஏசியன் சிவிலைசேஷன் மியூசியம்’ போன்றவைகள் திருட்டு சிலைகள் என்று தெரிந்தாலும் சம்பந்தப்பட்ட நாட்டிடம் அதைத் திருப்பி ஒப்படைப்பதில் இழுத்தடிக்கின்றன. வெளிநாட்டுக் கதைகள் இருக்கட்டும்.. தஞ்சையில் இருந்து கடத்தப்பட்டு குஜராத்தில் இருக்கும் ராஜராஜன் சிலையை மீட்கப்போன அதிகாரிகள் வெறும்கையோடு கையோடு வந்த கதை தெரியுமா?

அரியலூரில் திறக்கப்படாமல் காத்திருக்கும் சிலை பாதுகாப்பு மையம்

இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் 35 சதவீத கோயில்கள் தஞ்சை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் உள்ளன. செம்பியன்மாதேவி, குந்தவை நாச்சியார் காலத்தில் கட்டப்பட்ட சோழ மண்டல திருக்கோயில்களில் உள்ள சிலைகள் அனைத்துமே ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. அதனால்தான் சிலைத் திருட்டுக் கும்பல்கள் சோழ மண்டலத்தை தங்களின் முக்கிய கேந்திரமாக வைத்துள்ளன. புரந்தான், சுத்தமல்லி கோயில்களில் மொத்தமாக சிலைகள் திருடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கோயில் சிலைகளைப் பாதுகாப்பதற்காக அரியலூரில் 90 லட்ச ரூபாய் செலவில் சிலை பாதுகாப்பு மையம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால், யார் வரவுக்காக காத்திருக்கிறதோ தெரியவில்லை கட்டிமுடிக்கப்பட்டு ஓராண்டாகியும் அந்த மையம் இன்னும் திறக்கப்படாமலேயே இருக்கிறது.

- சிலைகள் பேசும்… | ‘The India Pride Project’ உதவியுடன்

முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 20: லண்டனில் பிரம்மா, பிரம்மி சிலை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x