Published : 26 May 2016 11:27 AM
Last Updated : 26 May 2016 11:27 AM

வாசித்தலே வசித்தலின் அடையாளம்

இலக்கியக்கடலில் இறங்கி நன்னூல் முத்துகளைச் சேகரிக்கிற இளம் வாசகர்களை வாசகர் திருவிழா பகுதியின் மூலம் ஆற்றுப்படுத்துகிற நன்முயற்சியை ‘தி இந்து’ முன்னதாகவே தொடங்கிவைத்து புத்தகத் திருவிழாவுக்கு அழகான வரவேற்பைத் தருவது பாராட்டக்கூடிய நிகழ்வு. தமிழகக் கல்லூரி நூலகங்கள் தரமான நூல்களைத் தெரிவு செய்ய ‘தி இந்து’வில் எழுத்தாளர்கள் தரும் புத்தகப்பட்டியல் துணைபுரியும் என்று நம்புகிறேன். புத்தகங்களின் பெயர், பதிப்பகங்களின் பெயர் ஆகியவற்றோடு அவற்றின் விலையையும் உடன்தந்தால் சரியாய் திட்டமிட்டு வாசகர்கள் புத்தகங்களை வாங்க உதவியாய் அமையும்.

தமிழில் தடம்பதித்த சிறப்பான நூல்களை வாசகர்கள் தெரிவுசெய்து வாங்க இம்முயற்சி நிச்சயமாய் துணைபுரியும். எழுத்தாளர்களின் நூல்தெரிவோடு வாசகர்களின் சிறப்பான நூல் தேர்வையும் ‘தி இந்து’ வெளியிட வேண்டும். மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பதிப்பகங்களுக்கு உதவும் பொருட்டு இந்த ஆண்டு கழிவேதும் கேட்காமல் முழுவிலையையும் தந்து வாசகர்கள் புத்தகங்களை வாங்கினால் பதிப்பகங்களுக்குப் பேருதவியாய் அமையும் என்று நம்புகிறேன்.

இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதைப் போல் வாசகர் திருவிழாக்களையும் நடத்தி இளம் வாசகர்களை இன்னும் அதிகமாய் வாசிக்க ‘தி இந்து’ தூண்ட வேண்டும். வாசித்தலே வசித்தலின் ஒரே அடையாளம் என்று உணர்த்த வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x