Published : 28 Mar 2015 10:53 AM
Last Updated : 28 Mar 2015 10:53 AM

காலமாற்றத்தில் கரைந்த கூத்து

எழுதிய ‘கூத்துப் பார்க்க வந்திடுங்கோ!’ கட்டுரை மூலமாக, இன்று உலகையே தன் ஆக்கிரமிப்புக்குள் அடக்கி வைத்துள்ள சினிமாவின் மூலமான கூத்தின் வளர்ச்சி, வகைபற்றி அறிந்து வியந்தேன்.

கூத்து இன்று அபூர்வமான, அரிதான கலையாக மாறிவிட்டாலும், கூத்துப் பட்டறையில் இருந்து வந்த கலைஞர்களே திரைத் துறையில் அதிகம். பெரும்பாலான கிராமங்களில் திரௌபதி அம்மன் ஆலயங்கள் உண்டு. அவ்வாலயத் திருவிழாக்களின்போது நிச்சயம் மகாபாரதக் கூத்து உண்டு.

‘கர்ண மோட்சம்’ காட்சியைப் பார்த்தால் மோட்சம் கிட்டும் என நம்புகின்றனர். கூத்துக் கலைஞர்களுக்குத் திருவிழாக் காலங்களில் மட்டுமே கூத்துக்கட்ட வாய்ப்புக் கிடைப்பதால் மற்ற காலங்களில் வருமானம் இன்றி மிகவும் கஷடப்படுகின்றனர்.

இதனாலேயே கூத்தாட்டக் கலைஞர்கள் தங்கள் கலையை விட்டு வேறு வேலை செய்யத் தொடங்கிவிட்டனர். கூத்து மற்றும் நாடகம் போன்ற பாரம்பரியக் கலைகளைச் செய்துவரும் கலைஞர்களுக்கு வாய்ப்பும் உதவித்தொகையும் அரசு அளிக்குமேயானால், கூத்துக் கலை மீண்டும் உச்சம் தொடும்.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.

***

காலமாற்றத்தில் கரைந்த கூத்து

தற்போதைய நாடகம் மற்றும் சினிமாக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியது நாடகக்கலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதிலும் மேலைநாட்டு கலைஞர்களுக்கு இணையாக பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், மதுரகவி பாஸ்கரதாஸ் ஆகியோர் நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. நாடகக்கலை மூலம் பல முத்தான நடிகர்கள் சினிமாவுக்குக் கிடைத்தனர். ரசிகர்களைக் கவர்ந்தனர்.

தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்திலேயே அரங்கின் கடைக்கோடியிலிருக்கும் பார்வையாளர்களுக்கும் கேட்கும் வண்ணம் வசன உச்சரிப்புகளும், பாடல்களும் இருக்கும். சென்னையிலும் பல நாடகக் குழுக்கள் இயங்கிவருவது மகிழ்ச்சியே. சமீபத்தில்கூட ‘பொன்னியின் செல்வன்’ கதை நாடகமாக அரங்கேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- கி. ரெங்கராஜன்,திருநெல்வேலி டவுன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x