Published : 19 Apr 2017 10:00 AM
Last Updated : 19 Apr 2017 10:00 AM

இப்படிக்கு இவர்கள்: அரசும் தீதின்றிப் பொருளீட்ட வேண்டும்!

போதைப் பொருட்கள் விற்பவர்களுக்கும் அதைக் கடத்துபவர்களுக்கும் தண்டனை வழங்கும் அரசே, ‘டாஸ்மாக்’ மூலம் மக்களைக் குடிகாரர்களாக்கி, அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளத் துணைபோவது மாபெரும் பாதகச் செயல் அல்லவா? ‘தீதின்றி வரும் பொருள்தான் அறனும் இன்பமும் தரும்’ என்ற பொய்யாமொழி வழங்கிவரும் நாட்டில், நேர்மையாகப் பொருளீட்டுதல் அரசாங்கத்துக்கும் பொருந்தாதா? அப்பாவி அடித்தட்டு மக்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தை, தங்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினரின் நலனுக்குப் பயன்படுத்தாமல், தங்களது உடல் மற்றும் மன நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் போதைக்குப் பயன்படுத்தத் துணைபோவது பரிதாபகரமான நிலை. அரசு வருவாயை மட்டுமே கருத்தில்கொள்ளாமல் மக்கள் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- அ.குருநாதன், சுந்தரராஜன்பட்டி.



உலகத்தோடு தோற்றுக்கொண்டிருக்கிறோமா நாம்?

ஆழி.செந்தில்நாதன் எழுதிய, ‘எதற்காகத் தமிழைக் கட்டிக்கொண்டு அழணும்?’ (ஏப்.16) கட்டுரை மிகவும் அருமை. ரமேஷ் மட்டுமல்ல, இங்கு பெரும்பாலானோரின் கருத்தும் தமிழ் தேவையில்லை என்பதாகவே உள்ளது. அவர்கள் மீது நேரடியாகத் திணிக்கப்பட்ட ஆங்கிலம் அவர்களுக்கு உதவுவதாக நினைக்கிறார்கள். போலந்து நாட்டில் கணினியிலும் அவர்களது தாய்மொழியே பயன்படுத்தப்படுகிறது. அதில் உள்ள தகவல்களை, ஆங்கிலம் மட்டுமே அறிந்த எவராலுமே புரிந்துகொள்ள முடியாது. அதேநேரத்தில், கூகுளை நாடினால் எளிதில் அது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்துவிடும்.

அதைப் போல, தமிழ் மொழியில் இயங்கும் கணினியை வேற்றுமொழியினர் புரிந்துகொள்ள முயற்சித்தால் குழப்பமே மிஞ்சும். தொழில்நுட்ப வார்த்தைகள் முறையாகத் தொகுக்கப்படாமலோ, இல்லை… கூகுள் அதனைப் பதிவுசெய்யாமல் இருப்பதோ காரணமாக இருக்க முடியும். தமிழைச் சொல்லியே ஆட்சியைப் பிடித்த அரசியல் கட்சிகள், இங்கு தமிழை வளர்க்கவோ அது சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்தவோ தவறியிருக்கின்றன.

தாய்மொழி முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, நமது பொருளாதாரம் எதுவென்ற அறிவு புகட்டப்பட்டிருந்தால், ரமேஷ்களின் கேள்விகள் உருவாகாமலே இருந்திருக்கும். மொழி இல்லையேல் வளர்ச்சியில்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, நாம் உலகத்தோடு தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதும்!

- ஜெ.பாண்டியராஜ், மின்னஞ்சல் வழியாக.



மனிதாபிமானமும் தனியார் மருத்துவமனைகளும்!

மருத்துவர் கணேசன் எழுதிய ‘மருத்துவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா?’ (ஏப். 12) கட்டுரை கூறும் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால், தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள், தார்மிக நெறிகளுக்கு முரண்பட்டு, கோபமூட்டுவதாக அமைவதையும் மறுத்துவிட முடியாது. சமீபத்தில், எனது உறவினர் பையனை பாம்பு கடி சிகிச்சைக்காக ஒரு பிரபல மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். மருத்துவர்களும் பரிசோதித்தனர். மக்கள் தொடர்பு அதிகாரியைப் போன்ற ஒருவர் வந்து எங்களிடம் பேசினார். ‘‘விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதித்துள்ளது. மூன்று மருத்துவ வல்லுநர்கள் மேற்பார்வையில் மருத்துவம் பார்க்க வேண்டும்.

உடனடியாக, ரூ.1.5 லட்சம் கட்டுங்கள்’’ என்றார். ‘‘எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை’’ என்று சொன்னவுடன், சற்றுநேரம் கழித்து நர்ஸ் ஒருவர் மூலமாக, “பாம்புக் கடிக்கெல்லாம் மருந்துகள் அரசாங்க ஆஸ்பத்திரியில்தான் உள்ளது. நீங்கள் அங்கு சென்று மருத்துவம் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டனர். இதிலேயே மூன்று மணி நேரம் போய்விட்டது. பின்னர், அரசாங்க ஆஸ்பத்திரியில் தங்கி பத்து நாள் சிகிச்சை பெற்றபின் குணமானது. மருத்துவர்களும் பணம் பெறுவதிலேயே நோக்கமாக இல்லாமல், மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் அல்லவா?

- கே.சிராஜுதீன், முசிறி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x