Published : 24 Oct 2016 10:39 AM
Last Updated : 24 Oct 2016 10:39 AM

அறிய வேண்டிய ஆளுமை டெக்ஸ்மோ ராமசாமி!

கோவை தொழிலதிபர் டெக்ஸ்மோ ராமசாமியின் நூறாவது பிறந்த நாள் விளம்பரங்கள், நாளிதழ்கள் பலவற்றிலும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அவரைப் பற்றிய செய்திகள் பதிவாகாதது பெரும்குறை. இன்றைய சமுதாயம் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமை அவர். தான் சார்ந்த சமூகத்தினின்று அயல்நாடு சென்று உயர் கல்வி பெற்றவர்களில் முதன்மையானவர். இங்கிலாந்தில் ஃபேபியன் சொஸைட்டியால் கவரப்பட்டு, இடதுசாரிக் கருத்துகளுடன் இந்தியா திரும்பினார்.

தொழிலாளர்களை ஊழியர்களாகக் கருதாது பங்குதாரராக நடத்திய பெருமைக்குரியவர். தமிழாசிரியர் கழகத்தினர் அவரைப் புரவலராக ஆகும்படி கேட்டபோது, “100 குறட்பாக்களையோ, 10 புறநானூற்றுச் செய்யுள்களையோ ஒப்புவிக்க இயலாதபோது அக்கெளரவத்தை ஏற்பது முறையாகாது” என்று மறுத்த பண்பாளர். அதேசமயம், நன்கொடை அளிக்கத் தவறியதில்லை. இங்கிலாந்தில் அயிலீன் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அப்பெண்மணி பரதநாட்டியம் கற்றுக்கொண்டு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்ந்தார். ராமசாமி ஒரு தனிமை விரும்பி. டெக்ஸ்மோ ராமசாமி என்றால், தரமான ‘பம்ப் - மோட்டார்’ என்பதற்கும் பெருந்தன்மைக்கும் அடையாளமாகத் திகழ்ந்தவர்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.



காலச் சக்கரம் தஞ்சாவூர் கவிராயரின், ‘சக்கரம் சுழல்வதில்லை’ குறுங்கட்டுரை காலச் சக்கரத்தைப் பின்நோக்கிச் சுழற்றியது. இனி, குழந்தைகளுக்கு சட்டி பானைகளை கூகுளில்தான் காட்ட வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. ‘மண்ணுல செஞ்ச சட்டில போயா கூட்டு வைப்பாங்க, உவ்வே..’ என்று சொல்லும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். சட்டியை விடுங்கள்.. இளநீரையே, அது இயற்கையாக இருந்த இடத்திலிருந்து எடுத்து, பாட்டிலில் அடைத்து, பதப்படுத்தி விற்றால்தானே சிலருக்குப் பிடிக்கிறது?

- இராஜிசங்கர், மின்னஞ்சல் வழியாக.



சந்திரசேகர் ஒரு நாத்திகர்!

நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்திரசேகர் பற்றி முத்துக்கள் பத்து பகுதியில் படித்தேன். அவரது கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், அவர் எழுதிய நூல்கள் மற்றும் பல செய்திகள் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தன. அதே சமயம், கடவுள் பற்றிய அவரது முக்கிய கருத்து, “மனிதனின் கண்டுபிடிப்புகளிலே மிகப் பெரிய கண்டுபிடிப்பு, சூப்பர் கம்ப்யூட்டரா, அண்டத்தை ஆராய்ச்சி செய்ய வான்வெளியில் அனுப்பப்படும் செயற்கைக் கோள்களா?” என்று கேட்டபோது, “இல்லை. மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிகப் பெரிய கண்டுபிடிப்பு கடவுள். நாம் கடவுளைக் கண்டுபிடித்து, நம்முடைய இன்ப துன்பங்களுக்கு அவர்தான் காரணம் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்” என்றவர் சந்திரசேகர். “நான் பகுத்தறிவுப்படி வாழ்ந்துவரும், கடவுளை நம்பாத ஒரு இந்து நாத்திகன்” என்றும் சொன்னவர் அவர்.

- தி.ப.பெரியாரடியான், தூத்துக்குடி.



செட்டியார் வாழ்வில் திருப்புமுனை

ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ‘மறக்கப்பட்ட ஆளுமை’ கட்டுரை அருமை. மேலும் ஒரு செய்தியைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். சண்முகம் செட்டியார் தனது இளமைக் காலத்தில் நீலகிரியில் இருந்தபோது, கஸ்தூரி ரங்க ஐயங்காருடன் நட்பு கொண்டார். அவரது அறிவாற்றலைக் கண்ட கஸ்தூரி ரங்க ஐயங்கார், அவர் அரசியலுக்கு வரவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து, மகாத்மா காந்தியடிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அதுவே ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

- தர்மலிங்கம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x