Published : 20 Feb 2018 09:39 AM
Last Updated : 20 Feb 2018 09:39 AM

மாலத்தீவில் அமைதி திரும்பட்டும்!

மா

லத்தீவில் அரசியல் நெருக்கடி உச்சத்தை அடைந்திருக்கிறது. நீதித் துறை, அரசு அதிகாரிகள், பிற எதிர்க்கட்சிகள் என்று நாட்டையே முடக்கிப்போட்டிருக்கிறது அதிபர் அப்துல்லா யமீன் தலைமையிலான அரசு. பிப்ரவரி 1-ல், முன்னாள் அதிபர் நஷீத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதான தண்டனைகளை ரத்துசெய்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்து தீர்ப்பளித்தது. நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறும் உத்தரவிட்டது. இதனால் அதிருப்தியடைந்த யமீன், விமான நிலையத்தில் இரு எம்.பி.க்களைக் கைதுசெய்ய உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு யாரும் வராமல் தடுக்குமாறு ராணுவத்துக்குக் கட்டளையிட்டார். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதால் மாலத்தீவில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

2013 தேர்தலில் வெற்றிபெற்று அதிபரானவர் யமீன். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகத் தற்போது குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் அவரை அதிபராக அங்கீகரிக்க மறுக்கின்றன. முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் 2012-ல் திடீரென பதவியிலிருந்து அகற்றப்பட்டார். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயற்சித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. நஷீத் இப்போது பிரிட்டனில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் மாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இப்படியான சூழல் உருவாகிவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துமாறு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் குரல் கொடுத்திருக்கிறது. மாலத்தீவு இப்போது சீனாவுக்கு நெருக்கமாக இருக்கிறது. காமன்வெல்த் அமைப்பிலிருந்தும் விலகிவிட்டது. எனவே, இந்தியாவால் அதன் மீது செல்வாக்கு செலுத்த முடியாது. 1978 முதல் 2008 வரையில் மமூன் அப்துல் கயூம் தலைமையிலான ஆட்சி நடந்தபோது, மாலத்தீவில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவியது. கயூமின் ஆட்சிக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை நடத்தியவர்தான் முகமது நஷீத். 2008-ல் நடந்த தேர்தலில் நஷீத் அதிபரானார். 2012-ல் எதிர்ப்புகள் அதிகமானதால் பதவி விலகினார். 2013 தேர்தலில் முதல் சுற்றில் முகமது நஷீத் அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும், வழக்கில் தண்டனை பெற்றவர் என்பதால் உச்ச நீதிமன்றம் அவருடைய வெற்றி செல்லாது என்று அறிவித்தது. யமீன் அதிபரானது அப்படித்தான்.

பிப்ரவரி 5-ல் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலை 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டது. தற்போது, மேலும் 15 நாட்களுக்கு அது நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. நெருக்கடி நிலையை எதிர்த்து மக்கள் வீதிகளில் வந்து போராடுகிறார்கள். அவர்களை அகற்றும் நடவடிக்கையில் கடுமையான வழிமுறைகளை ராணுவம் கையாள்கிறது. மக்கள் குடியரசு என்று தன்னை அறிவித்துக்கொண்ட சிறிய நாடான மாலத்தீவு விரைவில் நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்றே இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்க்கின்றன. மாலத்தீவில் விரைவில் அமைதி திரும்பும் என்று நம்புவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x