Last Updated : 24 Jul, 2014 08:29 AM

 

Published : 24 Jul 2014 08:29 AM
Last Updated : 24 Jul 2014 08:29 AM

ராஜேந்திர சோழனைப் போற்றுவோம்!: இன்றும் நாளையும் கங்கைகொண்ட சோழபுரம் வாருங்கள்

அந்த பாண்டிய மன்னனுக்கு மாறவர்மன் இரண்டாம் ராஜசிம்மன் என்று பெயர். சோழ ஆளுமையை தகர்த்தே ஆக வேண்டும் என்ற வெறியை உடையவன். சோழ தேசத்தின் செழிப்பைக் கண்டு மூச்சுத் திணறியவன்.

காவிரி கடலில் கலந்து வீணா வதை தடுப்பதற்காக ஐம்பதுக்கு மேற்பட்ட கிளை நதிகளை உரு வாக்கி, கால்வாய் களை பிரித்து புல் விளைந்த இடங்களெல்லாம் நெல் விளையும் பூமியாக்கி இருந்தார்கள் சோழர்கள்.

அந்தணர்கள் அரசருக்கு அடுத்தபடி நின்று யாருக்கு எங்கே என்ன எப்படி வேண்டுமென்பதை கலந்து பேசி தீர்மானிக்கிறார்கள். குடிமக்கள் விண்ணப்பம் இட்டவுடன் கூடிப்பேசி, உடனே நிறைவேற்றுகிறார்கள்.

ஒருமுறை ஆதூரச் சாலைக்கு ஐம்பது கல் நடந்து வந்த ஆடு மேய்க்கும் பெண்ணிடம், “எது உன் ஊர். என்ன பிரச்சனை உனக்கு” என கேட்க, “காலில் முள் தைத்து விட்டதய்யா. அந்த இடம் புண்ணாகி, சீழ் பிடித்து உயிர் போகும் வலி” எனக்கூறி அந்தக் காலை காட்டினாள். அதை பார்த்து விட்டு, ‘‘கடவுளே” என்று நிர்வாகி கதறுகிறான். ஆடு மேய்க்கும் அந்த பெண்ணை அழைத்துச்சென்று சல்லியகிரியை என்று வழங்கப்படும் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். சீழை அகற்றி நூலால் தைக்கிறார்கள். காஞ்சன இலை ரசத்தை நோவு தெரியாமல் இருக்க கொடுக்கி றார்கள். இருபத்தியேழு வகை மூலிகைகள் இருக்கின்றன. களிம்பு தடவி, இலைகளை அப்பி, வாழை நாரால் கட்டு போடுகிறார்கள். போஷாக்கான உணவு கொடுக்கி றார்கள். தூங்கும்படி விசிறிவிடு கிறார்கள்.

இதையெல்லாம் மாறுவேடத் தில் ஊர்சுற்றிய பாண்டியன் பார்க்கிறான். ஆடு மேய்க்கும் பெண்ணிற்கே இத்தனை உயர்வு என்றால் மற்றவர்களுக்கு என்ன மரியாதை இருக்கும் என நினைக்கையில் அவனுக்கு தலை சுற்றியது. பாண்டிய நாடும் இப்படி மாறாதா என ஏங்கி னான். இடங்கை, வலங்கை என்று அடித்துக் கொள்கிறார்கள். மறவர்களுக்கிடையே சண்டை நடப்பது தினசரி பழக்கமே தவிர, ஒன்றாய் கூடி படை எடுக்கின்ற வழக்கமே இல்லையே என நினைந்து அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடுவதற்குள் சோழர் படை நுழைகிறது.

910-ம் வருடம். மன்னன் பராந்தகன் தலைமையில் ஒன்றி ரண்டா, பலநூறா, ஆயிரமா, சோழதேசப் படைகளை கணக்கிடமுடியவில்லை. ஒரு லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் மதுரை நோக்கி வந்து இரண்டாக பிரிந்து மதுரையை சிதறடித்து சூறையாடி எவன் இடங்கை, எவன் வலங்கை என்று தேடித்தேடி அடிக்கி றார்கள். வெற்றியின் சின்னமாக கன்னியாகுமரியில் புலிக் கொடியை பறக்க விடுகிறார்கள். சுசீந்திரத்தில் இதற்கான கல்வெட்டு இருக்கிறது.

அதன்பிறகு பாண்டியர்களுக்கு கடுமையான கட்டளைகள் இடப் பட்டது. அதன்படி, பாண்டியர்கள் வாளேந்தக் கூடாது. வீரக்கழல் அணியக்கூடாது. பெரிய மீசை வளர்க்கக் கூடாது. சோழர்களைக் கண்டால் குந்தி உட்கார வேண்டும் என கட்டளைகள் நீண்டு கொண்டே போனது. அரச மக்களின் சகல நகைகளும், பண்டாரச் செல்வங் களும் கொண்டு வரப்பட்டன. தேவ ரடியார் பெண்கள் எங்கள் அரண் மனையை கழுவட்டும். பாண்டிய தேசத்தில் பூனை இருக்கலாம். ஒரு யானைகூட இருக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டன. நாக்கை அறுத்துக்கொள்கிற அளவுக்கு அவமானங்கள் நேர்ந்தன.

“நானும் தமிழன், நீயும் தமிழன். நமக்குள் போரா” என்ற கேள்விக்கு “ஆமாம். அதனால் என்ன, தரையில் படுடா நீ தமிழன்தான். ஆனால் உனக்கு துரோகி என்று பெயர்” என கொக்கரித்து சோழர்கள் சிவன் தலை பாம்பாய்ச் சீறினார்கள்.

இப்போதுதான் அடுத்தடுத்த பல கேள்விகள் எழுந்தன. “ஆமாம் பாண்டிய மன்னன் மாறவர்மனின் மணிமுடியும், செங்கோலும் எங்கே. வைரங்கள் பதித்த அரச போர்வை எங்கே. துணைக்கு வந்த இலங்கை படைகள் எங்கே. இலங்கை மன்னன் ஐந்தாம் கசபனின் சக்க சேனாதிபதி எங்கே. வெள்ளூரில் பல இலங்கை வீரர்களை அடித்து பல் உடைத்தோமே காலில் விழுந்து வணங்கி உயிர்பிச்சை கேட்டு ஓடினார்களே. அப்படியானால் மணிமுடி எங்கே, செங்கோல் எங்கே” கேள்விகள் நீண்டபடி இருந்தன.

பலரை பிரம்பால் அடித்ததில் விஷயம் வெளியே வந்தது. சக்க சேனாதிபதி இலங்கைக்கு மணிமுடியையும் செங்கோலையும் எடுத்துப்போய் விட்டான். அவனோடு மாறவர்மனும் ஓடிவிட் டான். மன்னனும் இல்லை. மணி முடியும் இல்லை. வடகிழக்கு பருவகாற்று உதவியால் ஒரு நாவாயில் சிறிய படையோடு பாண்டியன் சேர தேசத்தில் அடைக் கலம் புகுந்தான். இப்பொழுது மண் மட்டுமே தங்களுக்கு. மற்ற எதுவும் கிடைக் காது என சோழர்களுக்கு புரிந்தது.

சோழ மன்னன் பராந்தகன் பொருமினான். மணிமுடியை கேட்டு இலங்கைக்கு ஆள் அனுப்பினான். தரமறுத்து அப்போதைய இலங்கையின் நான்காம் மன்னன் உதயன் அவற்றை எடுத்துக் கொண்டு இலங்கையின் தென்கோடிக்கு போய் விடுகிறான். அடர்ந்த மரங் களை எளிதில் தாண்ட முடியாத நிலை.

பராந்தகனுக்குப் பிறகு கண்டா ராதித்தன். அதற்குப் பிறகு சுந்தர சோழன். அதற்குப் பிறகு உத்தம சோழன். அதற்குப் பிறகு இராஜராஜன். அத்தனை பேரும் அந்த மணிமுடியையும் செங்கோலையும் அடைய செய்த முயற்சி பலிக்கவில்லை.

இவர்கள் எல்லோரும் இறந்த பிறகு சோழ தேசம் எழுந்து நின்று தெற்குப் பார்த்து உருமியது. தீக்குகள் எட்டும் சிதறின. “தென் இலங்கை பூமியில் தானே இருக்கிறது. வெல்ல முடியாத வீரர்களா. செல்ல முடியாத கோட்டையா.

சோழர்கள் வெற்றி கொள்ள முடியாத களமா. பராந்தகர் ஒரு லட்சம் வீரர்களோடு போனார். நான் ஆறு லட்சம் வீரர்களோடு நாலாபக்கமும் உள்ளே நுழைவேன்” என கர்ஜித்தான் ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழன்.

1017-ம் வருடம். காடுகளை அழித்து உள்ளே நுழைகிறான். பாண்டிய மன்னனின் மணிமுடி யையும் செங்கோலையும் கிழிந்த ஆடையையும் கைப்பற்றுகிறான். எந்த மன்னனின் கையில் அவை இருந்தனவோ அந்த மன்னனின் மணிமுடியையும் பறித்து சோழ தேசம் திரும்புகிறான். இலங்கைக்கும் தமிழ் தேசத்துக்கும் பெரும் பகை உண்டு. ராஜேந்திர சோழன் காலத்தில் அந்த வன்மம் தீர்க்கப்பட்டது.

ஐம்பது வயதில் அரச பதவி ஏற்று 82 வயதில் காஞ்சிபுரத்துக்கு அருகே பிரம்மதேசம் என்கிற ஊரிலே ராஜேந்திர சோழன் இறந்து போனான். பலநூறு மாளி கைகள் கொண்ட கங்கை கொண்ட சோழபுரத்தை விட்டு கவின் மிகு கற்சிலைகள் கங்கை கொண்ட சோழீஸ்வரத்தை விட்டு அவன் ஆருயிராய் நேசித்த பரமஸ்வாமியை விட்டு எசாளம், எண்ணாயிரம் வேதபாடசாலை களை விட்டு காஞ்சிபுரத்து வணிகர் கூட்டத்தை விட்டு, கைலாயநாதர் கோயில் விட்டு அவன் நேசித்த தமிழை விட்டு அந்த மாமன்னன் சிறு கூட்டத்தினரிடையே இறந்து போனான்.

ஒன்பது லட்சம் வீரர்களோடு கோதாவரிக் கரை வரை போனவன் அரசியல் காரணங்களுக்காக அங்கே நின்று தொடர்ந்து போக உத்தரவிட்டவன் பிரம்மதேசம் என்கிற அந்த சிறிய கிராமத்திலேயே தங்கி மரணமடைந்தான். அவன் கடைசியாக தரிசித்த சந்திர மவுளீஸ்வரர் கோயில் இன்னும் இருக்கிறது. அரசனுக்கும், அவனோடு உடன்கட்டை ஏறிய அவன் மனைவி வீரமாதேவிக்கும் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு நீர்பந்தல் அமைத்த கல்வெட்டு இருக்கிறது.

வரலாற்றின் பக்கங்கள் இன் றும் உயிர்ப்புடன் இருக்கின் றன. இன்றும் நாளையும் (ஜூலை 24, 25-ல்) கங்கை கொண்ட சோழபுரம் வாருங்கள். கொண்டாடுங்கள். காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள பிரம்மதேசம் வாருங்கள். கை கூப்பி தொழுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x