Last Updated : 04 Oct, 2015 12:29 PM

 

Published : 04 Oct 2015 12:29 PM
Last Updated : 04 Oct 2015 12:29 PM

தேவ தூதர்கள்!

"ஹே நண்பா… ஏன் பொழுதன்னிக்கும் வேலை வேலைன்னு மூளையைப் போட்டுச் சாவடிக்கிற? 'தமாஷா' ட்ரைலர் பார்த்தீயா? பின்னியிருக்கான் இமிதியாஸ் அலி!"

யோசிக்கவே நேரம் கொடுக்காமல், அவராகவே கணினிக்குள் புகுந்து தட்டுவார். "பார்த்தீயா, எப்படியிருக்கான் பார் ரன்பீர்? எப்படியிருக்கா பார் தீபிகா? ரெண்டு பேரும் முன்னாள் லவ்ஸ். அந்தக் காதல் இன்னும் தெரியுது பார் கண்ணுல!"

டங்குரு, டங்குரு, டங்குரு, டங்குர்… அங்கே தீபிகாவும் ரன்பீரும் கைகோத்து ஆட ஆட இங்கே இவர் ஆடுவார். "என்னா கலர்ஃபுல்லா இருக்கு பார்! என்னா மேஜிக்கலா இருக்கு பார்!" ஆட்டம் இப்போது நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

எத்தனையோ நாட்கள் நடந்திருக்கிறது இப்படி. திடீர் திடீர் என்று வருவார்.

"ஹே நண்பா"… கடைசியா நீ ராத்திரி நேர வானம் எப்போ பார்த்தே? நட்சத்திரம் எப்போ பார்த்தே? நிலா எப்போ பார்த்தே? நான் நேத்து பார்த்தேன். என்னா வாழ்க்கைடா இது! எவ்வளோ தொலைச்சிட்டோம்!"

இன்னொரு நண்பர் இருக்கிறார்.

"மாப்பு, ஒரு வாரமா ரேடியோ கேட்க" ஆரம்பிச்சிருக்கேன் பழைய மாதிரி. காலையில வீட்டுலேர்ந்து கிளம்புறப்போ ஒரு மணி நேரம்; ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி ஒரு மணி நேரம். மனசுக்கு ரொம்ப இதமா இருக்குதுடா."

இன்னொரு நாள்.

"குட்டிப் பசங்க" எவ்ளோ கதை வச்சிருக்காய்ங்க! பள்ளிக்கூடத்தைப் பத்தி ஒரு நாவலே எழுதலாம் போலிருக்கு, என் பையன் கிட்ட உட்கார்ந்து பேசினா! அவ்ளோ பேசுறாய்ங்கடா!"

உடன் பணியாற்றிய ஒரு தோழிதான் சுட்டிக்காட்டினார்.

"ஏம்பா, இவ்ளோ வேகவேகமா சாப்புடுற நீ!" உன் தொப்பைக்கு அதான் காரணம்னு நெனைக்கிறேன். எங்கெ ஓடப்போற அப்படி? வாயிலதான் பல் இருக்கு; வயித்துல இல்ல பாஸ்!"

நேற்று புத்தகம் கொடுக்க வந்தபோது சொன்னார்:

"ஏய்.. இப்போலாம் ஏன் கவிதைப்" புஸ்தகம் எதைக் கொடுத்தாலும் தள்ளிவிடுற? இங்கே பார், கவிதை எவ்ளோ படிக்கிறீயோ அவ்ளோவுக்கு நுண்ணுணர்வு கூர்மையா இருக்கும்; வாழ்க்கையோட நெருக்கமா இருப்பே. 'கவிதை படிக்க மாட்டேன், கதை படிக்க மாட்டேன்'னு ஒதுங்கிட்டீன்னா மண்டை முழுக்க பிரச்சினையும் சிக்கலும்தான் நிரம்பிக் கிடக்கும்!"

ஏதோ உலகத்தையே புரட்டிப்போடுவதுபோல ஓடிக்கொண்டி ருக்கும்போதெல்லாம், புரடியில் ஒரு தட்டு தட்டி, 'மவனே… எங்க பறக்குற? காலு கீழ இருக்கு' என்று உணர்த்துபவர்கள் இவர்கள்தான். வாழ்க்கையில் கொஞ்சமேனும் உயிர்ப்பு மிஞ்ச கடவுள் அனுப்பும் தேவ தூதர்கள். அவர்களுக்கே தெரியாது, கடவுள் அவர்களை அனுப்பி வைக்கும் கதை.

இப்போதுகூட ஒரு தேவ தூதர் வந்து சென்றார்:

"ஹே நண்பா, நகுலனோட 'சுருதி' கவிதை ஞாபகம் இருக்கா? 'ஒரு கட்டு வெற்றிலை/ பாக்கு சுண்ணாம்பு/ புகையிலை/ வாய் கழுவ நீர்/ ஃப்ளாஸ்க் நிறைய ஐஸ்/ ஒரு புட்டி பிராந்தி/ வத்திப்பெட்டி/ ஸிகரெட்/ சாம்பல் தட்டு/ பேசுவதற்கு நீ/ நண்பா/ இந்தச் சாவிலும்/ ஒரு சுகம் உண்டு!'"

தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x