Last Updated : 10 Apr, 2014 12:00 AM

 

Published : 10 Apr 2014 12:00 AM
Last Updated : 10 Apr 2014 12:00 AM

காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா?

பிரம்மபுத்திரா படகு வீடுகள், சாலையோரப் பரிதாப வாழ்க்கை, முண்டியடிக்கும் ரிக்‌ஷாக்களைப் பார்த்துக் கொண்டே அதிலிருந்து கொஞ்சம் பிரிந்து, நீலாஞ்சல் மலையைச் சுற்றிச் சுற்றி ஏறினால், மாயங் கிராமத்தை அடைந்துவிடலாம். இந்தியாவின் தாந்திரிக வழிபாட்டின் மையமான காமாக்யா கோயில் இங்கேதான் இருக்கிறது.

வெல்லும் சொல் கொல்லும்

சுற்றி அமைந்திருக்கும் மலைக் குன்றுகள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் காமாக்யா கோயிலில் நுழைவது - அதுவும் பொழுது சாய்ந்து செல்வது - திகிலூட்டும் ஓர் அனுபவம். மந்திர தந்திரங்களின் பூமி இது. சிவனை மணந்த இளம் மனைவியான சக்தியே இங்கு காமாக்யாவாக நின்று அருள்பாலிப்பதாக ஐதீகம். ஒரு குகையில், தரை மட்டத்துக்கும் கீழ் எப்போதும் நீர் சுரக்கும் சுனையிலிருக்கிறாள் உக்கிர தேவதை காமாக்யா.

எல்லாக் கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் காமாக்யா நிறைவேற்றுவதாக நம்பிக்கை. பலியை ஏற்கும் தாய் என்பதால், ரத்தக் கவுச்சி கோயில் வளாகத்தைச் சூழ்ந்திருக்கிறது. தரையிலும் ஆங்காங்கே ரத்தம். கோயில் படிக்கட்டுகளில் நீண்ட தாடியுடனும் மிரட்டும் விழிகளுடனும் கஞ்சா புகைக்கும் சாமியார்களில் மந்திரவாதிகளும் அடக்கம்.

வழிபாடுகள் உக்கிரமாக நடக்கின்றன. “எல்லாவற்றையும் குறியீடாகப் பார்க்கும் தாந்திரிக மரபின் சடங்குகளும் யோக வழிமுறைகளும் நுட்பமானவை. பொதுவில் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாதவை. தாய்வழிச் சமூகமான காரோ பழங்குடிகள் ஆரம்பக் காலத்தில் பன்றிகளைப் பலியிட் டார்கள்.

அந்த மரபு இப்போதும் தொடர்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆட்டுக் கடாக்களையே பலி கொடுக்கிறார்கள். திருவிழா காலத்தில் எல்லா வகையான ஆண் பிராணிகளும் பலியிடப்படும்” என்றார் உடன் வந்த நண்பர்.

பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பிறகு, ஒரு மந்திர வித்தகரைச் சந்தித்தோம். “சொற்களின் வலிமையும் கூர்மையும்தான் மந்திரங்கள். ஒரு மந்திரம் போதும், உங்கள் வாயைக் கட்டிப்போட்டுவிட; இன்னொரு மந்திரம் மூலம் உங்களை மறையச் செய்துவிடலாம். ஆனால், தர்மம் இல்லாமல் மந்திரங்களைப் பிரயோகிக்கக் கூடாது. பிரயோகித்தவன் பாவத்தை அனுபவிக்க வேண்டும். காமாக் யாவில் அருளும் மந்திரங்களின் வலிமையும் கட்டுக்கதை அல்ல. இதற்கெல்லாம் ஆதாரங்கள் உண்டு” என்றவர் கண் முன்னே ஒரு பூச்செடியின் முள் ஒன்றை ஒரு மந்திரத்தின் மூலம் பூவாக மாற்றினார். பின்னர், ஒரு இடை வெளிக்குப் பின் நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டவர், அந்தப் பூவை முள்ளாக மாற்றினார். “மந்திரங்கள் விளையாட்டு அல்ல; கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் இயல்பை நாம் மாற்றுவதை அன்னை ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள்” என்கிறார்.

அரண்டுபோய்விட்டார்களா ஆங்கிலேயர்கள்?

புராதனமான காமாக்யா கோயில் அசாமின் முதல் பேரரசான காமரூபா காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலைப் பற்றிய முதல் குறிப்புகள் மிலேச்ச வம்ச வனமாலா வர்மதேவர் ஆட்சிக் காலத்திய தேஜ்பூர் கல்வெட்டுகளில் (ஏழாம் நூற்றாண்டு)காணக் கிடைக்கின்றன. ஏகப்பட்ட படையெடுப்புகள், தாக்குதல்களுக்குப் பின் 500 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட கோயிலையே இப்போது பார்க்கிறோம் என்கிறார்கள். கோச் வம்சம், அஹோம் வம்சம், கச்சார் வம்சத்தோடு கோயிலைத் தொடர்புபடுத்தி வெவ்வேறான கதைகள் சொல்லப்பட்டாலும், கோயில் கதையைச் சொல்பவர்கள் யாவரும் ஆங்கிலேயர்கள் காமாக்யாவுக்கு அஞ்சி இங்கு கை வைக்க நடுங்கினார்கள் என்ற விஷயத்தைச் சொல்கிறார்கள்.

தாந்திரிக அறிஞர் மந்தீர் சாய்கியா, “மணிப்பூர் இளவரசர் மைபாங், கச்சார் சாம்ராஜ்யத்தை நிறுவினார். அவருடைய பெயர்களில் ஒன்றே ஊரின் பெயரான மாயாங். புத்தத் துறவிகள் இங்கு தாந்திரிகம் கற்றனர். அவர்கள் அசாமின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் பின் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தாந்திரிகத்தைக் கொண்டுசென்றனர்” என்று குறிப்பிடுகிறார்.

வாய்மொழி வழக்கில் இருந்த மந்திரங்களைக் கச்சார் மன்னர்கள்தான் எழுத்தில் பதிய ஊக்குவித்தார்கள். ஏராளமானவை தொலைந்து விட்டாலும் இப்போதும் அங்கும் இங்குமாக சுமார் நானூறு சுவடிகள் இருக்கின்றன. ஆனால், மந்திரங்களைத் தேவையில்லாமல் பிரயோகிக்கக் கூடாது; தேவியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் கூட்டம்

எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் என்று நம்பப்படும் ஒரு கோயிலை எப்படி விட்டுவைப்பார்கள் நம்முடைய அரசியல் வாதிகள்? வடகிழக்குப் பகுதி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவி கிறார்கள். “எப்போதும் கோடைக்காலத்தில் நடக்கும் அம்புபாச்சி மேளாவின்போதும் இலை யுதிர் காலத்தில் நவராத்திரி துர்கா பூஜை யின்போதும்தான் இங்கு கூட்டம் அலை மோதும். அப்போது நாடு முழுவதிலுமிருந்து தாந்திரிகர்கள் இங்கே வழிபட வருவார்கள். இப்போதெல்லாம் தேர்தல் காலகட்டத்திலும் கூட்டம் அதிகமாகிவிடுகிறது” என்கிறார் கோயில் வளாகத்தில் கடை வைத்திருக்கும் பூரி.

அரசியல்வாதிகளுக்கு காமாக்யாவின் மந்திர விற்பன்னர்கள் இடம் அளிக்கிறார்களா? இல்லை என்று வலுவாக மறுக்கிறார்கள். “காமாக்யா பீடத்தின் சக்தியைக் கேள்விப்பட்டு, மந்திரங்களைப் பயன்படுத்திப் பதவிக்கு வந்துவிடலாம் என்கிற நப்பாசையில்தான் அரசியல்வாதிகள் இங்கு வருகிறார்கள். ஆனால், இங்கு மந்திர விற்பன்னர்கள் அவர் களுக்கெல்லாம் துணைபோவது கிடையாது. தவிர, எல்லோருக்குமே ஒரு விஷயம் தெரியும் - மந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தினால், காமாக்யாவின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று. ஆகையால், வரு வார்கள், பிராத்தனை செய்வார்கள், பலி கொடுப்பார்கள், அவ்வளவுதான்” என்கிறார்கள்.

கோயிலை விட்டு வெளியேறியபோது சரசரவென வந்து புகுகின்றன கொடி கட்டிய நான்கு கார்கள். உள்ளிருந்து கச்சிதமான உடைகளில் இறங்குகின்றனர் அரசியல்வாதிகள். ஒரு காரிலிருந்து எதையோ எடுக்க/இழுக்க படாத பாடுபடுவது தெரிந்தது. நெருங்கிப் பார்த்த போது, மறுத்துக்கொண்டு வெளியே வந்தது ஒரு முரட்டுக் கடா. அதை இழுத்துக்கொண்டு கோயிலை நோக்கி முழங்கிக்கொண்டே நுழைகிறார்கள்: “ஜெய் காமாக்யா!”

தொடர்புக்கு: samas@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x