Last Updated : 05 Mar, 2015 08:37 AM

 

Published : 05 Mar 2015 08:37 AM
Last Updated : 05 Mar 2015 08:37 AM

அன்னை தெரசாவும் அவதூறு மழையும்

அன்னை தெரசாவைப் பற்றிய ஐந்து குற்றச்சாட்டுகள்

மோகன் பாகவத் தெரசாவைப் பற்றித் திருவாய் மலர்ந்தருளிய பின்னர், அவதூறு மழை பொழிந்துகொண்டே இருக்கிறது. ஒருவர் அவரை ஐக்மெனுடன் ஒப்பிடுகிறார். ஐக்மென் ஹிட்லரின் அடியாட்களில் ஒருவர். பல்லாயிரக் கணக்கான யூதர்கள் கொலை செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்தவர். ஒப்பீட்டுக்குக் காரணம், ஐக்மெனைப் போல அவரையும் மரண வெள்ளம் பாதிக்கவே இல்லையாம்.

நிர்பயாவை வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொன்றவ னின் மனப்பாங்குடன் அன்னை தெரசா இப்போது ஒப் பிடப்பட்டிருக்கிறார். காரணம், வல்லுறவை ஒரு விபத்து என்று கொலைகாரன் சொன்னதுபோல தெரசாவும் போபாலில் 1984-ல் நடந்த பேரழிவை விபத்து என்று சொன்னாராம். அடி மனத்தின் ஆழத்திலிருந்து பிறக்கும் வெறுப்பு நம்மை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது என்பதற்கு இந்த இரு உதாரணங்கள் போதும்.

ஒப்பிட்டவர் ஒரு முக்கியமான உண்மையை வசதியாக மறந்துவிடுகிறார். ஐக்மெனும், நிர்பயாவை வல்லுறவு செய்து கொன்றவனும் கொலைகளுக்கு நேரடியாகக் காரணமானவர்கள். தெரசா மரணத்தின் விளிம்பில் இருந்தவர்களின் கடைசித் தருணங்களை கூடியவரையில் துன்பமற்றதாக ஆக்க முயன்றவர்.

ஐந்து குற்றச்சாட்டுக்கள்

தெரசாவின் மீது ஐந்து குற்றச்சாட்டுக்கள் பொதுவாக வைக்கப்படுகின்றன.

1. அவர் மக்களின் துன்பங்களைப் பற்றிக் கவலைப் படாதவர். அவரது ‘நிர்மல் இருதயம்’ என அழைக்கப்படும் நிறுவனத்தால் இயக்கப்பட்ட இல்லங்கள் அசுத்தத்தின் வடிவங்கள். தூய்மைக் கேட்டின் பிறப்பிடங்கள்.

2. அவரது முக்கியமான குறிக்கோள் கிறிஸ்தவத்தைப் பரப்புவது.

3. அவர் எப்போதும் விளம்பரத்தை விரும்பினார். உலகத் தலைவர்களுடன், குறிப்பாக சர்வாதிகாரிகளுடன் குலாவுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம்.

4. அவர் கருக் கலைப்புக்கு எதிராக இருந்தவர்.

5. அவருக்குக் கோடிக் கணக்கில் பணம் வந்தது. அது எங்கே சென்றது என்பது யாருக்கும் தெரியாது.

முதல் குற்றச்சாட்டு

தெரசா புகழ்பெற்றது 1965-ல்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், அவர் 1948-ம் ஆண்டிலிருந்தே கொல்கத்தாவில் ஏழை மக்களிடையே இயங்கிக்கொண்டிருந்தார். அவர் வாழ்ந்த வாழ்வைப் பற்றி கணக்கற்ற மனிதர்கள் பலர் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர் எத்தனை தடைகளைச் சந்திக்க நேர்ந்தது என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர் ஏழைகளுக்கு அமைத்த இல்லங்கள் ‘தூய்மையின் இருப்பிடங்கள்’ என்று சொல்ல முடியாது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் இருக்கும் எவரும் ஏழை மக்கள், அதிலும் மரணத்துக்கு எதிரும் புதிருமாக இருப்பவர்கள், புழங்கும் இடங்களை மேற்கத்தியர் எதிர்பார்க்கும் தூய்மையோடு வைத்துக்கொள்வது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். பலர் இது பொய்யான குற்றச்சாட்டு என்றும் சொல்லி யிருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் பார்த்ததை மட்டும் வைத்துக்கொண்டு 50 வருடப் பொதுவாழ்வு முழுவதையும் ஒதுக்கித் தள்ளுவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?

இரண்டாவது குற்றச்சாட்டு

அல்பியோன் என்பவர் தெரசாவைப் பற்றி புத்தகம் ஒன்று எழுதியிருக்கிறார். அதில் அவருக்கும் கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு இடையே நடந்த உரசல்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். தெரசா தனக்கென்று ஒரு தனிப் பாதையை அமைத்துக்கொண்டார் என்பதில் ஐயம் இல்லை. உலகம் முழுவதும் கன்னிகாஸ்திரீகள் இயங்கியிருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் கிடைக்காத புகழ் அன்னைக்குக் கிடைத்ததன் காரணம் என்ன? அவர் அரிதினும் அரிதானவர் என்பதால்தான்.

அவர், கிறிஸ்தவர்கள் அதிகம் இல்லாத இந்தியாவில் தனது பணியைச் செய்தார். அவரது இல்லங்களுக்கு வருபவர்களின் மதம் என்ன என்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. நேரடியாக மதமாற்றப் பிரச்சாரத்தை அவர் செய்ததாக எந்த நம்பத் தகுந்த செய்தியும் எனக்குத் தெரிந்து இல்லை. அவ்வாறு செய்திருந்தால் இந்து, இஸ்லாமிய நிறுவனங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் அமைதியாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. மேற்கு வங்காளத்தில் இருக்கும் கிறிஸ்தவர்கள் சுமார் ஐந்து லட்சம் பேர். மக்கள்தொகையில் 0.6% மட்டும். எனவே, தெரசா மதமாற்றம் செய்ய முயன்றார் என்பது கட்டுக்கதை. மேலும், அவரிடம் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் மரணத்தைத் தழுவுவதற்குச் சில நாட்களே இருந்த நிலையில் வந்தவர்கள். கிறிஸ்தவ மதம் பெருகி வளர்வதற்கு அவர்கள் எந்த விதத்திலும் உறுதுணையாக இருந்திருக்க முடியாது.

மூன்றாவது குற்றச்சாட்டு

தெரசா உலகத் தலைவர்களிடமும் சர்வாதிகாரி களிடமும் பழகினார் என்பதில் உண்மையிருக்கிறது. ஆனால், தெரசா அரசியல்வாதியல்ல. புரட்சிக்காகத் துடித்தவரும் அல்ல. அவர் ஏழைகளுக்குத் தொண்டு செய்ய விரும்பினார். யாரெல்லாம் அவருக்கு உதவி செய்தார்களோ அவர்களிடம் சென்றார். அவர் அரசியலில் ஈடுபடவில்லை என்பதே பல நாடுகளிலிருந்து அவருக்கு உதவி வருவதற்குக் காரணமாக இருந்தது. ஊடகங்கள் அவர் புகழ்பெறுவதற்கு மிகவும் உதவின என்பதும், அவர் ஊடகங்களை மிகத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டார் என்பதும் உண்மை. ஆனால், ஊடகங்கள் அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலும் அவர் தனது பணியைத் தொடர்ந்து செய்துகொண்டு இருந்திருப்பார். அவரது பணியின் முதல் 17 வருடங்கள் ஊடக வெளிச்சத்தில் நடைபெற வில்லை. ஏழைகளுக்குத் தொண்டுசெய்வது ஏசுவுக்குத் தொண்டுசெய்வது என்ற நம்பிக்கையில் அவர் உறுதியாக இருந்தார். நலிவுற்றவர் ஒருவரின் உடலைத் தொடுவது ஏசுவின் உடலைத் தொடுவது என்று அவர் நம்பினார். தான் சமூகசேவகி என்று ஒருபோதும் அவர் சொல்லிக்கொண்டதில்லை. தனது நோபல் பரிசு ஏற்புரையில் இதைத் தெளிவாக அவர் விளக்குகிறார்.

நான்காவது குற்றச்சாட்டு

கருக் கலைப்புக்கு எதிராக அவர் இருந்தார் என்பதும் உண்மை. அவர் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர். அவரது மதம் கருக் கலைப்புக்கு எதிரானது. அவர் கலைப்பை ஆதரித்திருக்க வேண்டும் என்று சொல்வது, மாட்டு மாமிசம் சாப்பிடுவதை இந்துத் துறவிகள் ஆதரிக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஒப்பானது. ஆனாலும், அவர் ஏழைகளிடையே கருத்தடை உத்திகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். இதனால் பல பெண்கள் கருவடையாமல் இருந்தார்கள் என்பதைப் பெருமையோடு அவர் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐந்தாவது குற்றச்சாட்டு

அவர் புகழடைந்ததும் அவரது நிறுவனத்துக்குப் பணம் வந்து குவிந்தது. கோடிக் கணக்கில். இந்தப் பணம் எல்லாம் எங்கே மாயமாக மறைந்தது என்ற கேள்வி அன்னை இருக்கும்போதும் கேட்கப்பட்டது. இன்றும் கேட்கப்படுகிறது. நியூயார்க் வங்கி ஒன்றில் மட்டும் 5 கோடி டாலர்கள் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்ததாக ஹிட்சென்ஸ் தனது நூலில் சொல்கிறார். 50,000 டாலர்களுக்குக் காசோலை வருவதெல்லாம் சாதாரணம் என்றும் அவரது நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர் சொல்கிறார்.

இந்தப் பணம் எல்லாம் எங்கே போயிற்று? சொந்தச் செலவுக்காகப் பணத்தைப் பயன்படுத்திக்கொண்டார், அல்லது உறவினர்களுக்காகச் செலவிட்டார் என்று யாரும் குற்றம் சாட்டவில்லை. ஏழைகளுக்காக வந்த பணத்தில் பெரும் பகுதி வத்திகன் வங்கிக்குச் சென்றுவிட்டது என்று சொல்லப்படுகிறது. அன்னையின் நிறுவனத்தை இன்று நடத்துபவர்கள் கணக்குவழக்குகளைப் பொதுமக்களுக்கு முன் வைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதுவரை குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டே இருக்கும்.

எது எப்படியிருந்தாலும், அவரது நிறுவனம் 133 நாடுகளில் இயங்குகிறது. 4,000 சகோதரிகள் அவற்றில் பணிபுரிகிறார்கள். அவர்கள் ஐக்மெனின் மறுமாதிரி அல்லர், நிர்பயாவைக் கொலை செய்தவனைப் போல ஈரப்பசை இல்லாத இதயம் உள்ளவர்கள் என்று கருத முடியாது. அவர்கள் தொடர்ந்து ஏழைகளுக்காகத் தொண்டு செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அன்னையின் வழி வந்தவர்கள். அவர்களுக்கு நன்றி சொல்வது மன்னிக்க முடியாத குற்றம் என்று நான் கருதவில்லை.

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x