Last Updated : 01 May, 2015 10:48 AM

 

Published : 01 May 2015 10:48 AM
Last Updated : 01 May 2015 10:48 AM

அறிவோம் நம் மொழியை: கடலின் 200 பெயர்கள்!

கடந்த வாரம் கடலின் 32 பெயர்களைக் கொடுத்திருந்தோம். அதற்கே மலைத்துப்போனால் எப்படி என்று ‘தி இந்து’ வாசகர் ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் ஒரு பட்டியலை அனுப்பியிருக்கிறார். தமிழில் கடலுக்கு இருக்கும் 200 பெயர்களைக் கொண்ட பட்டியல் அது. அந்தப் பட்டியல் இங்கே:

அடங்காவாரிதி, அத்தி, அபாம்பதி, அம்பரம், அம்புதி, அம்புநிதி, அம்புராசி, அம்புவி, அம்போதி, அம்போநிதி, அம்போராசி, அரலை, அரி, அரிணம், அருணவம், அலை, அலைநீர், அலைவாய், அவாரபாரம், அழுவம், அளக்கர், அன்னவம், ஆர்கலி, ஆலம், ஆழம், ஆழி, இந்துசனகம், இரத்தினகருப்பம், இரத்தினாகரம், இரைநீர், உததி, உதரதி, உந்தி, உப்பு, உரகடல், உரவுநீர், உலாவுநீர், உவரி, உவர், உவர்நீர், உவா, ஊர்திரை, ஊர்திரைநீர், ஊர்மிமாலி, எற்றுந்திரை, ஓதம், ஓதவனம், ஓலம், கசங்கலம், கடல், கடும்புனல், கயம், கலி, கழி, கார்கோள், கார்மலி, கார்வலயம், கிடக்கை, கிடங்கர், கிருபீடபாலம், கீழ்நீர், குரவை, கூபாரம், கொறுக்கை, சகரநீர், சக்கரம், சசி, சமுத்திரம், சரிதாம்பதி, சரிற்பதி, சலகாங்கம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சலாபாகரம், சாகரம், சிந்து, சிந்துவாரம், சீவனியம், சூழி, தரங்கம், தரணீபூரம், தரங்கர், தரந்தம், தவிசம், தாரதம், தாரீடம், தாவிஷம், திமி, திமிகோடம், திரை, துனிநாதம், தெண்டிரை, தேனம், தொன்னீர், தோயதி, தோயநிதி, தோயம், தோழம், நதனதீபதி, நதாதிபதி, நதிபதி, நதீனம், நரலை, நாரம், நாமநீர், நிதி, நித்தியம், நீத்தம், நீரதி, நீரநிதி, நீரம், நீர், நீர்நீதி, நீராழி, நீருடைவரப்பு, நெடுங்கடல், நெடுநீர், நெடும்புனல், நேமி, பயோதகம், பயோதசம், பயோததி, பயோதி, பயோநிதி, பரவை, பரந்தநீர், பராங்கவம், பரு, பாதோதி, பாதோநிதி, பாராவாரம், பாலை, பாழி, பானல், புணரி, புரணம், புறவிடன், புனல், பூரணம், பெருங்கடல், பெருநீர், பெருவனம், பேராளி, பேரு, பௌவம், மகரசலம், மகரநீர், மகராங்கம், மகரி, மகாகச்சம், மகாசயம், மகான்னவம், மகீப்பிராசீரம், மகோததி, மங்கலமொழி, மஞ்சம், மாதங்கம், மாதோயம், மாறாநீர், மந்திரம், மிதத்துரு, மிருதோற்பவம், மீரம், மீனாலயம், முண்டகம், முதனீர், முதுகயம், முதுநீர், முந்நீர், முன்னீர், யாதபதி, வரி, வருணம், வருணன், வலயம், வாங்கம், வாகினீபதி, வாரகம், வாரகி, வாரணம், வாரம், வாராகரம், வாராநிதி, வாரி, வாரிதி, வாரிநாதம், வாரிநிதி, வாரிராசி, வாரீசம், வாருணம், வாருதி, விரிநீர், வீங்குநீர், வீசிமாலி, வீரை, வெள்ளம், வேலாவலையம், வேலை.

இவற்றில் சில சொற்களுக்குப் பழந்தமிழ் அகராதிகளில் பொருள் தேடிப் பார்க்கும்போது ‘கடல்’ என்ற பொருள் கிடைக்கவில்லை. எடுத்துக்காட்டாக, ‘அடங்காவாரிதி’ என்ற சொல்லுக்குக் ‘கடல் உப்பு’ என்ற பொருளையே காண முடிகிறது. அதேபோல் ‘மங்கலமொழி’ என்ற என்ற சொல்லுக்கும் கடலுக்கும் என்ன பொருள் என்று தெரியவில்லை. இதுபோன்ற சில சொற்களுக்குக் ‘கடல்’ என்ற பொருள் இருப்பதற்கான ஆதாரத்தை வாசகர்கள் அனுப்பிவைக்கலாம். மற்றபடி இதில் உள்ள பெருவாரியான சொற்களுக்கு இலக்கிய வழக்குகளிலும் மீனவர்கள் வழக்குகளிலும் ‘கடல்’ என்ற பொருள் இருக்கிறது.

வட்டாரச் சொல் அறிவோம்!

‘தவடை’ என்ற சொல்லைத் தெரியுமா? ‘கன்னம்’ என்ற பொருளில் வேலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் வழங்கப்படும் சொல் இது. ‘கன்னத்தில் மாறி மாறி அறைஞ்சிடுவேன்’ என்று பிற வட்டாரங்களில் சொல்வதை வேலூர் வட்டாரத்தில் ‘தவடை தவடையா அறைஞ்சிடுவேன்’ என்றும் சொல்வது உண்டு. கன்னத்தில் விழும் அறையைக் குறிப்பதற்கு ‘தவடைசுத்தி’ என்ற சொல்லும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x