Last Updated : 22 May, 2018 09:11 AM

 

Published : 22 May 2018 09:11 AM
Last Updated : 22 May 2018 09:11 AM

உயிரினப்பன்மையின் முக்கியத்துவத்தை உணர்வோம்!

லர்களிடையிலான மகரந்தச் சேர்க்கையை பூச்சி இனங்கள் எவ்வளவு எளிதாகச் செய்துமுடிக்கின்றன! உயிரினப்பன்மையின் (பயோ-டைவர்சிட்டி) முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இந்த ஒரு உதாரணம் போதும்.

உயிரினப்பன்மை அல்லது உயிரினப் பல்வகைமை என்பது ஒரு நாட்டின் அனைத்து உயிரின வகைகள், அவற்றுக்குள் நிலவும் மரபுப் பன்மை, அவை வாழும் சூழல் பன்மைகளை உள்ளடக்கியது. பல வளரும் நாடுகளில் மக்களின் வாழ்வாதாரமாகவும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் உயிரினப்பன்மை விளங்குகிறது. பெரும்பாலான மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், நலவாழ்வுக்கான மருந்துகள் ஆகியன இன்றைக்கும் உயிரினப்பன்மையாலேயே நிறைவு செய்யப்படுகின்றன. இதன் நேரடிப் பயன்பாடுகள் பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ளப்பட்டாலும், அது தரும் சூழலியல் சேவைகள் இன்னமும் முழுமையாக உணரப்படாமலேயே இருக்கின்றன.

தமிழகத்தில் ஏறக்குறைய 5,640 பூக்கும் தாவரங்கள், 534 பறவை இனங்கள், 3,609 பூச்சி இனங்கள், 2,500 மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய செறிவான உயிரினப்பன்மை வளத்துக் குத் தமிழ்நாட்டின் பல்வேறு வகையான நிலப்பரப்புகளும் பருவ நிலையும் முக்கியக் காரணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரினப்பன்மையைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும், அதைச் சார்ந்த மக்கள்அறிவு வணிகமயமாக்கப்படும்போது கிடைக்கும் பயன் உரிய முறையில் மக்களுக்குப் போய்ச்சேரும் வகையிலும், உயிரினப்பன்மைச் சட்டத்தை மத்திய அரசு 2002-ல் நிறைவேற்றியது. இச்சட்டத்தின் அடிப்படையில் தேசிய உயிரினப்பன்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதன் கீழ் மாநில உயிரினப்பன்மை வாரியங்களும் ஒவ்வொரு மாநில வாரியத்தின் கீழ் உயிரினப்பன்மை மேலாண்மைக் குழுக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நம் நாட்டின் உயிரினப்பன்மையை வணிகமயமாக்கலுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும்போது அதற்குரிய அனுமதியை, தகுந்த அமைப்பின் மூலம் பெறுவதுடன், அதன் பலன்களின் பங்கை மக்களுக்கு உரிய முறையில் தருவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டும்.

உயிரினப்பன்மையின் அடிப்படையிலோ, அதைச் சார்ந்த மக்கள் அறிவின் அடிப்படையிலோ ஒரு தனி நபர் அல்லது ஒரு நிறுவனம் அறிவுசார் சொத்துரிமைக்காக விண்ணப்பிக்கும்போது இந்திய உயிரினப்பன்மை ஆணையத்திடம் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய உயிரினப்பன்மைச் சட்டத்தைப் பற்றியோ, சென்னையைத் தலைமையகமாகக்கொண்டிருக்கும் உயிரினப்பன்மை ஆணையம் குறித்தோ மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இவற்றை அறிந்துகொள்வதுடன் இச்சட்டத்தின் வழிமுறையைப் பின்பற்றி, சட்டச் சிக்கல்கள் இல்லாமல் உயிரினப்பன்மை, அதைச் சார்ந்த மக்கள் அறிவைப் பயன்படுத்துவதை அனைத்து தரப்பினரும் உறுதிசெய்ய வேண்டும். இந்தச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதில் ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்குப் பெரும் பங்கிருக்கிறது. தேசிய உயிரினப்பன்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு உயிரினப்பன்மை வாரியத்தின் வலைப்பக்கங்களில் இதுதொடர்பான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. பயன்படுத்திக்கொள்வது நம் கையில்தான் உள்ளது!

து. நரசிம்மன்,

தாவரவியல் போரசிரியர் (ஓய்வு),

தமிழ்நாடு உயிரினப்பன்மை வாரிய உறுப்பினர்.

மே 22 – சர்வதேச உயிரினப்பன்மை தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x