Last Updated : 22 Feb, 2018 09:16 AM

 

Published : 22 Feb 2018 09:16 AM
Last Updated : 22 Feb 2018 09:16 AM

உயர் அழுத்த மின்தடங்கள்: விவசாயத்துக்கு அச்சுறுத்தல்

மிழ்நாட்டில் 30 உயர் அழுத்த மின்தடங்களுக்கு மத்திய மின்சார வாரியமும் தமிழக அரசும் 2015-ல் அனுமதி அளித்தன. சில வழித்தடங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் ‘பவர்கிரிட் கார்ப்பரேஷ’னும் தமிழக மின்சார வாரியமும் இணைந்து இந்தப் பணிகளை நிறைவேற்றிவருகின்றன.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் உள்ள புகழூரில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மின்நிலையம் அமைக்கப்பட்டுவருகிறது. அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இடையர்பாளையத்தில் மற்றொரு மின்நிலையம் அமைக்கப்பட்டுவருகிறது. உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின் பாதைகள் மூலம் மின்சாரம் இங்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கர்நாடகம்,கேரள மாநிலங்களுக்கும், ஆந்திரம் வழியாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கும் கொண்டு செல்லப்படவிருக்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 16 மாவட்டங்கள் வழியாக இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படவிருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 2,024 கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிதாக உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இப்பணிகள் முடிக்கப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் இன்னும் சில ஆண்டுகளில் உயர் மின் அழுத்த கம்பிகளால் பாகற்காய்க்குப் பந்தல் அமைத்தது போல் ஆகப்போகிறது.

நடைமுறைகள் என்னவாகின?

எந்தவொரு திட்டத்துக்கு நிலம் எடுப்பதாக இருந்தாலும், பயன்படுத்திக்கொள்ளும் உரிமையாக இருந்தாலும் யாருடைய நிலம், பரப்பளவு, சர்வே எண், அதற்கான இழப்பீடு எவ்வளவு போன்ற விவரங்களை அரசு வெளியிடுவதுதான் நடைமுறை. ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் இத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லை.

இது விவசாயிகள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப்போல, அரசின் எந்தவொரு திட்டத்துக்கு நிலம் தேவைப்பட்டாலும் நிலத்தின் உரிமையாளரிடம் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தி அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தேவைப்படும் நிலம் குறித்து கருத்துக்கேட்புக் கூட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடத்தவில்லை.

நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் சட்டம் 2013-ன்படி அரசினுடைய திட்டங்களுக்கு நிலம் எடுப்பதாக இருந்தால் 70% விவசாயிகளின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற வேண்டும். தனியார் திட்டங்களுக்கு நிலம் எடுத்தால் 80% விவசாயிகளின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற வேண்டும்.

நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கையகப்படுத்தும் நிலத்துக்கு நகர்ப்புறமாக இருந்தால் சந்தை மதிப்பில் இரு மடங்கும் கிராமப்புறமாக இருந்தால் சந்தை மதிப்பில் நான்கு மடங்கும் இழப்பீடாகத் தர வேண்டும். மாற்று நிலம் தர முயற்சிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிலத்தை இழக்கக்கூடிய விவசாயிகளையும் அதைச் சார்ந்துள்ளவர்களையும் பாதுகாக்கும் வகையில் உள்ளன. இந்தச் சட்டத்தில் உள்ள அம்சங்கள் எதுவும் இத்திட்ட அமலாக்கத்தில் கடைப்பிடிக்கப் படவில்லை.

இத்திட்டம் அமல்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது மத்திய எரிசக்தித் துறை. அதில், மாவட்ட ஆட்சியர்கள், வழிகாட்டி மதிப்பின்படி மின் கோபுரங்கள் அமைக்கும் இடத்துக்கு 85%, மின்கம்பி வழித்தட நிலங்களுக்கு 15% வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது குறைவானது என்றாலும், இந்த வழிகாட்டல்களையும்கூட தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை என்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திட்டத்தை நிறைவேற்றும் ஒப்பந்தக்காரர்கள் அவரவர் விருப்பத்துக்கேற்ப விவசாயிகளுக்கான இழப்பீட்டை தீர்மானிக்கிறார்கள். “இது மத்திய அரசின் திட்டம். நீங்கள் நிலத்தைத் தரவில்லையென்றாலும் நாங்களே எடுத்துக்கொள்வோம்” என்று மிரட்டியும்கூட சில ஒப்பந்தக்காரர்கள் பணிகளைச் செய்கிறார்கள். தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகள் ஒன்றுசேர்ந்து இத்தகைய பணிகளைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

நிலத்தின் மேலே தானே மின்கம்பிகள் செல்கின்றன; அதனால் என்ன சிக்கல் என்ற கேள்வியும்கூட எழலாம். பெரும்பாலான விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரம், அவர்களின் சாகுபடி செய்யும் நிலம் மட்டும்தான். அதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு மீளமுடியாததாக இருக்கிறது. நிலத்தின் மதிப்பு குறைகிறது, அந்நிலத்தை வாங்க யாரும் முன்வர மாட்டார்கள். உயரமான தென்னை, தேக்கு உள்ளிட்ட மரப் பயிர்களை வளர்க்க முடியாது. ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க முடியாது. ஆழ்குழாய் அமைந்துள்ள இடத்தில் மீண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்திப் பராமரிப்புப் பணிகளைச் செய்ய முடியாது. கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ள முடியாது.

உயர் அழுத்த மின்தடம் செல்லும் இரு பகுதிகளிலும், எத்தனை கிலோ வாட் என்பதைப் பொறுத்து 40 மீட்டர் முதல் 90 மீட்டர் அகலத்துக்கு இடைவெளி விட வேண்டும். அந்தப் பரப்பளவுக்குள் மேற்கண்ட பணிகள் எதையும் செய்ய முடியாது. அநேகமாக, சிறு- குறு விவசாயிகளாக இருந்தால் மொத்த நிலமும் இழந்ததைப் போலத்தான். உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் மின்தூண்டல் காரணமாகப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இயந்திரங்களைக் கொண்டு விவசாயப் பணிகள் செய்ய முடியாது.

எனவே, மாற்று முறையில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய - மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பெருநகரங்களிலும் ‘கேபிள்’ மூலமாக உயர் அழுத்த மின்சாரம் கொண்டுசெல்லப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டிலும், விவசாய நிலத்துக்குப் பாதிப்பில்லாத வகையில் கேபிள் மூலம் இத்திட்டத்தை நிறைவேற்றலாம். இல்லையென்றால் நிலத்தை வழங்கும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் கணக்கில் கொண்டு அதை ஈடுகட்டும் வகையில் இழப்பீடு வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்.

- பெ.சண்முகம்,

மாநிலப் பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,

தொடர்புக்கு: pstribal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x