Last Updated : 02 Nov, 2017 09:28 AM

 

Published : 02 Nov 2017 09:28 AM
Last Updated : 02 Nov 2017 09:28 AM

இந்தப் பிறவி தலைவருக்கானது! - கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி

கருணாநிதியின் நிழலாகத் தொடரும் அவருடைய செயலர் சண்முகநாதன் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலில் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியின் இறுதிப் பகுதி இது. கருணாநிதிக்கும் அண்ணாவுக்கும் இடையே இருந்த நெருக்கம், முரண்பாடுகள்; மாறனுக்கும் கருணாநிதிக்கும் இடையிலிருந்த பிணைப்பு; கருணாநிதிக்கும் தனக்குமான உறவின் ஆழம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்கிறார் சண்முகநாதன்.

கருணாநிதியின் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமான ஒருவராக இருந்தவர் யார் - உங்கள் பார்வையில்?

மாறன்! ஏதோ உறவு சார்ந்து மட்டுமான நெருக்கம் இல்ல அது. கட்சி, ஆட்சின்னு எல்லாத்துலேயும் பக்க பலமா இருந்தவர் மாறன். ‘மாமா, மாமா’ன்னு உயிரை விடுவார். தனக்கு மனசுல என்ன பட்டுச்சோ அதைச் சொல்லிடுவார்; தலைவர் கருத்தைப் பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டார். கடுமை யான வாசிப்பாளி. தேசிய அரசியல் போற போக்குகளையும் கட்சி எடுக்க வேண்டிய முடிவுகளையும் பத்தி ரொம்ப நுட்பமா கவனிச்சு தலைவர்கிட்ட விவாதிப்பார்.

எதிர்க்கட்சியா இருக்கும்போது ஆளுங்கட்சியோட ஊழல்கள் கையில சிக்கும்போது அந்த ஆவணங்களெல்லாம் நூத்துக்கணக்கான பக்கங்கள்ல இருக்கும் - அதையெல்லாம் படிச்சு விலாவரியா விளக்குவார். கட்சியோட டெல்லி முகமாகவும் சித்தாந்த முகமாகவும் ஒரு காலகட்டம் முழுக்க அவர் இருந்திருக்கார். ‘மாநில சுயாட்சி’யில ரொம்பப் பிடிமானம் உள்ளவர். தப்பு பண்ணுற கட்சிக்காரங்களை உள்கட்சிக் கூட்டங்கள்ல பிடிபிடின்னு பிடிச்சுடுவார். என் மேலேயும் ரொம்பப் பிரியமா இருப்பார். மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையில சமயத்துல முட்டல் மோதல் வந்துரும். போறபோக்குல என்னைத் திட்டிட்டுப் போவார் மாறன்.

“பாத்தியாய்யா, உன்னைத் திட்டுற மாதிரி அவன் என்னைத் திட்டிட்டுப் போறான்”னு சொல்வார் தலைவர். ஆனா, ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்துக்க மாட்டாங்க. மாறனோட மனைவிகிட்ட ஒருமுறை தலைவர் சொன்னது ஞாபகத்துக்கு வருது: “உனக்கு 35 வருஷமாத்தான் மாறனைத் தெரியும். எனக்கு அவன் பிறந்ததில் இருந்தே தெரியும்!”ன்னார். மாறனோட மரணம் தலைவரோட வாழ்க்கையில பெரிய இழப்பு. “அவன் போயிருக்கக் கூடாது; அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கணும்யா”னு சொல்வார். அதே மாதிரி அண்ணா மேல அவருக்கிருந்த மதிப்பு ரொம்ப உணர்ச்சிபூர்வமானது.

அண்ணா இருக்கும்போது அவரோடு நிறைய முரண்பாடுகளும் இவருக்கு இருந்தது இல்லையா?

அடிப்படையில பெரியார்கிட்டேயிருந்து உருவான ஆறு தான் தலைவர். அண்ணாவும் பெரியாரோடு வந்து கலந்த ஆறுன்னாலும் அவருக்குன்னு தனித்த பார்வை ஆரம்பத்துலேர்ந்தே இருந்துருக்கு. திமுக உருவானப்போ பெரியாரை யும் தாண்டி அண்ணாகூட தலைவர் நின்னார்னா அதுக்குப் பின்னிருந்த விஷயங்களை நாம பார்க்கணும். அண்ணாவை ஒரு அண்ணனாவேதான் தலைவர் பார்த்துருக்கார். பல விஷயங்கள்ல அண்ணா முடிவெடுக்குற தருணங்கள்ல பக்கபலமா இருந்துருக்கார்.

bookjpg‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் படைக்கும் ‘கேஎஸ்எல் மீடியா’வின் ‘தமிழ்-திசை’ பதிப்பகம் கொண்டுவந்திருக்கும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ நூலிலிருந்து...right

சம்பத், கண்ணதாசனுக்கெல்லாம் ஏற்பட்ட கோபமே தலைவரோட பேச்சுக்கு அண்ணா பெரிய மதிப்பு கொடுக்குறார்ங்கிறதாதானே இருந்துருக்கு! அதேசமயம், சில சமயங்கள்ல முரண்படவும் செஞ்சுருக்கார். சண்டையெல்லாமும் போட்டுருக்கார். வெளிக்காட்டிக்க மாட்டார்.

1959 சென்னை மாநகராட்சித் தேர்தல்ல, ‘30 இடங்கள்ல போட்டியிட்டால் போதும்’னு நெனைக்குற அண்ணாகிட்ட ‘90 இடங்கள்ல போட்டியிடுவோம்’னு சொல்லி 45 இடங்களையும் ஜெயிக்கவெச்சு மாநகராட்சியை முதல் முறையா கைப்பற்றுகிற முடிவுக்கு இவர்தானே காரணமா இருந்திருக்கார்! ஆனா, தான் சொல்லி அண்ணா செஞ்சதையும் சரி, அண்ணாவோட முரண்பட்ட தருணங்களையும் சரி; வெளிக்காட்டிக்குற குணம் அவர்கிட்ட என்னிக்கும் இருந்தது கிடையாது.

எனக்கே இதெல்லாம் அப்போ கூட இருந்தவங்க சொல்லித் தான் தெரியும்.

என் அனுபவத்துல அண்ணாங்கிற பெயரே அவரோட உயிரோட உணர்வுபூர்வமா பிணைஞ்சது. அண்ணா மேம்பாலம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நூலகம் இப்படி அண்ணா பெயரிலான கட்டிடங்கள்கூட விதிவிலக்கு இல்லை. அண்ணாவை நினைவுகூராத நாளை நான் பார்த்ததில்லை.

கட்சி அளவில் அவரைப் பெரிதாக உலுக்கிய நிகழ்வு எது?

மூணு காலகட்டங்களைச் சொல்லலாம். முதலாவது, நெருக்கடிநிலைக் காலகட்டம். கட்சிக்காரங்களைக் கொத்துக் கொத்தா போலீஸ் சிறைக்கு அள்ளிக்கிட்டுப் போனதும் அவங்களைச் சித்திரவதைக்குள்ளாக்குனதும் கட்சியை முடக்குறதுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அவரை ரொம்பப் பாதிச்சுச்சு. இரண்டாவது, இலங்கைத் தமிழர்கள் விவகாரம். வெவ்வேறு காலகட்டத்துல அது அவரைக் கடுமையாப் பாதிச்சுதுன்னாலும், இறுதிப் போர் நடந்தப்போ தவிச்சுப்போனார். ராஜிநாமா செஞ்சுடலாம்னுகூட அப்போ முடிவெடுத்தார்.

‘இல்லை; இப்போ பதவி யிலேயும் கூட்டணியிலேயும் இருந்து கொடுக்குற அழுத்தத்தைக்கூட வெளியே போய்ட்டா இலங்கைக்குக் கொடுக்க முடியாது; இலங்கைத் தமிழர்களுக்குப் பேசுறதுக்கே ஆள் இல்லாமப் போய்டும்’னு சொல்லி பலர் அதைத் தடுத்தாங்க. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ரெண்டு பேரும் உறுதியா பேசுனதாலதான் நம்பி உண்ணாவிரதத்தை நிறுத்தினார். ஆனா, எல்லாம் அவர் கைமீறி நடந்ததையும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை யும் பார்த்தப்போ துடிச்சுப் போனார். பிரபாகரன் இறந்த செய்தி வந்த அன்னிக்கெல்லாம் உடைஞ்சுட்டார். மூணாவது, அலைக்கற்றை விவகாரம்.

அவருக்குத் தெரியாம பல விஷயங்கள் இதுல நடந்துட்டாலும், ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி முறைகேடுன்னு அபாண்டமா சுமத்தப்பட்ட பழியை எல்லோரும் திரும்பத் திரும்பப் பேசிப் பெரிசாக்கி, திமுகவை முடக்குறதுக்கான பெரிய சூழ்ச்சியா இதைக் கையாண்டப்போ கடுமையா பாதிக்கப்பட்டார்.

நெருக்கடிநிலையின்போது உங்களையும் குறிவைத்தார்கள் இல்லையா?

கடுமையான நெருக்கடி கொடுத்தாங்க. வீட்டுக்கே போலீஸ்காரங்களை அனுப்பி வைப்பாங்க. திடீர்னு வீட்டுல புகுந்து, தலையணையெல்லாம் எடுத்து, “இதுக்குள்ளதான் பணத்தை ஒளிச்சி வெச்சிருந்தீங்களா?”ன்னு கேட்பாங்க. சோதனைங்கிற பேருல சித்திரவதை. அடிக்கடி வதந்தியைக் கிளப்பி உளவியல் நெருக்கடி. இப்படிப் பலதையும் செஞ்சாங்க. அதேசமயம், மத்தவங்களோட ஒப்பிடும்போது எனக்குக் குடைச்சல் கம்மின்னு சொல்லணும்.

தலைவருக்கு உதவியா இருந்த பலரைப் பிடிச்சுட்டுப் போய் அடிஅடின்னு அடிச்சுத் துவைச்சாங்க. கட்சிக்காரங்க பலரைச் சிறையில வெச்சு வதைச்சாங்க. போலீஸ் அடி உதையிலேயே சிட்டிபாபு செத்துப்போனார். தலைவர் கூட இருந்த பலர் அப்போ பயந்துக்கிட்டு வேலையை விட்டு ஓடிட்டாங்க. அப்போதான் அவருகூட இன்னும் உறுதுணையா இருக்கணும்னு எனக்குத் தோணுச்சு.

சரி, உங்கள் வீட்டில் இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?

என் வீட்டுக்காரங்க பெயர் யோகம். காரைக்குடி. என்னை மாதிரி அவங்களும் கஷ்டப்படுற குடும்பத்துலேர்ந்து வந்தவங்கதான். 1971-ல் எங்க கல்யாணம் நடந்துச்சு. பெங்களூர் போய்ட்டு காரில் திரும்பி வந்துக்கிட்டிருக்கோம். தலைவர் பேச்சுவாக்குல சொல்றாரு, “அடுத்த வாரம் இந்நேரம் சண்முகநாதன் பொண்டாட்டியோட இருப்பான்.” எனக்குத் திகைப்பாயிப் போச்சு. கிருஷ்ணகிரி பக்கம் ஒரு இடத்துல தலைவர் காபி குடிக்கிறதுக்காக இறங்கினாரு.

அப்ப நான் நைஸா சின்னம்மாகிட்ட கேட்டேன், “ஏம்மா, தலைவரு ஏதோ கல்யாணம்னு சொன்னாரே, என்னதும்மா?” அவங்கதான் பத்திரிகை முதற்கொண்டு அடிச்சு வெச்சிட்ட தகவலைச் சொன்னாங்க. தலைவர் சொல்லி கருணானந் தம் எல்லாத்துக்கும் ஏற்பாடு செஞ்சுருந்தார். கல்யாணத்து அன்னிக்கு எனக்கு, அழகிரிக்கு, ஸ்டாலினுக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி டிரஸ். சின்னம்மாவோட நகைகளை எல்லாம் பொண்ணுக்குப் போட்டு சிங்காரிச்சிருந்தாங்க. அப்போ ஆரம்பிச்சு என் குடும்பத்துல எல்லாத்துக்கும் அவர் முன்னாடி நின்னுருக்கார்.

எங்கப்பா ஆஸ்பத்திரியில இருந்தப்போ ‘ஏன் இன்னும் போய்ப் பார்க்கலை?’னு மொத்த குடும்பத்தையும் சத்தம் போட்டு அனுப்பிச்சார். அப்பா இறந்தப்போ முழு நாளும் கூடவே நின்னார். இப்படிப்பட்ட தலைவரோட ஏன் நிக்குறன்னு எப்படி ஒரு குடும்பம் கேட்கும்?

காலையில 7 மணிக்கு வருவேன், ராத்திரி 11 மணிக்குப் போவேன். மனைவிக்கும் பழகிடுச்சு, எங்களுக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. அவங்களுக்கும் பழகிடுச்சு! ஆட்சியில இருந்தப்போதான் ரெண்டு பசங்களும் பள்ளிக்கூடப் படிப்பை முடிச்சாங்க. அவங்க விரும்பின படிப்பு கிடைக்கலை. அதைக்கூட தலைவர்கிட்டே எடுத்துக்கிட்டுப் போகலை. “நீங்க எடுத்த மதிப்பெண்ணுக்கு என்ன படிப்பு கிடைக்குதோ அதையே படிங்க”ன்னு சொல்லிட்டேன்.

ரெண்டு பேருமே இன்னிக்குத் தனியார் நிறுவனத்துலதான் வேலையில இருக்காங்க. சொந்த பந்தத்துலேயேகூட “சண்முகநாதன் மிலிட்ரிமேன் மாதிரி. கடமைதான் அவனுக்கு முக்கியம்!”னு பேசுவாங்க. சனி, ஞாயிறு லீவு எடுத்தது இல்லை. ஒரு நல்லது கெட்டதுக்குப் போனதில்லை, ஊருக்குப் போக முடிஞ்சதில்லை. அக்கா, தங்கச்சி கல்யாணமா இருந்தாலும் - தலைவர் தலைமையில நடக்கும் - அதுக்கும் தலைவர் கூடவே போயிட்டு, தலைவர் கூடவே வந்துடுவேன்.

சென்னை வந்த புதுசுல சினிமா பார்க்குறதுல ஆர்வம் வந்துச்சு. ராஜ்கபூர் படம் ஒண்ணு பார்த்தேன். அதோட அதுவும் போயிடுச்சு. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் இப்போதான் ஒரு வாரம் ஊருக்குப் போய்ட்டு வந்தேன். அதுவும் “ஊருக்குக் குடும்பத்தோட போயி ஒரு வாரம் தங்கிட்டு வாய்யா; எப்போதான் ரெஸ்ட் எடுக்கப்போற”ன்னு ஸ்டாலின் ரொம்ப வற்புறுத்தி, சொல்லி அனுப்பினதால! இப்போ எனக்கு மாச பென்ஷன் 48 ஆயிரம் ரூபா வருது.

என் மூணு தம்பிகள்ல ரெண்டு பேர் கஷ்ட சூழல்ல இருக்காங்கங்கிறதால, அவங்களுக்கு மாசம் 10 ஆயிரம் ரூபா, தங்கைக்கு 10 ஆயிரம் ரூபா கொடுத்துடுவேன். அப்புறம் எங்க தெருவுல இருக்குற ஒரு ஆட்டோ டிரைவர், இங்கே இருக்குற தம்பிகள் இவங்களுக்கு அப்பப்போ முடிஞ்ச உதவிகளைச் செய்வேன். மிச்ச பணம் எனக்குத் தாராளமா போதும். வீட்டுலேயே கிடக்கலாம். ஆனா, என்னால முடியாது!

இரண்டு முறை நீங்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டீர்கள் அல்லவா?

அதெல்லாம் என்ன சார், சின்னச் சின்ன வருத்தங்கள்தானே! பொதுவா எனக்கு அவரோட கோபம் நிமிஷங்களைத் தாண்டாதுங்கிறது நல்லாப் புரியும். ஒரே விஷயம் என்னன்னா, செய்யாத தப்புக்குத் திட்டிட்டா என்னால தாங்க முடியாது. அவர் என்னை நிறையத் திட்டுவார். ஒருமுறை ரயிலில் போகும்போது திட்டிட்டார். அதுவும் நான் செய்யாத தப்புக்கு. சேர்ந்த புதுசுல அப்படி ஒரு நாள் ஆயிடுச்சு. ரயில்ல போய்க்கிட்டு இருக்கோம்.

நான் தனியா உட்கார்ந்து அழுதுக்கிட்டிருக்கேன். தலைவர்கூட அன்பில் தர்மலிங்கம் மாமா இருக்கார். அவர்கிட்ட சொல்லி, “யோவ் தப்பா திட்டிட்டேன். அவன் தாங்க மாட்டான். அழுதுக் கிட்டிருப்பான். நீ போய் சமாதானப்படுத்திக் கூட்டி வாய்யா!”ன்னு சொல்லி அனுப்பியிருந்தார். அன்பில் மாமா என்கிட்ட வந்து சொன்னார், “மாப்பிளை, இன்னிக்கு இல்லை; என்னிக்கும் இதை ஞாபகத்துல வெச்சிக்க. நாம விரும்பி தாலி கட்டிக்கிட்ட பொண்டாட்டி மாதிரி தலைவர். இப்படி ஒரு தலைவர் கிடைக்க மாட்டார். அவர்கிட்டேயும் சில குறைகள் இருக்கலாம். ஆனா, இப்பேர்ப்பட்ட மனுஷனை நாம பாதியில விட்டுட்டுப் போயிட முடியாது”ன்னார். அதைத்தான் நான் எப்பவும் நெனைச்சுக்குறது.

அழகிரி, ஸ்டாலின், தமிழரசு எல்லாருமே ஒண்ணோட ஒண்ணா பழகிட்டோம். அதனால, உரிமையா பதிலுக்குப் பதிலு பேசிட்டுச் சமாதானமாயிடுவோம். ரெண்டு முறை கோவிச்சுக்கிட்டு போனபோதும் யாரோ எதுவோ சொல்லி தலைவரும் அதை நம்பிட்டார்ங்கிற சூழல்லதான் போய்ட்டேன். அப்புறம் ஆள் விட்டு அனுப்புவார். ஓடியாந்துருவேன். அவர்கூட இருந்துட்டு பிரிஞ்சு இருக்க முடியாது சார். இதோ, அவர் பேசிப் பல மாதங்கள் ஆகுது. இங்கே எனக்குப் பெரிசா எந்த வேலையும் இல்ல. ஓடியாந்துர்றேனே, எதுக்காக? நேத்திக்கூட அவரோட அறைக்குப் போய்ப் பார்த்தேன்.

மௌனமா இருந்தார். “ஐயா, ஒரு நாளைக்கு நூறு வாட்டிக் கூப்பிடுவீங்களே, ஒரு வாட்டி திட்டவாவது செய்யுங்களேன்”னேன். அவர் ஏதோ பேச வர்றாரு. ஆனா வார்த்தை வரலை. “நீங்க இருந்தா போதுமய்யா. நான் இருந்து என்ன பிரயோஜனம்?”னு கேட்டுக் கதறிட்டு வந்தேன். எத்தனை லட்சம் பேர் காத்துக் கிடக்குறோம், ஒரு வார்த்தைக்காக. என்னோட இந்தப் பிறவி தலைவருக்கானது சார். அவர் இல்லாம நான் இல்லை!

- சமஸ்
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x