Last Updated : 01 Nov, 2017 09:31 AM

 

Published : 01 Nov 2017 09:31 AM
Last Updated : 01 Nov 2017 09:31 AM

வெள்ளையடிக்கக்கூட மத்திய அரசு அனுமதி வேணும்கிற சூழல்தான் மாநில சுயாட்சியை நோக்கித் தள்ளுச்சு!- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி

கருணாநிதியின் நிழலாகத் தொடரும் அவருடைய செயலர் சண்முகநாதன் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலில் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியை நான்கு அத்தியாயங்களாக நம்முடைய நடுப்பக்கத்தில் வெளியிடுகிறோம். ஒரு முதல்வராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் கருணாநிதி எப்படியெல்லாம் பணியாற்றினார் என்பதை இன்று பகிர்ந்துகொள்கிறார் சண்முகநாதன்.

முதல்வர் கருணாநிதி - எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. ஒப்பிடுங்கள்...

எந்தப் பதவியில இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; காலையில 4.30 மணிக்கு எழுந்துடுவார். நான் காலையில 7.30 மணிக்கு இங்கே வருவேன். அதுக்குள்ள எல்லாப் பத்திரிகைகளையும் படிச்சுட்டு, உடற்பயிற்சி முடிச்சிக் குளிச்சுட்டு, ‘முரசொலி’ கடிதம் முடிச்சுட்டுத் தயாராகிடுவார். நாளெல்லாம் வேலை முடிச்சு இரவு படுக்கைக்குத் திரும்ப 11 மணி ஆயிடும். அப்புறம்தான் நான் வீட்டுக்குக் கிளம்புவேன். அப்புறமும் 12 மணி வரைக்கும் ஏதாவது வாசிச்சுட்டு தான் படுப்பார். சட்ட மன்றம் அவரைப் பொறுத்தமட்டுல ரொம்ப முக்கியமான இடம். ஆளுங்கட்சியா உட்கார்ந்திருந்தாலும் சரி, எதிர்க்கட்சியா உட்கார்ந்திருந்தாலும் சரி; பள்ளிக்கூடப் பரீட்சைக்குப் போற மாணவனை மாதிரிதான் தயாராவார். இரவெல்லாம் படிப்பார். அதுவும் பட்ஜெட் சமயம்னா கேட்கவே வேணாம். அவரு வேகத்துக்கு ஈடுகொடுக்கத் திணறணும். உரைகளை டிக்டேட் பண்ணும் போது ஏதோ இன்னொரு ஆள் அவருக்குள்ளே புகுந்துகிட்ட மாதிரி இருக்கும். உண்மையான ஆவேசம் இருக்கும்.

சமத்துவபுரம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம், உள்ளாட்சியிலேயும் அரசுப் பணிகள்லேயும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு இதையெல்லாம் கொண்டுவந்த தருணங்கள்ல அவ்ளோ பெருமிதமா இருந்தார். அந்த சந்தோஷத்தை நம்மளையும் தொத்திக்க வைப்பார். தமிழ்நாடு எல்லாத்துலேயும் முதல்ல வரணும்; சமூக நீதியைக் கொண்டுவரணும்… அதான் அவருக்கு! அதே மாதிரி இக்கட்டான சமயங்கள்ல அதிகாரிகள் சொல்லைக் கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்க மாட்டார். நேரம் காலம் பார்க்காம நேரடியாப் புறப்பட்டுடுவார். வெள்ளத்துல புழல் ஏரி உடைஞ்சுடும்கிற சூழல்னு ஒருமுறை தகவல் வந்தப்போ அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஓடினார். முதல்வரே இப்படி ஓடி வந்தா அதிகாரிங்க எப்படிச் சும்மா இருக்க முடியும்? அத்தனை பேரும் மெனக்கெட்டு, ஒரு பெரிய படையையே இறக்கிப் பெரிய வெள்ள அபாயத்துலேர்ந்து சென்னையைக் காப்பாத்தினார். அப்போ ‘தினமணி’யில் ‘தூங்காத கருணாநிதி!’ன்னு ஒரு தலையங்கம்கூட எழுதியிருந்தாங்க. அப்படி ஒரு அக்கறையைக் காட்டுவார். ஆனா, இவ்வளவையும் தாண்டி எதிர்க்கட்சித் தலைவராத்தான் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். முதல்வரா இருக்குறப்போ அவரு கை கட்டப்பட்ட மாதிரி இருக்கிறதா தோணும். எதிர்க்கட்சித் தலைவரா இருக்குறப்போ இன்னும் கூடுதல் துடிப்போடும் படைப்பூக்கத்தோடும் இருப்பார். தலைவரோட முழு சொரூபத்தைப் பார்க்கணும்னா போராட்டக் காலங்கள்ல பார்க்கணும். எதிர்ப்புகள் மத்தியிலதான் விசுவரூபமெடுத்து நிற்பார்.

1970-களில் மாநில சுயாட்சி விவகாரத்தில் அவர் அவ்வளவு தீவிரமாக இறங்கியதற்கு எது உந்துசக்தியாக இருந்தது?

திராவிட நாடு கேட்டு உருவான கட்சி சார் இது. அது இல்லைன்னு ஆனப்போ இங்கே உள்ள தமிழர்கள் சுயாதீனமா தங்களோட வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்குறதுக்கு அடுத்த நிலையில இருந்த தீர்வு மாநில சுயாட்சி. இயக்கத்தோட மைய நோக்கமா மாநில சுயாட்சியை அண்ணா வளர்த்தெடுத்தார். நிறைய மாற்றங்களைக் கொண்டுவரணும்னு நெனைச்சு ஆட்சிக்கு வந்தவங்களுக்கு, மாநில அரசுகளோட கையில ஒண்ணும் இல்லைங்கிறதுதான் ஆட்சிக்கு வந்த பின்னாடி தெரிஞ்சுச்சு. அண்ணா வழி வந்ததாலேயும் 1971 தேர்தல்ல பெரிய வெற்றியைத் திமுகவுக்குத் தமிழக மக்கள் கொடுத்திருந்ததாலேயும் மாநில சுயாட்சியை அந்த ஆட்சிக் காலகட்டத்துலேயே அடைஞ்சுடணும்னு ஒரு உத்வேகம் அன்னிக்கு இருந்துச்சு. அப்புறம் மாநில அரசு எல்லாத்துக்கும் டெல்லிக்கு முன்னாடி கைகட்டி நிக்க வேண்டியிருந்தது வேற கோபத்தை உண்டாக்குச்சு. சுதந்திர தினத்தையொட்டி கோட்டையைச் சுத்தி வளர்ந்திருந்த புதரைச் சுத்தப் படுத்தச் சொன்னார் தலைவர். “இது ராணுவத்துக்குச் சொந்தமான கட்டிடம். மத்திய அரசைக் கேட்காமல் நாம் வெள்ளைகூட அடிக்க முடியாது”ன்னு சொன்னாங்க அதிகாரிகள். தமிழ்நாட்டு மக்களோட முழு ஆதரவைப் பெற்ற ஒரு முதலமைச்சருக்கு அந்த மாநிலத்தோட தலைமைச் செயலகத்தைச் சுத்தப்படுத்துறதுக்குக்கூட டெல்லிகிட்ட அனுமதி கேட்கணும்னா இது அக்கிரமம் இல்லையா? அதிகாரம் இல்லாத பதவியை வெச்சிக்கிட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும்கிற கோபம்தான் மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கான உந்துசக்தி. அப்பவே தலைமைச் செயலகத்துக்கு ஒரு புதுக் கட்டிடம் கட்டணும்னு தலைவர் முடிவெடுத்துட்டார். அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள்ல அது முடியாமப் போச்சு. 2006-ல ஆட்சிக்கு வந்தப்போ இந்த முறை எப்படியாவது கட்டிடணும்னுதான் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டினார். அது எத்தனை வருஷக் கனவுன்னு ஜெயலலிதாவுக்குத் தெரியும்; அதனாலதான் அதை மருத்துவமனையாக்கிச் சிதைச்சார்!

புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை மருத்துவமனையாக்கி ஜெயலலிதா அறிவித்தபோது, கருணாநிதி என்ன மனநிலையில் இருந்தார்?

மனசுக்குள்ள கவலை, கோபம் எல்லாம் இருக்கும். ஆனால், வெளிக்காட்டிக்க மாட்டார். பொதுவா ஒரு குணம் உண்டு அவருகிட்ட. தனிப்பட்ட விஷயங்கள் அவரை ரொம்பத் துளைக்காது. பொது விஷயங்கள்தான் கடுமையா பாதிக்கும். எனக்குத் தெரிஞ்சு அவரைக் கடுமையா பாதிச்ச விஷயங்கள்னா இலங்கைத் தமிழர் கள் பிரச்சினை, அண்ணா, எம்ஜிஆர், முரசொலி மாறனோட மரணங்கள்.

கட்சியின் வெற்றி - தோல்விகளை கருணாநிதி எப்படி எடுத்துக்கொள்வார்?

ரெண்டுக்குமே பெரிசா சந்தோஷத்தையோ சோகத்தையோ வெளிப்படுத்த மாட்டார். கட்சி தோத்துடுச்சுன்னா சோகமா வர்ற கட்சிக்காரங்களை உற்சாகப்படுத்துறவரா அவர்தான் இருப்பார். தோத்துட்டா, “எங்கே தப்பு நடந்துருக்கு, ஓட்டையை எப்படி அடைக்குறது, கட்சியை எப்படி வளர்க்குறதுன்னுதான் பார்க்கணுமே தவிர, அதுக்காக வருத்தப்பட்டு உட்கார்ந்திருக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லை”னு சொல்வார். ஜெயிக்கும்போது, “பதவி வரலைய்யா, பொறுப்பு வந்துருக்கு; இனிமே இன்னும் கவனமா நடந்துக்கணும்”னு கட்சிக்காரர்கள்கிட்ட சொல்வார். ஸ்டாலின் மேயரா ஜெயிச்சப்போகூட அதைத்தான் சொன்னார். திமுகவோட வரலாற்று வெற்றின்னா அது 1971 தேர்தல் வெற்றிதான். 184 சீட் ஜெயிச்சது. இரவு 2 மணி வரை வெற்றி அறிவிப்புகள் வந்துக்கிட்டே இருந்துச்சு. அப்போகூட, “போதும்பா. இதுக்கு மேல ஜெயிச்சி என்ன பண்ணப்போறோம்! எதிர்க்கட்சினு வேணாமா!”ன்னுதான் கேட்டார். தோல்வின்னு வந்தா உடனே அவருக்கு மக்களைப் பார்க்கணும். தெம்பாயிடுவார்!

கருணாநிதியின் டிக்டேஷனில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். எது உங்களுக்குத் தனிப்பட்ட வகையில் பிடித்தது?

அவரோட சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’. பல சமயங்கள்ல அவர் சொல்லும்போது கண்ணீர் வந்துடும். எவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வந்திருக்கார்! மறக்க முடியாத இன்னொரு அனுபவம், 1971-ல் கண் சிகிச்சைக் காக அமெரிக்கா போனப்போ, ஆர்லந்தோ ஏரிக்கரையிலேயே உட்கார்ந்து அங்கே பார்த்த நீரூற்றைப் பத்தி ஒரு கவிதை எழுதினார். அதை என்னிடம் போனில் டிக்டேட் செஞ்சார். பத்துத் தடவை திருப்பித் திருப்பிப் படிச்சிக் காட்டச் சொல்லி அதை ‘முரசொலி’யில் போட்டார். பர்ஃபெக்ஷனுக்கு அவர் கொடுக்குற உழைப்பு ஒப்பிடவே முடியாதது. 1989-ல ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தக் கத்துக்கிட்டேன். அதுல அவருக்குக் கூடுதல் சந்தோஷம்.

அவர் பேசிய கூட்டங்களில் எது பிடித்தமானது?

அய்யய்யோ, அது நிறைய இருக்கே! அந்த அனுபவங்களே தனி! தேர்தல் நேரத்தில் ஒசூரில் சாயந்திரம் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்; காலையில் கிருஷ்ணகிரியில் வந்து, “அதோ உதித்துவிட்டான் உதய சூரியன்!”னு முடிப்பார். இப்போ மாதிரி நேரக் கட்டுப்பாடெல்லாம் அப்போ கிடையாதுல்ல! திருச்சியில ஆரம்பிச்சி, கன்னியாகுமரியில முடிப்போம். இடையில 100 இடங்கள்ல எல்லாம் பேசி யிருக்கார். வண்டியில ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் இடையில ரெண்டு ரெண்டு நிமிஷம் தூங்கி முழிப்பார். பல சமயம் அதுவும் கிடையாது. சுவாரஸ்யமா பேச்சுக் கொடுத்துக்கிட்டே வருவார். ஊர் வந்ததும் தூங்கிக்கிட்டு இருந்தோம்னா தலையில குட்டு விழும். “நாம தூங்கிட்டா நாடும் தூங்கிடும்யா”ம்பார். 1991-லன்னு நெனைக்கிறேன்... அலகாபாத்துலேயும் பாட்னாவுலேயும் பேசினார். “நான் ஒரு தேச விரோதி. உங்களைச் சந்திக்க வந்திருக்கிறே”னு ஆரம்பிக்கிறார். அடுத்து ராமரைப் பத்தி. நான் அரண்டுபோன கூட்டங்கள் அவை.

இந்திரா காந்தியில் தொடங்கி மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களில் அவருக்கு நெருக்கமாக இருந்த பிரதமர் யார்?

நெருக்கடி நிலைக்கு அப்புறம் ஆட்சிக்கு வந்தபோது இந்திராவே தலைவர் சொல்றதுக்கு நிறைய மதிப்பளிச்சு செஞ்சுருக்கார். ஏனைய எல்லாத் தலைவர்களையும் வரவேற்பறையில சந்திக்குற பழக்கம் கொண்ட மன்மோகன் சிங் இவரை மட்டும் வாசலிலேயே வந்து வரவேற்பார்; வழியனுப்புவார். அப்படி ஒரு மரியாதை எல்லோர்கிட்டேயும் இருந்துச்சுன்னாலும், அவருக்கு இதயத்துக்கு நெருக்கமா இருந்தவர் வி.பி.சிங். ஒரு ராஜ பரம்பரையில பிறந்திருந்தும் சாதி ஒழிப்புலேயும் சமூக நீதியிலேயும் அவர் காட்டின அக்கறைதான் இதுக்கான முக்கியமான காரணம். ரெண்டு பேருமே அவ்வளவு நெருக்கமா இருந்தாங்க.

அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மிகமிக முக்கியமான ஒருவராக இருந்தவர் யார் - உங்கள் பார்வையில்?

அண்ணா இருக்கும்போது அவரோடு நிறைய முரண்பாடுகளும் கருணாநிதிக்கு இருந்தது இல்லையா?

(நாளை பேசுகிறார் சண்முகநாதன்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x