Last Updated : 31 Oct, 2017 09:59 AM

 

Published : 31 Oct 2017 09:59 AM
Last Updated : 31 Oct 2017 09:59 AM

எம்ஜிஆர் இறந்த இரவு மறக்கவே முடியாதது!- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி

கருணாநிதியின் நிழலாகத் தொடரும் அவருடைய செயலர் சண்முகநாதன் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலில் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியை நான்கு அத்தியாயங்களாக நம்முடைய நடுப் பக்கத்தில் வெளியிடுகிறோம். எம்ஜிஆர் - கருணாநிதி எனும் இரு பெரும் ஆளுமைகள் இடையே இருந்த ஆழமான நட்பையும் திமுகவில் நடந்த பிளவின் பின்னரசியலையும் இன்று பேசுகிறார் சண்முகநாதன்.

எம்ஜிஆருக்கு உங்கள் மேல் என்ன கோபம்?

திமுகல அவரு இருந்தப்போ என்னை எம்ஜிஆருக்கு ரொம்பப் பிடிக்கும். கல்யாணம் ஆனவுடனே என்னையும் மனைவியையும் அழைச்சு விருந்தெல்லாம் கொடுத்தார். ஒன்பது வெள்ளி டம்ளர் பரிசளிச்சார். அவர் முதலமைச்சர் ஆனதும் நான் அவருக்கு பிஏவா இருக்கணும்னு கூப்பிட்டு அனுப்பினார். அது என்ன கணக்குன்னா, தலைவருக்கு யாரெல்லாம் பலமா இருக்காங்களோ, அவங்களையெல்லாம் தன் பக்கம் இழுத்துடணும்கிற கணக்கு. நான் மறுத்துட்டேன். இதை அவரால ஏத்துக்க முடியலை. அதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்த நெனைச்சார்.

எம்ஜிஆரிடம் பழிவாங்கும் குணம் உண்டா?

எம்ஜிஆர்கிட்டேயும் உண்டு. பின்னாடி ஜெயலலிதாகிட்டேயும் உண்டு. ரெண்டு பேரோட பழிவாங்கல் கதைகளும் நிறைய உண்டே! என்ன, யாரும் எழுத மாட்டாங்க! என்னையே சும்மா விடலையே எம்ஜிஆர்? எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாம பால் கமிஷன்ல தொடர்புபடுத்தி, ஏதோ ஒரு கொள்ளைக்காரனைக் கைதுசெய்யுற மாதிரி என்னை அவர் ஆட்சியில நடத்தினாங்க. அப்போ போலீஸ் மிதிச்சதுல அடிபட்ட எங்கப்பா பிழைக்கலையே! பழிவாங்குற எண்ணத்துலதானே, தலைவர் தன்னோட சொந்த வீடு மாதிரி அன்றாடம் போய்ப் பார்த்துப் பார்த்துக் கட்டின புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்தை மருத்துவமனையா மாத்தினாங்க ஜெயலலிதா!

எம்ஜிஆர் - கருணாநிதி பிளவின்போதெல்லாம் நீங்கள் பக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று சொல்லுங்களேன்...

ரெண்டு பேருக்கும் இடையில ரொம்ப அந்நியோன்யமான ஒரு உறவு இருந்துச்சு. பல விஷயங்கள்ல மாறுபாடும் இருந்துச்சு. கட்சியோ அரசு நிர்வாகமோ தலைவரைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப சீரியஸா அணுகுவார். உதாரணமா, காலம் தவறாமை. சட்ட மன்றக் கூட்டங்களுக்கு உழைக்கிறதெல்லாம் பாத்தீங்கன்னா, பரீட்சைக்குப் போற மாணவன் மாதிரிதான் தயாராவார்.

எம்ஜிஆர் அப்படிக் கிடையாது. கூட்டம் நடந்துக்கிட்டிருக்கும் போது தாமதமா பாதியில வந்து கவனத்தைத் திசைதிருப்புறதெல்லாம் நடந்திருக்கு. “பொதுக்கூட்டங்களில் நான் பேசுவதாக இருந்தால், அந்தக் கூட்டத்தில் என்னை அல்லாது வேறு எப்படிப்பட்ட சிறந்த பேச்சாளராக இருந்தாலும் சரி, தத்துவவாதியாக இருந்தாலும் சரி, அந்தக் கூட்டத்தில் நான் மேடைக்கு வந்ததும் பிறருடைய பேச்சு தடைபடும் அளவுக்கு மக்களிடையே ஒரு எழுச்சி உண்டாகும். பேச்சாளர் பிறகு பேச முடியாமல் போய்விடும்” என்பதை எம்ஜிஆரே எழுதியிருக்காரே!

ஆனா, இதற்கெல்லாம் அப்பாற்பட்டும் ரெண்டு பேருக்கும் மத்தியிலேயும் மதிப்பும் அன்பும் இருந்துச்சு. பிரிஞ்சு போய்க் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்கூட, காரில் எம்ஜிஆர்கூடப் போகும்போது ஒருத்தர் பேச்சுவாக்குல ‘கருணாநிதி’ன்னு சொல்லப்போவ, “கலைஞரை என் முன்னாடி கருணாநிதின்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்?”னு கேட்டுப் பாதி வழியில வண்டிலேர்ந்து அவரை இறக்கிவிட்டிருக்கார் எம்ஜிஆர். தலைவர்கிட்டேயும் யாரும் எம்ஜிஆர் தொடர்பா தப்பாப் பேச முடியாது. இதெல்லாம் உண்டு. ஆனா, என்னாச்சுன்னா திமுக வோட எழுச்சி வட இந்தியக்காரங்களைப் பெரிசா அச்சுறுத்துச்சு. மாநில சுயாட்சி முழக்கத்தைத் தலைவர் கையில எடுத்தப்போ அடுத்தடுத்து பஞ்சாப், வங்கம்னு எல்லா இடங்கள்லேயும் எதிரொலிக்க ஆரம்பிச்சுச்சு. காங்கிரஸுக்குள்ளேயேகூட பல முதல்வர்கள் பேச ஆரம்பிச்சாங்க. அதே மாதிரி பிராமணர் - பிராமணரல்லாதோர் அரசியல் ஒரு தேசிய விவாதமா மாறுச்சு.

திமுகவோட வளர்ச்சி இந்தியா முழுக்க மாநிலக் கட்சிகள், கீழ்நிலைச் சமூகங்களோட எழுச்சிக்கு வழிவகுத்துடும்; அதனால அதுக்கு அணை போடணும்னு நெனைச்சாங்க, பலரையும் குறிவெச்சவங்க.

அண்ணா இருக்கும்போதே எம்ஜிஆரை வருமான வரித் துறையை வெச்சி நெருக்கிட்டாங்கன்னு பேச்சு வந்துடுச்சு. அண்ணா இருக்கும்போதுதானே 1964-ல மேலவை உறுப்பினர் பதவியை எம்ஜிஆர் ராஜினாமா செய்றார்... அதேசமயத்துலதானே ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி!’னு பேசுறார்... அண்ணா மறைவுக்குப் பின்னாடி எம்ஜிஆருக்கான நெருக்கடிகள் அதிகரிச்சதுதான் பிளவோட மையம். கணக்குக் கேட்டது, தலைவர் மேல குற்றஞ்சாட்டினது எல்லாம் வெளிப்பூச்சுல நடந்தது. அப்பவும்கூட எம்ஜிஆரை நீக்குற முடிவைத் தலைவர் எடுக்கலை. சுத்தி இருந்தவங்க முந்திக்கிட்டு செஞ்ச வேலைதான் நீக்கத்துக்கு வழிவகுத்துச்சு.

கொஞ்சம் விளக்க முடியுமா?

எப்படி அதுன்னா, 1971-ல ஜெயிச்சப்போ, “எனக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் வேணும். அதனால நான் ஷூட்டிங்குலேர்ந்து திரும்புற வரைக்கும் அமைச்சரவையை அறிவிச்சுட வேணாம்”னு தகவல் அனுப்பினார் எம்ஜிஆர். ப.உ.சண்முகம் வீட்டுல எல்லாரையும் கூட்டி இதுபத்தி ஆலோசனை கேட்டார் தலைவர். பலர் “கூடாது”ன்னாங்க. ஏன்னா, “அது ரொம்ப முக்கியமான துறை; எதாவது சின்ன தப்பு நடந்துட்டாலும் அவருக்கு சினிமாலதான் அக்கறை; இது சும்மான்னு எதிர்க்கட்சிங்க பிரச்சாரம் பண்ணுவாங்க; கழகத்துப் பேரை அது கெடுத்துடும்”னு பலரும் சொன்னாங்க. கடைசியா “அமைச்சரவையைக் கொடுத்துடலாம்; ஆனா, அமைச்சரவையில இருக்குறப்போ சினிமாலேர்ந்து ஒதுங்கி இருக்கணும்”னு முடிவெடுத்தாங்க. அந்த முடிவை நான் தான் எம்ஜிஆர்கிட்ட கொண்டுபோய்ப் படிச்சுக் காண்பிச்சேன். “அப்ப முடியாதுன்றாங்க, அப்படித்தானே!”ன்னு கோபமா கேட்டார்.

அடுத்து, ஜெயலலிதாவை மதுரை கூட்டத்துல கட்சிக்குள்ள கொண்டுவரணும்னு நெனைச்சார். அதுக்கும் கட்சிக்குள்ள எதிர்ப்பு இருந்துச்சு. இதுக்கெல்லாம் தொடர்ச்சியாகத்தான் திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில் கணக்குக் கேட்டு அவர் பேசினார். பெரிய களேபரம் ஆச்சு. என்ன முடிவெடுக்குறதுன்னு கூடிப் பேசினாங்க. பெரும்பாலானவங்க கட்சியை விட்டு எம்ஜிஆரை நீக்கணும்னாங்க. தலைவருக்கு மனசில்லை. தவிச்சார். பேச்சு போய்க்கிட்டே இருந்துச்சு. “சரி, இன்னிக்கு ஆற விட்டு நாளைக்குப் பேசிக்கலாம்”னு சொல்லிக் கூட்டத்தை அவர் முடிச்சப்போ, “நீங்க இப்படி இழுப்பீங்கன்னு சொல்லித்தான் நான் நியூஸை அனுப்பிட்டேன்”னார் நாவலர். அதாவது, வெளியில நின்ன பத்திரிகையாளர்கள் மத்தியில “எம்ஜிஆர் மேல நடவடிக்கை எடுத்துட்டோம்”னு செய்தி போயிட்டுது. தலைவர் பதறிப்போய் “என்ன இப்படிச் செஞ்சுட்டீங்க!”ன்னு சொல்லி “ஓடிப்போய் செய்தியை நிறுத்துப்பா”ன்னு என்னை அனுப்பினார். ஆனா, அதுக்குள்ளேயே செய்தியை டெல்லிக்கு அனுப்பியாச்சுன்னுட்டார் பிடிஐ நிருபர் வெங்கட்ராமன்.

எம்ஜிஆர் வெளியேற்றத்துக்காக கருணாநிதி என்றைக்காவது வருந்தியிருக்கிறாரா?

நாவலர் அவசரப்பட்டிருக்கக் கூடாதுன்னு சொல்வார். ஆனா, “கட்சியை விட்டு வெளியேற்றாம இருந்திருந்தாலும் ரொம்ப நாளைக்கு எம்ஜிஆர் நீடிச்சுருக்க மாட்டார். கட்சி பிளவுபட்டதுல டெல்லியின் சதி இருந்தது”ன்னு தலைவர் பல முறை சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பின் திமுக - அதிமுக இணைப்பு சம்பந்தமாக எப்போது முதல் பேச்சு தொடங்கியது?

கட்சி பிரிஞ்சு எம்ஜிஆர் போய்ட்டாரே தவிர, அதிமுகன்னு ஒரு கட்சி நீடிச்சதுல தலைவருக்கு வருத்தம் இருந்ததில்லை. அது அழியணும், வீணாப்போகணும்னு அவர் நெனைச்சதில்லை. திராவிட இயக்கத்துலேர்ந்து வந்த ரெண்டுல ஒரு கட்சிதான் ஆட்சியில இருக்க முடியும்கிற சூழல் ஏற்பட்டதுல ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்துச்சு. 1979-ல ஒரு இணைப்பு முயற்சி நடந்துச்சு. பிஜு பட்நாயக் மத்தியஸ்தம் செஞ்சார்.

ரெண்டு பேரும் பேசினாங்க. கிட்டத்தட்ட எல்லாம் முடிஞ்சி டுச்சுன்னு நெனைச்சோம். மறுநாளே வேலூர் கூட்டத்தில் வேறு மாதிரி பேசினார் எம்ஜிஆர். இடையில் என்ன நடந்துச்சுன்னு தெரியலை. அதே மாதிரி, அவரோட இறுதிக் காலத்துல அப்படி ஒரு சூழல் நெருங்குச்சு. ஆனா, அவரைச் சுத்தி இருந்தவங்க அதை விரும்பலை. எல்லாத்தையும் தாண்டி, அவங்களுக்குள்ள ஒரு ஆழமான உறவு இருந்துச்சு. எம்ஜிஆர் மருத்துவமனையில இருந்தப்போ ‘நானும் பிரார்த்திக்கிறேன்’னு எழுதினாருல்ல... அப்ப டிக்டேட் செய்யும்போதே தலைவர் கண்ணெல்லாம் கலங்கும். எம்ஜிஆர் இறந்த இரவு முழுக்கக் கண்ணீர் வடிச்சார். நானே அழுதேன் சார். ஆயிரம் இருந்தாலும், அரசியல் வேற - அன்பு வேறல்ல!

1970-களில் மாநில சுயாட்சி விவகாரத்தில் அவர் அவ்வளவு தீவிரமாக இறங்கியதற்கு எது உந்துசக்தியாக இருந்தது?

கருணாநிதியின் வாழ்வில் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மிகமிக முக்கியமான ஒருவராக இருந்தவர் யார் - உங்கள் பார்வையில்?

(நாளை பேசுகிறார் சண்முகநாதன்...)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x