Last Updated : 29 Sep, 2017 11:59 AM

 

Published : 29 Sep 2017 11:59 AM
Last Updated : 29 Sep 2017 11:59 AM

பி. சீனிவாச ராவ்: விவசாயத் தொழிலாளர்களின் கலகக்குரல்

கீழத்தஞ்சையில் (இன்றைய திருவாரூர், நாகப்பட்டினம்) பண்ணையடிமைகளாக நடத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களிடம், ‘உன்னை அடித்தால் திருப்பி அடி, அதனால் என்னவானாலும் பார்த்துக்கொள்ளலாம்’ என்றொரு கலகக் குரல் 1942-ல் தமிழ்நாட்டில் ஒலித்தது. அந்தக் குரல் பி. சீனிவாசராவினுடையது. நிலவுடைமையாளர்கள் தங்கள் நிலத்தில் வேலை செய்த ஆண்களையும் பெண்களையும் எப்படி நடத்தினார்கள் என்ற விவரம் நமக்குத் தெரிந்தால்தான் அவரது கோபக் குரலின் நியாயம் புரியும்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பண்ணையடிமைகளாக இருந்தனர். அவர்களின் முன்னோர்கள் வாங்கிய கடனுக்கு ‘புரோநோட்’ எழுதிக் கொடுத்துவிட்டு சுகந்தை என்ற பெயருடன் வேலை செய்து வந்தார்கள். நிலவுடைமையாளர் ஒருவரிடம் வேலை செய்யும் பண்ணையாள் அவரிடம் மட்டும்தான் வேலை பார்க்க வேண்டும்; அவரது இடத்தில்தான் குடிசை போட்டுத் தங்கியிருக்க வேண்டும்; வேறொரு இடத்துக்குப் போகக் கூடாது.

அவர்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் கொடூரமாக இருந்தது. நிலப்பிரபுகள் வீட்டிலிருந்து அதிகாலை 3 மணிக்குக் கொம்பு ஊதியதும் பண்ணையடிமைகள் விழித்துக்கொண்டு நாலரை மணிக்கு ஏர்கட்ட மாட்டை அவிழ்க்க வேண்டும். அதிகாலையில் வயலில் இறங்கும் பண்ணையடிமைகள் காலை 11 மணிக்குக் கரைமேட்டுக்கு வந்து கஞ்சியைக் குடித்துவிட்டு மாடுகளைச் குளிப்பாட்டி வைக்கோல் வைக்க வேண்டும். பிறகு வயல் வேலைகளை இரவு 7 மணி, 8 மணி வரை செய்ய வேண்டும். வேலைக்கு வரும் ஆண்களும் பெண்களும் இருள் சூழ்ந்த பின்னரே வீடு திரும்ப முடியும்.

சாட்டையடியும் சாணிப்பாலும்

உடல் நிலை சரியில்லை என்றாலோ சொல்லாமல் வேலைக்கு வராமல் இருந்துவிட்டாலோ, பண்ணையடிமைகள் கட்டி வைத்து சாட்டையால் அடிக்கப்படுவார்கள். ஐந்து பிரிகொண்ட சாட்டையில் பிரியை விலக்கிவிட்டு கூரான கூழாங்கல்லைச் சொருகி இருப்பார்கள். சாட்டையில் அடிக்கும்போது ரத்தம் கொட்டும். அந்தச் சாட்டை ஒவ்வொரு முறையும் உடலைப் பதம் பார்க்கும்போது பண்ணையடிமை துடித்துப்போவார்.

சில நிலவுடைமையாளர்கள் மாட்டுச் சாணத்தைக் கரைத்து மாட்டுக்கு மருந்து புகட்டும் மூங்கில் கொட்டத்தில் நிரப்பி சாணிப்பாலைப் பருகிடச் செய்வார்கள். ஒரு காலைத் தூக்கிக்கொண்டு சுடுமணலில் நெடுநேரம் நிற்கும் கொக்குப் பிடித்தல், கால்களுக்குக் கிட்டி போடுதல் போன்ற தண்டனைகளும் வழங்கப்பட்டது. இவை தவிர சில பண்ணையார்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புதுவிதமான தண்டனைகளையும்கூட வழங்கினார்கள்.

இப்படி வாயிருந்தும் ஊமையாய் இருந்த மக்களிடம்தான் அத்தகைய கலக்குரலை எழுப்பினார் சீனிவாசராவ். விடிந்த பின்தான் ஏர்கட்ட வேண்டும், சூரியன் உதித்த பின்புதான் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், குழந்தைக்குக் கரையேறித்தான் பால் கொடுக்க வேண்டும், உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் என்றெல்லாம் சீனிவாசராவ் தலைமையில் ‘தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்’ முதலில் வைத்த கோரிக்கைகளைப் பார்த்தாலே நிலைமையை இன்னும் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

உண்டுறங்கி ஒன்றாய் வாழ்ந்த தலைவர்

கீழத்தஞ்சையில் நிலப்பிரபுக்களுக்கு எதிராக, பண்ணையடிமை முறைக்கு எதிராக அம்மக்களை விழிப்படையச் செய்து எதிர்த்து நிற்க வழிகாட்டிய முதல் தலைவர் பி.எஸ்.ஆர் என்று அழைக்கப்பட்ட பி. சீனிவாசராவ்தான். அவர் பிறந்தது பிராமணர் குலத்தில். ஆனால், பண்ணையடிமைகளாக இருந்த மக்களைப் போலவே அவர்கள் உண்ட நண்டு, நத்தை, மீன்களையே அவரும் சாப்பிட்டார். அவர்கள் உறங்கிய கிழிந்த சாக்கில்தான் அவரும் படுத்துறங்கினார். அவர்கள் வாழ்ந்த குடிசையிலேயே தங்கி மக்களுடன் உயிரோட்டமான தொடர்பைக் கொண்டிருந்தார். அவர் இன்றளவும் தஞ்சை விவசாயத் தொழிலாளர்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பதன் காரணமும் அதுவே. மக்களிடையே பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரும் அவரது வாழ்க்கையிலிருந்து கற்றறிய வேண்டிய மிக முக்கியமான பாடம் இது.

பி.எஸ்.ஆர்., 54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். அதில் 19 ஆண்டுகளைக் கீழத்தஞ்சையில் விவசாய சங்கப் பணிகளுக்காகச் செலவிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடங்கியது அவரது அரசியல் வாழ்க்கை. 1943-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரிவு கேட்டுக்கொண்டதன் பேரில், கீழத்தஞ்சை மாவட்டத்தில் பணியாற்ற வந்தார். பண்ணையடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களையும், குத்தகை விவசாயிகளாக இருந்த பிற்படுத்தப்பட்ட மக்களையும் நிலப்பிரபுக்களுக்கு எதிராக வர்க்க அடிப்படையில் ஒன்றுதிரட்டி வெற்றிகண்டார் பி.எஸ்.ஆர். சாதிய ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தையும், பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்தது இவரின் சாதனை. 1952-ல் நடந்த இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் தஞ்சை மாவட்டத்திலிருந்த 19 சட்டமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றது. அந்த வெற்றிக்கு பி.எஸ்.ஆர் கட்டமைத்த விவசாயச் சங்க இயக்கமும் ஒரு காரணம். இன்னும் கீழத்தஞ்சை மாவட்டத்தில் செங்கொடி இயக்கம் வலுவாக இருப்பதற்கும் அவர் போட்ட அடித்தளமே காரணம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, முன்னேற்றத்துக்காக ஆத்மார்த்தமாகப் பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாராட்டும் பண்பு வளர வேண்டும். மாறாக, புறக்கணிக்கும் போக்கு இருக்கிறதோ என்று தோன்றுகிறது. பி.எஸ்.ஆர் போன்ற நல்ல முன்னுதாரணங்கள் வரலாறாக நம்முன் இருந்தபோதும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்குத் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த தலைவர்களால் மட்டும்தான் பாடுபட முடியும், போராட முடியும் என்ற கருத்து பரப்பப்பட்டுவருகிறது. தாழ்த்தப்பட்டவரின் வலியை அவர்களால் மட்டுமே உணர்வுபூர்வமாக உணர முடியும் என்பவர்களும் இருக்கிறார்கள். இந்தக் கருத்தை 75 ஆண்டுகளுக்கு முன்பே உடைத்து நொறுக்கி, வலியை உணர்ந்தவராக மட்டுமல்லாமல் வலியிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் அம்மக்களுக்கு காட்டிய மகத்தான தலைவர் பி.சீனிவாசராவ்.

- பெ.சண்முகம், மாநிலப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செப்.30- பி. சீனிவாச ராவ் நினைவு தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x