Last Updated : 28 Mar, 2015 09:00 AM

 

Published : 28 Mar 2015 09:00 AM
Last Updated : 28 Mar 2015 09:00 AM

66(ஏ): தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

ஆக்சிஜன் போன்ற அடிப்படை உரிமைகளை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 (ஏ) பிரிவு இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் மார்ச் 24-ல் தீர்ப்பளித்து வரலாறு படைத்துள்ளது. இந்த சட்டப் பிரிவு அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று மட்டும் இந்தத் தீர்ப்பின் மூலம் அது கூறிவிடவில்லை; ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையை அது தூக்கிப் பிடித்திருக்கிறது. சுதந்திரமாகப் பேசவும், எல்லா விதமான கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளவும், அரசை அல்லது ஆளும் கட்சியை விமர்சிக்கவும், குறிப்பிட்ட விவகாரத்தில் தங்களுடைய மனதில் இருப்பதை மக்கள் வெளிப்படையாகப் பேசவும், அரசின் கருத்து தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று எதிர்ப்பைத் தெரிவிக்கவும், அரசுக்கு எதிராகவும் அதன் கொள்கைகளுக்கு எதிராகவும் துணிச்சலாகவும் சுதந்திரமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. ஜனநாயகத்துக்கு ஆக்சிஜன் போன்ற அடிப்படை உரிமைகளை உச்ச நீதிமன்றம் உறுதிப் படுத்தியிருக்கிறது.

ஸ்ரேயா சிங்கால் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

ஜனநாயகம் வெற்றிகரமாக அமைய குடிமக்கள் விவரம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்; அரசின் கொள்கைகள், திட்டங்கள், சட்டங்கள், வழிமுறைகள் போன்றவற்றைக் கேள்வி கேட்க, கண்டிக்க, தாங்கள் ஏற்கவில்லை என்பதைத் தெரிவிக்க, ஆதரிக்க அல்லது விமர்சிக்க மக்களுக்கு சமூக, அரசியல் தளங்கள் அவசியம். ஜனநாயகம் உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டும் என்றால், அனைத்துவிதமான கருத்துகளும் மக்கள்முன் வைக்கப்பட வேண்டும். அவற்றிலிருந்து மக்கள் தாங்களாகவே ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் அதை வெளிப்படுத்தவும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும், ஆட்சியில் இருக்கும் அரசுகள் அல்லது அரசியல் அமைப்புகளின் கருத்துகளை எதிர்க்கவும், விமர்சிக்கவும் வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(ஏ) பிரிவு மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் இணையதளம் மூலம், குறிப்பாக மின்னஞ்சல் மூலம் அனுப்பும் தகவல்கள்கூட யாருக்காவது எரிச்சலூட்டினால், அசௌகரியத்தை ஏற்படுத்தினால், ஆபத்து என்று கருதப்பட்டால், தடையாக விளங்கினால், வசவாகக் கருதப்பட்டால், காயத்தை ஏற்படுத்தினால், அச்சமூட்டும் விதத்தில் அச்சுறுத்தினால், விரோதத்தை ஏற்படுத்தினால், கசப்புணர்வை உண்டாக்கினால் அது குற்றமாகக் கருதப்படும். இதன் விளைவாக அந்தத் தகவலை அல்லது கடிதத்தை அனுப்பியவர் மட்டுமல்ல, தெரிந்தோ தெரியாமலோ அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வெவ்வேறு மாநிலங்களில் பலர் கைதுசெய்யப்பட்டனர். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கின்போது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இரண்டு இளம் பெண்கள், நாடாளுமன்றத்தை அரசியல்வாதிகள் விரும்பாத வகையில் கேலிச்சித்திரமாக வரைந்த கேலிச் சித்திரக்காரர், ஆளும் கட்சியைச் சேர்ந்தவரும் மாநில அமைச்சருமான ஒரு தலைவரைப் பற்றிக் கருத்து தெரிவித்த உத்தரப் பிரதேச மாநில பள்ளி மாணவர் போன்றோர் கைதுசெய்யப்பட்டனர்.

எட்டு சூழ்நிலைகள்

அமெரிக்க உச்ச நீதிமன்ற வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அமர்வு, எட்டு சூழ்நிலைகளில் மட்டுமே பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றது. பரிமாறிக்கொள்ளப்படும் ஒரு தகவல் நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால், வெளிநாட்டுடனான உறவைக் குலைப்பதாக இருந்தால், பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தினால், கண்ணியம் அல்லது தார்மிக நெறிகளைச் சிதைத்தால், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குபற்றி விமர்சிப்பதால் நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் நேரும் என்றால், அவதூறு செய்தால், குற்றச் செயலில் ஈடுபடுமாறு தூண்டினால் மட்டுமே கருத்துரிமை, பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தலாம் என்று அமர்வு விவரித்துள்ளது.

எனவே, பரிமாறிக்கொள்ளப்படும் தகவல் இந்த எட்டுச் சூழ்நிலைகளில் அடங்கவில்லை என்றால், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்று தெளிவாகத் தெரிவித்தது. அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவு அளிக்கும் பேச்சுரிமை, கருத்துரிமைகளை மீறுகிறது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(ஏ) பிரிவு என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவாக்கிவிட்டது. அத்துடன், அந்தப் பிரிவு தெளிவில்லாமல், அவரவர் நோக்கில் பொருள்கொள்ளும்படி இருக்கிறது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் தகவல், மற்றவர்களால் விரும்பப்படலாம். அதே போல ஒருவருக்கு அவமதிப்பாக இருக்கும் தகவல் மற்றவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். இப்படித் தெளிவில்லாத வார்த்தைகளைக் கொண்ட வாசகங்களால் அப்பிரிவு இயற்றப்பட்டிருப்பதால் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்

அமர்வு சார்பில் தீர்ப்பை எழுதிய நீதிபதி நாரிமன், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு பிரிவினர் ஒரே விஷயத்தை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கக்கூடும் என்பதை உதாரணங்களுடன் சுட்டி யிருந்தார். ஆண் - பெண் பாலின வேறுபாடு, சாதி ஒழிப்பு, மதமாற்றம் போன்றவை அதில் சில. இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக யார் ஒரு கருத்தை வெளி யிட்டாலும், அது மற்றொரு பிரிவினருக்கு எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும். அந்த நிலையில், மக்களைக் கைது செய்யவும் வழக்கு போடவும் இந்த கொடுங்கோல் சட்டப்பிரிவு இடம்கொடுக்கிறது. அரசியல் சட்டம் உறுதியளிக்கும் கருத்துச் சுதந்திரத்தை அது பாதிக்கிறது.

பொது அமைதியை ஒரு தகவல் பாதிக்கிறது என்று அரசு கருதினால், அது எப்படி பாதிக்கிறது என்பதை அரசு காட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு வரையறுக்கிறது. அவ்வாறு இல்லாமல் தகவல்களுக்குத் தடை விதிக்கப்பட்டால், பேச்சுச் சுதந்திரத்துக்கும் அதன் மூலம் ஜனநாயகத்துக்கும் அது அச்சுறுத்தலாக மாறிவிடும்.

வெறுப்பின் காலகட்டம்

வரலாற்றில் மிகவும் முக்கியமான கட்டத்தை இந்தியா கடந்துகொண்டிருக்கிறது; வெறுப்பை விதைக்கும் பேச்சுகள், விரோதத்தை வளர்க்கும் குற்றச் செயல்கள், சாதி, மத அடிப்படையிலான மோதல்கள் இன்றைய நடைமுறைகளாக இருக்கின்றன. இந்தச் சூழலில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரில் சிலரின் நடவடிக்கைகள் கவலைக்குரியவையாக இருக்கின்றன. சாதி, மத உணர்வுகள் தூண்டப்பட்டு மோதல்கள் ஏற்படுத்தப் படுகின்றன. ஒரு சில ஊடகங்களைத் தவிர, பெரும்பாலானவை விருப்புவெறுப்பு இல்லாமல் பிரச்சினைகளை அணுகுவதில்லை.

இத்தகைய நிலையில், மக்கள் சமூக ஊடகங்களைத் தான் உண்மையான தகவல்களுக்கு நம்பியிருக்கின்றனர். சமூக ஊடகங்கள் இப்போது மக்களிடையே மிகவும் பிரபலமாகிவருகின்றன. எனவே, ஆள்வோருக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் அரசியல், வர்த்தக நலன்களை மட்டுமே கொண்டு செயல்படுவோருக்கும் அவைகுறித்து அச்சம் நிலவுகிறது. எனவே, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(ஏ) பிரிவைப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டாதவர்களைக் கைது செய்யவைக்க முடிந்தது. அந்தப் பிரிவே அரசியல் சட்டம் அளிக்கும் உரிமை களுக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால், இனி அவர்களால் அவ்வாறு செயல்பட முடியாது என்பது பெரிதும் நிம்மதியை அளிக்கிறது.

- வி. சுரேஷ், அனைத்திந்திய பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், 66 (ஏ) தொடர்பான வழக்கில் மனு தாக்கல் செய்தவர்களில் இவரும் ஒருவர்.

தொடர்புக்கு: rightstn@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x