Published : 07 Jun 2016 09:57 AM
Last Updated : 07 Jun 2016 09:57 AM
வாழ்க்கையை மாற்றிய வாசிப்பு
தனது பிள்ளைகளுக்கு வசதியான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும் என்று விரும்பும் தலைமுறை யின் வாரிசுதான் நான். கைகாட்டும் விளையாட்டுப் பொருட்கள் கிடைக்கும். தின்பண்டங்கள் கிடைக் கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக என் வாசிப்பு உலகத்துக்கு வழிகாட்டியதுதான் என் பெற்றோர் எனக்கு அளித்த கொடை என்று கருதுகிறேன். இன்றைக்கு ‘கேட்டர்பில்லர்’ நிறுவனத்தில் இல்லஸ்ட்ரேட்டர் பணியில் இருக்கும் எனக்கு, சமூகத்தின் மீதான புரிதலைக் கற்றுக்கொடுத்தது எனது வாசிப்புதான்.
சொந்த ஊர் சேலம். ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளியில் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பில் புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் சேர்ந்தேன். புதிய இடம் என்பதால் சூழலை உள்வாங்குவதில் தடுமாறி, பாடங்கள் எல்லாவற்றிலும் பதினைந்து மதிப்பெண்கள்கூட எடுக்காமல் தோற்றுப்போனேன். ஆனால், தமிழில் மட்டும் நல்ல மதிப்பெண்கள். ஏழாம் வகுப்பில், என் தமிழ் ஆர்வத்தைக் கண்டு அதை மேடையேற்ற ஊக்குவித்தார் தமிழாசிரியையான அந்துவான். கடைநிலை மாணவனான எனக்குத் தைரியம் கொடுத்து, என்னை மேடையேற்றியவர் அவர். மேடையில் பேசியது நான்தான் என்றாலும், அதற்கான உரைகளை அப்பாதான் எழுதிக்கொடுத்தார். ஒருகட்டத்தில் குற்றவுணர்ச்சி மேலோங்கியது. என் உரையை நானே எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன். அதற்கு, வாரப் பத்திரிகைகள் பெரும் உதவிசெய்தன.
காமிக்ஸ், வாரப் பத்திரிகைகள், குழந்தை களுக்கான பத்திரிகைகள் என வாசித்துக் கொண்டிருந்த எனக்கு, ஒன்பதாம் வகுப்பின் கோடை விடுமுறை புதிய விஷயத்தைத் தந்தது - பாக்கெட் நாவல்கள்! பழைய புத்தகக் கடைகளில் பாக்கெட் நாவல்கள் பாதி விலையில் கிடைக்கும். வாசித் துவிட்டு அவர்களிடமே திருப்பிக் கொடுக்கலாம். அதையும் பாதி விலைக்கு எடுத்துக்கொள்வர். ஆனால், அந்த விலைக்கு மீண்டும் நாவல்களையே எடுக்க வேண்டும். பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், இந்திரா சௌந்தர்ராஜன் என்று நிறைய பாக்கெட் நாவல்களை வாசித்தேன். அங்கிருந்து இன்னமும் கொஞ்சம் பெரிய அளவிலான நூல்களை வாசிக்கலாம் என சுஜாதா மற்றும் கல்கியை வாசிக்க ஆரம்பித்தேன்.
இதனிடையில், தொலைக்காட்சிகளின் வழியே காணும் எழுத்தாளர்களின் நூல்களை வாசிக்கலாம் எனும் எண்ணத்தில் அதைத் தேடிய பயணம் ஆரம்பம் ஆனது. சாரு நிவேதிதாவின் நூல்களுடனான பரிச்சயமும் அங்குதான் நிகழ்ந்தது. பள்ளிப் பருவத்தை முடிப்பதற்குள் பல நூல்கள் பரிச்சயமாகியிருந்தன.
கோவையில் நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் விமானப்பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். படிப்பில் நாட்டம் இல்லையெனினும், கட்டிய தொகைக்குப் பட்டம் பெற்றேன். கல்லூரியில் தமிழார்வத்தை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையவில்லை. வாசிப்பு மட்டுமே எனக்கான வழியாக அமைந்தது. சாரு நிவேதிதாவிலிருந்து தொடங்கிய தேடலை வரையறையற்ற ஒன்றாக மாற்ற முயன்றேன். எல்லோரையும் வாசித்தே ஆக வேண்டும் எனும் வேட்கையாக மாறியது.
அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சோ.தர்மன், கிருஷ்ணன் நம்பி, தேவிபாரதி, இரா.முருகவேள் என்று பலரது படைப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த வாசிப்பு மேட்டுக்குடி என எனைச் சூழ்ந்திருக்கும் பல கட்டுமானங்களை உடைத்தெறிந்திருக்கிறது. ஆட்டோக்காரர்கள், பூவிற்பவர்கள், காய்கறி விற்பவர்கள், இஸ்திரி போடுபவர்கள், சாக்கடை சுத்தம் செய்யும் ஊழியர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தடையின்றிப் பழக எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது!
உலகம் மிகப் பெரியது. அதன் அடிவேராக இருப்பது மனிதம் மட்டுமே. அதை எனக்குப் போதித்தது வாசிப்பும் அதன் விளைவாக நான் சந்தித்த மனிதர்களும். பல கலாச்சாரக் கட்டுகளைக் கடந்து உலகை நோக்கி புத்தகங்களுடன் பயணிக்கிறேன். வாசிப்புடன் உலகம் இனிமையாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT