Published : 01 Jun 2015 09:21 AM
Last Updated : 01 Jun 2015 09:21 AM

சிறையிலிருந்து ஒரு விசிலூதியின் ஓலம்

இராக்-ஆப்கன் போர்களில் அமெரிக்காவின் முகத்தைத் தோலுரித்தவர் மேனிங்

கடந்த மே மாதம் 27-ம் தேதியோடு 5 ஆண்டுகள் முடிவடைகின்றன, 2010-ல் இராக்கில் ராணுவப் பணியாற்றிய நான் ராணுவச் சிறைக்கு அனுப்பப்பட்டு.

2010-ம் ஆண்டின் முதல் சில வாரங்களின்போதுதான் இதெல்லாமே தொடங்கின. இராக்கிலும் ஆப்கானிஸ் தானிலும் நடைபெற்ற போர்களைப் பற்றிய பயங்கர மான, தெளிவான ஒரு சித்தரிப்பைத் தரும் ரகசிய ஆவணங்களை, பிரச்சினைக்குரிய ஆவணங்களை மக்கள் மத்தியில் கசியவிடுவதென்ற முடிவுக்கு நான் வந்தேன்; என் வாழ்க்கையையே மாற்றிப்போட்ட முடிவு இது.

2009-2010 ஆண்டுகளில் இராக்கில் இருந்தபோதுதான் இந்த ஆவணங்களை விரிவாகப் படித்துப் பார்த்தேன். ‘தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர்’ என்பது எந்த விதத்தில் மேற்கொள்ளப்பட்டது, வளர்ந்துவரும் நாடுகளை வெளியுறவுரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் திட்டமிட்டு எப்படிச் சுரண்டினார்கள் போன்ற தகவல்களையெல்லாம் அந்த ஆவணங்கள் விரிவாகக் கொண்டிருந்ததால் இவை யெல்லாம் பொதுமக்களின் முன் வைக்க வேண்டியவை என்பதை நான் உணர்ந்தேன். அதற்குப் பிறகுதான் ‘விக்கிலீக்ஸ்’க்கு லட்சக் கணக்கான ஆவணங்களைக் கசியவிட்டேன்.

அதன் பிறகு, மோசமாக ஏதாவது நடக்கும் என்பதை நிச்சயம் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், எந்த மாதிரி மோசமான விளைவு என்பதுகுறித்த ஆழமான உணர்வு எனக்கு அப்போது இல்லை. என்னைத் தீயவளாகச் சித்தரிப்பார்கள் என்பதையும் என்னைக் குறிவைப்பார்கள் என்பதையும் எதிர்பார்த்திருந்தேன். அது மட்டுமல்லாமல் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தனிப்பட்ட முறையில் நான் செய்திருக்கக் கூடிய ஒவ்வொரு பிழையும் அலசிப்பார்க்கப்படும் என்பதையும், இவற்றை யெல்லாம் மக்கள் மன்றத்தில் எனக்கெதிராகப் பயன் படுத்துவார்கள் என்பதையும் எதிர்பார்த்திருந்தேன்.

சிறைவைப்புப் படலம் தொடங்கியது

என்னைக் காவலில் வைக்கும்படி அமெரிக்க ராணுவம் உத்தரவிட்ட பிறகு, என்னை குவைத்துக்கு அழைத்துச்சென்றார்கள். குவைத்தில் உள்ள சிறை முகாமுக்கு வரும்வரை என்னை ஒரு சிறைக் கைதியாகவே நான் உணரவில்லை. தொடர்ந்து வந்த நாட்களில் நிலைமை மேலும் மோசமானது. ஒரு வாரம் எல்லோரோடும் சேர்ந்து இருக்கும்படி தங்கவைக்கப்பட்டிருந்தேன். அதற்குப் பிறகு, ஒரு கூடாரத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு மாற்றப்பட்டேன்.

கூண்டிலும் கூடாரத்திலும் சில வாரங்கள் இருந்த பிறகு, எனது மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டிருக்கின்றன என்பது தெரியாமலும் எனது வழக் கறிஞரிடம் முழுமையாகத் தொடர்புகொள்ள முடியாத நிலையிலும் வெளியுலகில் ஊடகங்களில் சுழன்றடிக்க ஆரம்பித்திருக்கும் நெருப்புச் சூறாவளியைப் பற்றி ஏதும் அறியாமலும் இருந்த நான், மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளானேன். நான் எதிர்பார்த்த வகையில் என்னைக் கண்ணியமாக நடத்த மாட்டார்களோ என்ற அச்சம் என்னைக் கடுமையாக ஆட்கொண்டது. கொதிக்கும் பாலைவனத்தின் கூண்டுச் சிறையிலேயே என் வாழ்நாள் முழுதும் கழிந்துவிடுமோ, ஓர் ஆணாகவே நான் நடத்தப்பட்டுவிடுவேனோ, பொது விசாரணையை எதிர்கொள்ளாமல் இந்த உலகத்தின் பார்வையிலிருந்து நீங்கி ரகசியச் சிறைக்குள் காணாமல்போய்விடுவேனோ என்றெல்லாம் அச்சம் என்னை அரிக்க ஆரம்பித்தது.

அமெரிக்க குரூஸர் போர்க் கப்பலில் எனக்கு விசாரணை நடக்கும், அல்லது கியூபாவின் குவாந்தநாமோ வளைகுடாவின் சிறை முகாம்களுக்கு அனுப்பப்படுவேன் என்றெல்லாம் எனக்குச் சாப்பாடு கொண்டுவந்து கொடுத்த கப்பற்படைக் காவலாளிகள் சொன்னார்கள். மிகவும் மோசமாக மன உளைச்சல் அடைந்திருந்த ஒரு தருணத்தில், எனக்கு நானே உறுப்பு நீக்கம் செய்து கொள்ளலாமா என்றெல்லாம் யோசித்தேன். தூக்கு மாட்டித் தொங்குவதற்கேற்ற ஸ்திரமான கூரைபோன்று ஏதும் இல்லாததால் கிழிந்த போர்வையைக் கொண்டு தற்கொலை செய்துகொள்வதைப் பற்றியும் யோசித்துப் பார்த்தேன். அதைக் கொண்டு எனது கழுத்தை நானே இறுக்கிக்கொள்ள முயலவும் செய்தேன். மாட்டிக்கொண்டுவிட்டதால் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடாத வகையிலான கண்காணிப்புக்கு குவைத்தில் நான் உள்ளாக்கப்பட்டேன்.

மோசமான காலகட்டம்

பிறகு அமெரிக்காவுக்கு என்னைக் கொண்டு வந்தார்கள். விர்ஜினியா மாகாணத்தில் குவாந்திகோவில் உள்ள கப்பல் சிறையில் என்னை அடைத்தார்கள். அந்தக் காலகட்டம்தான் எனக்கு மிகவும் மோசமான காலகட்டம். மிகவும் நீண்ட காலகட்டம்போல எனக்குத் தோன்றியது. பல்துலக்கும் புருசு, சோப்பு, கழிவறைக் காகிதம், புத்தகங்கள், காகிதம், சில சமயங்களில் என்னுடைய மூக்குக்கண்ணாடி என்று எந்தப் பொருளையுமே எனது சிறையறையில் நான் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அனுமதி வாங்க வேண்டும். அப்போது கூடவே யாராவது ஒருவர் இருந்து என்னைக் கண்காணித்துக்கொண்டிருப்பார். நான் முடித்தவுடனேயே அந்தப் பொருட்களைத் திருப்பித் தந்துவிட வேண்டும்.

குவாந்திகோவில் நான் நடத்தப்படும் விதத்தைக் குறித்துப் பொதுமக்கள் கூக்குரல் எழுப்பிய பிறகும், வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் பிஜே குரோலே ராஜிநாமாவுக்குப் பிறகும், சாதாரண கைதிகள் இருக்கும் ராணுவச் சிறை ஒன்றுக்கு மாற்றப்பட்டேன். என் சிறை வாழ்க்கையில் இதுதான் ஒப்பீட்டளவில் ‘மகிழ்ச்சி’யான காலகட்டம். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிறைக் காவலர்களின் இடைவிடாத கண்காணிப்பு, கை கால்களில் சங்கிலியுடன் மனிதத் தொடர்புகளே கிட்டத்தட்ட இல்லாமல் வைக்கப்பட்டிருந்தது ஆகிய வற்றுக்குப் பிறகு, இறுதியாக சிறைக்குள் நடமாடவும் சக மனிதர்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கவும் முடிந்தது.

தேசத்துரோகி, தேசவிரோதி…

‘எதிரிக்கு உதவி செய்தல்’ என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் (அமெரிக்க அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இது தேசத் துரோகக் குற்றம்), உளவுபார்த்தல் தொடர்பான சட்டம்-1917-ன் கீழும், கணினி மோசடி மற்றும் தவறான பயன்பாடு சட்டத்தின் கீழும் என்மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அரசு சுமத்தியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நீதிமன்ற விசாரணையின்போது அரசாங்கம் என்னைத் தண்டிப்பதற்காக எந்த அளவுக்குச் செலவுசெய்யத் தயாராக இருந்தது என்பதை நேரடியாகவே நான் கண்டு கொண்டேன்: கட்டுக்கட்டாகச் செலவு செய்யப்பட்ட பணம், பீப்பாய் பீப்பாயாகச் செலவான எரிபொருள், உருளை உருளையாக அச்சிடப்பட்ட காகிதங்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நிபுணர்களின் அதீதமான பங்களிப்புகள்!

என்னை ‘தேசத்துரோகி’, ‘தேசவிரோதி’என்றெல்லாம் சித்தரித்து எனக்கெதிராக வழக்கறிஞர்கள் வழக்காடி னார்கள். அதற்குப் பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே அவர்கள் என்னுடன் நட்புணர்வுடன் பழக ஆரம்பித்தார்கள், முகமன் சொல்வார்கள், அவ்வப்போது பேச்சுக்கொடுப்பார்கள். தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை அவர்கள் செய்கிறார்களே தவிர, அவர் களெல்லாம் நல்ல மனிதர்கள்தான் என்பது எனக்குப் புலனானது.

எனது வழக்கு விசாரணையின் முடிவில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும் என்பதையும் தண்டனை என்னவாக இருக்கும் என்பதையும் முன்கூட்டியே கணிப்பதற்குச் சிரமமாகவே இருந்தது. 35 ஆண்டு சிறைத்தண்டனை என்பதை நீதிபதி அறிவித்த பிறகு எனது வழக்கறிஞர் களை நான்தான் தேற்ற வேண்டியதாக ஆயிற்று. பல ஆண்டுகள் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் பலனில்லாமல் போனதால் மிகவும் நைந்துபோனதுடன் அவநம்பிக்கைக்கு உள்ளானார்கள். எங்கள் எல்லோருக்குமே அது மிகவும் மோசமான தருணம்.

பெண்ணாக மாறினேன்

விசாரணையின் காரணமாகப் பதுங்கியும் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டும் இருந்த நான் 22-08-2013-ல், அதாவது எனது தீர்ப்புக்கு மறுநாள், எனது பெயரை மாற்றிக்கொள்ளவும் பெண்ணாக மாறி வாழவும் முடிவெடுத்து அதை அறிவிக்கவும் செய்தேன். அப்போது நான் மோசமான சூழ்நிலையில் இருந்திருந்தாலும்கூட என்னைப் பொறுத்தவரை அது மிகவும் உச்சபட்ச தருணம். பெண்ணாக மாறுவதற்காக நான் பெற வேண்டிய மருத்துவச் சிகிச்சையை எனக்கு அளிப்பதற்கு ராணுவம் ஆரம்பத்தில் அனுமதிக்கவில்லை.

இறுதியாக, நான்கு மாதங்களுக்கு முன்புதான் - அதாவது எனது ஆரம்ப வேண்டுகோளுக்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து - எனக்கு ஹார்மோன் சிகிச்சை தொடங்கப்பட்டது. ராணுவ விதிமுறைப்படி ஒரு பெண் வளர்க்கக் கூடிய அளவுக்குக் கூந்தலை நானும் வளர்த்துக்கொள்ள வேண்டி இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன். எனினும், இந்தப் பாலின மாற்றம் என்பது என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் உச்சபட்ச தருணங்களில் ஒன்றாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் எனக்கு நடந்தவற்றையெல்லாம் சில சமயங்களில் புரிந்துகொள்வதற்குக் கஷ்டமாக இருக்கிறது. இவற்றில் தெளிவான, மாறாத விஷயம் என்றால் எனது நண்பர்கள், குடும்பத்தினர், உலகெங்கும் உள்ள கோடிக் கணக்கான மக்கள் போன்றோரிடமிருந்து எனக்குக் கிடைத்த ஆதரவுதான். தனிமைச் சிறை, நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள், மனதளவில் பெண்ணாக இருந்துகொண்டிருந்த நான் உடலளவிலும் பெண்ணாக மாறியது - இப்படி நான் எதிர்கொண்ட, உள்ளாக்கப்பட்ட ஒவ்வொரு போராட்டத்தையும் சமாளித்து மீண்டுவருவது மட்டுமல்லாமல், வளரவும், கற்றுக்கொள்ளவும், மனமுதிர்ச்சி பெறவும் நல்ல மனுஷியாக, மேலும் தன்னம்பிக்கையுடன் நடைபோடவும் செய்கிறேன் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

© ‘தி கார்டியன்’, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x