Last Updated : 20 Apr, 2017 11:03 AM

 

Published : 20 Apr 2017 11:03 AM
Last Updated : 20 Apr 2017 11:03 AM

சம்பாரணில் காந்தி சாதித்தது என்ன?

சம்பாரணில் காந்தி பெற்ற வெற்றி இந்தியா முழுமைக்கும் மிக முக்கியமானதாகிறது. இந்தியாவில் காந்தி நடத்திய முதல் சத்தியாகிரகம், ஒரு போராட்டம் கூட இல்லாமல் வெற்றிபெற்ற சத்தியாகிரகம் என்பதுதான் இதன் சிறப்பு. எனினும் சம்பாரணில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பெற்ற வெற்றி காந்தியை அத்துடன் முடங்கிப்போகச் செய்யவில்லை. வெற்றியை எண்ணி மகிழ்ச்சிகொள்வதைவிட பிரச்சினையின் வேரை இனம் கண்டு அதைக் கிள்ளியெறிவதிலும், பெற்ற வெற்றியை விவசாயிகள் தக்கவைத்துக்கொள்வதிலும்தான் காந்தி கவனம் செலுத்தினார். இந்த வெற்றியை காந்தி எப்படிப் பெற்றார் என்பதைச் சிறு குறிப்புகளாகத் தொகுத்துக்கொள்வது அவரது வழிமுறைகளைப் புரிந்துகொள்வதில் நமக்கு உதவும்.

1. சம்பாரண் பிரச்சினையை காந்தியிடம் சுக்லா திரும்பத் திரும்ப எடுத்துரைத்தபோது, நேரில் வந்து பார்த்துவிட்டுத்தான் தன்னால் எதுவும் சொல்ல முடியும் என்றார்.

2. சம்பாரணுக்கு வந்த பிறகு, அங்குள்ள விவசாயிகளையும் விவசாயிகளின் வழக்கறிஞர்களையும் ஒருங்கிணைத்தார். வழக்கம்போல் நீதிமன்றம் போய் முறையிடுவது பலனளிக்காது என்று கருதி, அடித்தளமான ஆதாரங்களைத் திரட்டினார்.

3. வெவ்வேறு பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கூற்றுகளை மிகை களைந்து முறைப்படி பதிவுசெய்துகொண்டார்.

4. ஆங்கிலேய முதலாளிகளையும் அவர்களின் மேனேஜர்களையும் ஆங்கிலேய அரசு அதிகாரிகளையும் சந்தித்துத் தன் நோக்கத்தை அவர்களுக்கு மிகவும் தாழ்மையாகப் புரியவைக்க முயன்றதோடு, அவர்கள் தரப்பின் வாதங்களையும் கேட்டுக்கொண்டார்.

5. சிறைசெல்லத் தயாராக இருந்தது மட்டுமல்லாமல், தான் சிறை செல்ல நேரிட்டால் தங்கள் முயற்சி தடைபடாமல் நடக்கும்விதத்தில் காந்தி தன் சகாக்களைத் தயார்செய்தார்.

6. காந்தி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது அளித்த உத்வேகத்தில் தங்கள் விசாரணையை காந்தி தரப்பினர் முடுக்கிவிட்டதுடன் அதிகாரிகள், முதலாளிகளைச் சந்தித்துத் தொடர்ந்து தங்கள் பக்க நியாயங்களை அவர்களிடம் முன்வைத்தார்கள்.

7. விசாரணைக் குழு அமைக்கும்படியும் அதில் விவசாயிகள் தரப்பில் காந்தி உள்ளிட்டவர்கள் இடம்பெறும்படியும் செய்தது.

8. விவசாயிகளுக்கு ஆதரவான பரிந்துரைகளை விசாரணைக் குழு முன்வைக்கும்படி செய்தது.

9. விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் சட்டமாக்கப் பட்டு இறுதியில் அமல்படுத்தப்பட்டது.

10. வேறு விதமாகப் பார்க்கப்படும் என்பதாலும் நாடு தழுவிய போராட்டமாக ஆகிவிட்டால் உள்ளூரில் வெற்றி கிடைக்காது என்பதாலும், தனது ஒட்டுமொத்த விசாரணை காலத்திலும் காங்கிரஸின் பேரை காந்தி எந்த விதத்திலும் பயன்படுத்தாதது.

எது வெற்றி?

பொருளாதாரரீதியான வெற்றியைவிட விவசாயிகள் தற்போது பெற்றிருக்கும் மனரீதியான வெற்றியே முக்கியமானது என்று காந்தி கருதினார். அஞ்சி ஒடுங்கி இருந்த ஏழை விவசாயிகளால், ஆங்கிலேய முதலாளிகளின் அதிகாரத்தை அசைக்க முடியும் என்ற நிலைக்கு வந்ததே இந்தப் போராட்டத்தில் கிடைத்த உச்சபட்ச வெற்றி என்று காந்தி கருதினார். இந்த உத்வேகம் இந்தியா முழுவதற்கும் பரவ வேண்டும் என்று விரும்பினார்.

இந்த வெற்றியைப் பற்றி காந்தி கூறுகிறார்: “இறுதி முடிவு என்பது அரசியல்ரீதியானதாக இருக்கலாம்; ஆனால், இந்த வெற்றிக்குக் காரணம் என்பது அரசியல் சாராத ஒன்று… தன்னலமில்லாமல் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சேவையாற்றினால் இறுதியில் அது அரசியல்ரீதியாக தேசம் முழுமைக்கும் நன்மை பயக்கும்.”

தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு

வெற்றி கிடைத்ததும் சம்பாரணை அப்படியே விட்டுவிட்டுப் போய்விட முடியாது என்று கருதிய காந்தி, சம்பாரணுக்கு வந்து கல்வி, சுகாதாரச் சேவை புரிய நாடு முழுவதிலுமிருந்து தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று காந்தியின் நண்பர்கள் பலரும் சம்பாரணுக்கு வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் செல்வச் செழிப்பான சூழலில் வளர்ந்தவர்கள். சம்பாரணில் அவர்களுக்குத் தங்குவதற்கு இடமும் உண்பதற்கு உணவும் மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அங்கு வந்து அவர்கள் சேவையாற்றினார்கள்.

பள்ளிக்கூடங்கள், கல்வி முறை

சம்பாரண் பிராந்தியத்துக்குள் ஆறு பள்ளிக்கூடங்களை காந்தி திறந்தார். அந்தப் பள்ளிக்கூடங்களின் சுற்றுப்புறத்தில் உள்ள 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனைவருக்கும் கல்வி புகட்ட வேண்டும் என்பது அவரின் திட்டம். போக்குவரத்து வசதியின்மை, வறுமை, விழிப்புணர்வு இல்லாத நிலை ஆகியவற்றால் கணிசமான சிறுவர்களே அங்கு கல்வி கற்க வந்தார்கள். இந்திய முறைப்படியும் ஆங்கிலக் கல்வி முறையின் சாதகமான அம்சங்களில் ஒரு சிலவற்றை எடுத்துக்கொண்டும் அங்கு கல்வி போதிக்கப்பட்டது. கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் போன்ற பாடங்களில் அடிப்படையான விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. நீதிக் கல்வி மிக முக்கியமாகச் சொல்லிக்கொடுக்கப்பட்டது.

இந்தப் பணிகள் எல்லாவற்றையுமே ஆங்கிலேய அரசும் முதலாளிகளும் எரிச்சலுடன் பார்த்துக்கொண்டி ருந்தார்கள். தோட்ட மேலாளர்களின் தூண்டுதலால் ஒரு பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது. அந்தப் பள்ளியை காந்தியின் அன்பர்களும் மக்களும் சேர்ந்து மீண்டும் கட்டியெழுப்பினார்கள்.

இப்படியாக, போராட்ட வெற்றி ஏற்றிய தீபத்தை விழிப்புணர்வு என்னும் கரம் கொண்டு காப்பாற்றும் முயற்சிகளை எடுத்த பிறகு, காந்திக்கு வேறொரு போராட்டத்துக்கான அழைப்பு வருகிறது. சம்பாரணில் சிறிய அளவிலென்றாலும் முறையாகச் செயல்படும் விதத்தில் சில கட்டமைப்புகளை ஏற்படுத்திவிட்டு காந்தி அங்கிருந்து சென்றார்.

மிக மிக ஆபத்தான மனிதர்!

காந்தியின் சம்பாரண் போராட்டத்தைப் பற்றி பேராசிரியர் கில்பர்ட் முர்ரே ‘ஹிப்பர்ட் ஜர்னல்’ என்ற இதழில் இப்படி எழுதுகிறார்: “ஒரு ஆன்மாவுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெறும் தற்போதைய போராட்டம் ஒன்றை நான் உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன்… உடல் சார்ந்த இன்பங்கள், செல்வம், வசதி, பாராட்டு, பதவி உயர்வு போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஆனால் தான் சரி என்று நினைப்பதைச் செய்வதில் தீவிரமான முனைப்பு கொண்ட ஒரு மனிதரை எதிர்கொள்வதில் அதிகாரத் தரப்பினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த மனிதர் மிகவும் ஆபத்தானவரும் மிகுந்த சங்கடத்தைக் கொடுப்பவருமான எதிராளியாவார். ஏனெனில், அவரது உடலை நீங்கள் வெற்றிகொள்ள முடியும். ஆனால், அவரது ஆன்மாவை உங்களால் ஏதும் செய்ய முடியாது.” 1918 ஜனவரி இதழில் கில்பர்ட் அப்படி எழுதினார். அதற்குப் பிறகு 30 ஆண்டுகள் மீண்டும் மீண்டும் அந்த வாசகங்களை இயல்பாகவே உறுதிப்படுத்தியபடியே காந்தி வாழ்ந்தார்.

மாற்றங்களை ஏற்படுத்தலாம்!

சம்பாரண் இன்று காந்தி இல்லாமல் தவிக்கிறது. சம்பாரண் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் அப்படியே. இந்தியாவில் மாபெரும் சத்தியாகிரகத்துக்குத் தொடக்கப் புள்ளியைக் கொடுத்த சம்பாரண் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு இது! அங்குமிங்குமாக எழும் மக்கள் எழுச்சிகள் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் அவற்றின் பின்னே முறையான சித்தாந்தமோ, வழி நடத்த காந்தி போன்ற தலைமையோ இல்லாமல் அந்தப் போராட்டங்களில் பல திசைமாறிச் செல்வதும், அரசுகளாலும் பிற ஆதிக்க சக்திகளாலும் ஒடுக்கப்படுவதும் நிகழ்கிறது. போராட்ட உணர்வுள்ள ஒவ்வொருவரும் சம்பாரண் சத்தியாகிரகம் உள்ளிட்ட காந்தியின் போராட்டங்களைப் படித்தால், அவர்களால் கற்பனையே செய்துபார்க்க முடியாத அளவில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். நூற்றாண்டுக்கு முந்தைய போராட்டம் ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்வது இனிவரும் பல நூற்றாண்டுகளுக்கும் நமக்கு நிச்சயமாகத் துணைபுரியக் கூடும்!

(‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் வெளியான ‘என்றும் காந்தி!’ தொடரின் சுருக்கப்பட்ட ஒரு பகுதி இது)

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x