Last Updated : 04 Oct, 2014 09:06 AM

 

Published : 04 Oct 2014 09:06 AM
Last Updated : 04 Oct 2014 09:06 AM

காமராஜர்: மக்களுக்கான அரசியல்வாதி

காமராஜர் மறைந்த நாள்: அக்டோபர்-2, 1975

தற்கால அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது நமது மனது காமராஜருக்காக ஏங்குவதைத் தவிர்க்க முடியாது!

அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் எத்தனை பேருக்கு அரசியலில் நம்பிக்கை உண்டு என்பது அவரவருக்குத்தான் தெரியும். அரசியல் வழியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று காமராஜர் முழுமையாக நம்பினார். தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படி நம்பிய இறுதி அரசியல்வாதி காமராஜர்தான்!

அந்த ஆண்டு 1956 அல்லது 1957 ஆக இருக்கலாம். காமராஜர்தான் முதல்வராக இருந்தார். நான், நான்காம் வகுப்பில் இருந்தேன் என்று நினைவு. அது ஒரு அரசு உதவிபெறும் பள்ளி. அதற்கு முதல் மாதத்தில் நான் செலுத்தியிருந்த கல்விக் கட்டணமான ஆறு அணாவை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அன்றிலிருந்து நான் முதுகலைப் படிப்பு முடிக்கும்வரை கல்விக் கட்டணம் என்று எதுவும் செலுத்தியதில்லை. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது கல்வி விதி-92ன்படி கல்விக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தேன்.

எல்லோரும் கொண்டுவருவோம்!

இப்போது சத்துணவுத் திட்டம் இருப்பதுபோல அப்போது பள்ளிகளில் ஒரு வகை மதிய உணவுத் திட்டம் அமலில் இருந்தது. மாணவர்களையும் சமுதாயத்தையும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கச் செய்த முறை அபாரமானது. தொடக்கப் பள்ளியில் வகுப்புக்கு ஒரு உண்டியல் வைத்து அன்றாடம் மாணவர்கள் அதில் சில்லறைக் காசு சேர்ப்போம். வகுப்புகளுக்குள் இதில் போட்டி உண்டு. பள்ளியில் கூட்டுவழிபாடு முடிந்தவுடன் மாணவர்கள் வீட்டிலிருந்து அன்றைக்குக் கொண்டுவந்த காய்கனி, தேங்காய் போன்றவற்றை மிகவும் சிலாகித்துச் சொல்லி ஒரு ஆசிரியர் ஏலம் விடுவார். இங்கிலாந்தில் இப்படி ஒரு நடைமுறை (ப்ரிங்க் அண்ட் பை) இருந்ததாக பின்நாட்களில் தெரிந்துகொண்டேன். தை மாத விடுமுறை நாட்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, நெல்லாகக்கூட மாணவர்கள் நிதி வசூலித்துவருவோம். அட்டைகளின் கட்டங்களில் கையொப்பமிடுபவர்களிடம் கட்டத்துக்கு நான்கணா வீதத்தில் பெற்றுவருவோம்.

எங்கள் அப்பச்சி

1968-ம் ஆண்டு, டிசம்பர் மாதம். கிறிஸ்துமஸ் விழாக் காலம். காமராஜர், நாகர்கோவில் தொகுதி நாடாளு மன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவருக்காகப் பிரச்சாரம் செய்ய நானும் சில மாணவர்களுடன் திங்கள்சந்தை என்ற ஊரில் தங்கியிருந்தேன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டாக்டர் மத்தையசுக்கு ஆதரவாக காரைக்குடி சா. கணேசன் பேசும்போது காமராஜரைக் குறிப்பிட்டு, “ உள்ளூர் சந்தையில் விலைபோகவில்லை, வெளியூருக்கு வந்திருக்கிறது” என்பார். அதற்குச் சிறிது காலத்துக்கு முன்பு நடந்த விருதுநகர் தேர்தலில் காமராஜர் வெற்றிபெறவில்லை என்பதை அவர் அப்படிக் குறிப்பிட்டார். ஆனால், காமராஜருக்கு நாகர் கோவில் வெளியூரல்ல என்பதை நாங்கள் பிரச் சாரத்தின்போது கண்டோம். சென்ற கிராமங்களில் எல்லாம் மக்கள் ஊருக்கு வெளியே வந்து எங்களை வரவேற்று, “எங்க அப்பச்சிக்கா நீங்க ஓட்டு கேக்க வரணும்?”, “எங்க தாத்தாவுக்கு நாங்க ஓட்டு போட மாட்டோமா?” என்றெல்லாம் கேட்பார்கள். மரத்தடியில் விசுப்பலகையில் எங்களை உட்காரவைத்துப் பதநீர் கொடுத்து உபசரிப்பார்களே தவிர, வாக்கு கேட்க விட மாட்டார்கள். இவ்வளவு செல்வாக்குடன் இருந்தாலும், தனக்குப் பிரச்சாரம் செய்ய வந்துகொண்டேயிருந்த பெருங்கூட்டத்தில் யாரெல்லாம் பேசினால் தனக்குப் பாதகமாகும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.

தலையணையின் கீழ் ரூ. 160

தொண்டர்கள் ஒவ்வொருவரையும் அவரால் பெயரிட்டு அழைக்க முடியும். நல்லதானாலும், கெட்ட தானாலும் அவர்களுடன் பங்கேற்க அவர் தயங்கு வதில்லை. சுதந்திரம் அடைந்தால்தான் திருமணம் செய்து கொள்வோம் என்று இருந்த தொண்டர்களுள் எனது மாமனாரும் ஒருவர். அவரது திருமணத்தின்போது காமராஜருக்குக் கடுமையான பல்வலி. அதைப் பொருட்படுத்தாமல், முகத்தோடு தலையையும் ஒரு துண்டால் போர்த்திக்கொண்டு திருவல்லிக்கேணியில் நடந்த திருமணத்துக்கு வந்து, இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்ததாகக் கூறுவார்கள். அது மட்டுமல்லாமல், சிரமப்படுகிறவர்களுக்கு அவர்கள் கேட்குமுன் கொடுப்பது அவர் வழக்கம். இத்தனைக்கும் தன் கையில் ஒரு சல்லிக் காசுகூட அவர் வைத்துக்கொள்வதில்லை. ‘அவர் இறந்தபோது அவருடைய தலையணைக்குக் கீழே 160 ரூபாய் ஒரு காகித உறையில் இருந்தது’ என்று அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. அது ஒன்றும் கட்டுக்கதையல்ல. காமராஜரைப் பற்றிச் சொல்லப்படும் இதுபோன்ற விஷயங்கள் கட்டுக்கதை போன்று நமக்குத் தோன்றுவதற்குக் காரணமே, தற்போதைய அரசியல்வாதிகளின் ‘எளிமையான’ வாழ்க்கைமுறைதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

எதிர்கொள்வது, வெற்றிகாண்பது!

பிரச்சினைகளுடன் சமாதானம் செய்துகொள்வது அவருக்குப் பழக்கமில்லை. அரசியலானாலும் நிர்வாக மானாலும் உள்கட்சிப் பூசலானாலும் எதிர்கொண்டு சந்திப்பார். பிரச்சினை என்று வந்துவிட்டால், அதைத் தீர்க்கும்வரை அவர் தூங்குவதில்லை. இப்படி விடாப்பிடியாக இருப்பவர்கள் அரசியலில் வெற்றி காண்பது அரிது. ஆனால், காமராஜர் அந்த அதிசயத்தைச் செய்துகாட்டினார். அன்றைய மத்திய உள்துறை அமைச் சராக இருந்த பிரம்மானந்த ரெட்டி தலைமையில், காமராஜரைப் பற்றிய ஒரு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம், “காமராஜரின் வாழ்க்கையைச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், பிரச்சினைகளை எதிர்கொள்வது, வெற்றிகாண்பது என்று கூறிவிடலாம்” என்றார். காமராஜரின் தன்னம்பிக்கையும் துணிவும் நிகரற்றவை.

சுட்டது, விட்டோம் என்று கையை உதறிவிடுவது அவர் வழக்கமல்ல. தீர்வே இல்லை என்றிருந்த தமிழ்நாட்டு நெசவாளர் பிரச்சினைக்கு, நூல் விநியோகத்தில் ரேஷன் முறையை அமல்செய்து, தீர்வுக்கு முயற்சி செய்தார். இதற்காக அப்போது ஐந்தரை லட்சம் ரேஷன் அட்டைகள் இருந்தனவாம். நெசவாளர்கள் பட்டினி கிடந்தபோது ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து உண வளிப்பதில் பிடிவாதமாகச் செயல்பட்டார்.

‘தி இந்து’ பாராட்டிய காமராஜரின் ஆங்கிலம்

காலணா பத்திரிகையான ‘ஜெயபாரதம்’முதல் ‘தினச் செய்தி’, ‘காங்கிரஸ் செய்தி’, பின்னர் ‘நவசக்தி’வரை இத்தனை பத்திரிகைகளும் அவர் பராமரிப்பில் நடை பெற்றவையே. அவரைப் படிக்காத மேதை என்று சொல்வது உயர்வுநவிற்சி கருதிச் சொல்வதாகத்தான் இருக்க வேண்டும். அவர் நிறையப் படித்தார். அன்றாடம் எல்லா தினசரிகளையும் படித்துவிடுவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமமாகவே சரளமாகப் பேசக் கூடியவர். 1969-ல் ஒருமுறை அவரது வீட்டு மாடி அறையில் அவரைச் சந்தித்தேன். ஒற்றைக் கட்டில்; அருகே சில கதர் வேட்டிகளும் சட்டைகளும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. ராக்கைகளில், அறையின் ஒரு சுவர்ப் பரப்பு முழுவதும் தமிழ், ஆங்கிலப் புத்தகங்களாக இருந்தன. நாடாளுமன்றத்தில் அவர் ஆங்கிலத்தில் பேசியதை ஒருமுறை ‘தி இந்து’ நாளிதழ் ‘காமராஜர் மாசில்லாத ஆங்கிலத்தில் உரையாற்றினார்’ என்று விவரித்திருந்தது.

எனக்குத் தெரியும், உட்கார்!

நல்ல உயரம். களையான முகத்தில் தீட்சண்யமான, புடைபரந்த கண்களோடு கம்பீரமாக இருப்பார். தேனாம் பேட்டை மைதானக் கூட்டமொன்றில், தமிழ்நாடு காங் கிரஸ் தலைவராக கக்கனை காமராஜர் அறிவித்தார். கூட்டத்தின் பின் பகுதியிலிருந்து மற்றொரு தலைவரின் பெயரைச் சொல்லி ஒரு சலசலப்பு. “எனக்குத் தெரியும், உட்கார்” என்று அவர்களை அமர்த்தினார். பார்ப்பவர்கள் அவரது கம்பீரத்துக்கு அடிபணியாமல் இருக்க முடியாது. மேடைப் பேச்சிலும் நெஞ்சைத் தொடும் உண்மையின் தொனியும், அந்த உண்மை மட்டுமே கோத்துத்தரும் சொற்களின் அழகும் அவரது பேச்சைக் கேட்டவர்களின் அனுபவம்.

காமராஜர், இரவில் வெகுநேரம் கழித்தே தூங்கு வார். மாம்பலம் டாக்டர் சவுரிராஜன், தலைச்சேரி தாமோதரன் இவர்களோடு காமராஜர் எலியட்ஸ் கடற்கரையில் இரவில் வெகு நேரம் அரசியல் அலசிய பிறகு வீட்டுக்குச் செல்வார். ஒரு நாளைக்கு இரு வேளை நீராடி உடை மாற்றுவது அவரது வழக்கம். அசைவ உணவுகளில் பிரியம் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அன்பர்கள் கோயில் பிரசாதம் கொடுத்தால் அணிந்துகொள்வது தவிர அவராகவே சாமி கும்பிட்டுப் பார்த்ததில்லை என்பார்கள். 1972-ல் விலைவாசி எதிர்ப்புப் போராட்டம் ஒன்றைத் தமிழகம் முழுவதும் காமராஜர் தீவிரமாக நடத்திக்காட்டினார். இறுதிவரை இந்திரா காந்தியுடன் அவர் சமரசம் செய்துகொள்ளவேயில்லை. அவ்வளவு தன்னம்பிக்கையும் துணிவும் கொண்டிருந்த காமராஜர் அதற்கு எப்படிச் சம்மதிப்பார்?

- தங்க. ஜெயராமன்,

ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x