Published : 19 Jul 2015 11:04 AM
Last Updated : 19 Jul 2015 11:04 AM

ஓட்டைப் பொருளாதாரமும் சூப் அறைகளும்!

நம் கதையை 2001-ல் தொடங்குவோம். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒரு நாடு ஐரோப்பியப் பொருளாதார மண்டலத்தில் சேர்வதற்கு, 1992-ல் நடந்த மாஸ்ட்ரிட் மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி கடன் அளவையும் பற்றாக்குறை பட்ஜெட் அளவையும் பராமரித்தாக வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்பது கடினம். எனினும், 2001 ஜனவரியில் ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தில் கிரேக்கமும் சேர்ந்தது.

கனாக்காலம்

2001 முதல் 2007 வரையில் கிரேக்கத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 4.3% ஆக உயர்ந்தது. அப்போது ஐரோப்பிய மண்டலத்தின் சராசரி வளர்ச்சி வீதமே 3.1% தான். 2002 முதல் 2007 வரையில் ஐரோப்பிய செலாவணி முதலாளித்துவ நாடுகளில் விரிவடைந்த நேரத்துடன் இந்த நேரமும் இசைந்திருந்தது. அதிக வருமானம் தேடி தனியார் முதலீடு, மையத்திலிருந்து பிற பகுதிகளுக்குப் பாய்ந்தது. எனவே கடன் பெறுவது எளிது என்ற நிலை ஏற்பட்டது. எளிதாகக் கடன் கிடைத்தது, தனியார் நுகர்வு அதிகரிப்பு, அரசு செலவு அதிகரிப்பு போன்றவை இதற்கு ஆதரவாக அமைந்தன. துரதிருஷ்டவசமாக அரசின் நிதியில் பெரும் பகுதி 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கும், ராணுவத்துக்கும் செலவிடப்பட்டது.

அமெரிக்க மந்தநிலை

அதற்குப் பிறகு அமெரிக்கப் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சரியத் தொடங்கியது. 2007 ஜனவரி தொடங்கி ஜூன் 2009 வரை நீடித்தது. உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி அமெரிக்காவைக் கடுமையாகப் பாதித்தது. அதன் லேமன் பிரதர்ஸ் நிறுவனம் 2008 செப்டம்பரில் திவாலானது. அதன் பிறகு நிதி நெருக்கடியும் பொருளாதார மந்த நிலையும் உலகம் முழுக்கப் பரவியது. தனியார் முதலீடு மையத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு 2002-ல் பாயத் தொடங்கியது நின்று, 2008-ல் எதிர்திசையில் போகத் தொடங்கியது. இவ்விரண்டு செயல்களும் கிரேக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, கடன் தவணையை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தும் அதன் நிதிநிலையையும் கடுமையாகப் பாதித்தது. ஐரோப்பிய பொருளாதார மண்டலங்களில் சேராத நாடுகளுக்கு இருந்த ஒரு வசதி கிரேக்கத்துக்கு கிட்டாமல் போனது. அதனால் தன்னுடைய செலாவணியின் மதிப்பையும் குறைக்க முடியவில்லை, வட்டி வீதத்தையும் உயர்த்த முடியவில்லை. இதனால்தான் கிரேக்கம் தடுமாறத் தொடங்கியது.

பாப்பாண்ட்ரூ வீசிய குண்டு

தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு கிரேக்கம் தன்னுடைய பற்று வரவு கணக்கை எப்படியோ கூட்டி, குறைத்து 'சமாளித்தது'. ஆனால் 2009-ல் குட்டு அம்பலமானது. 2009 அக்டோபரில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பாப்பாண்ட்ரூ இந்தத் தில்லுமுல்லுகளைத் தவிர்த்து ஒழுங்காக கணக்கு, வழக்குகளை பராமரிக்கச் சொன்னார். அப்போதுதான் செலவுக்கு ரொக்கமில்லாமல் தவிக்கவில்லை, பணமே இல்லாமல் 'திவால்' ஆகிவிட்டது கிரேக்கம் என்று உலகம் அறிந்துகொண்டது. அதன் பிறகு என்ன, நரகத்தின் அனைத்து வாயில்களும் கிரேக்கத்துக்குத் திறந்துவிடப்பட்டன.

2010 மே மாதம் தொடங்கிய சிக்கலில் கிரேக்கம் மேலும் ஆழ்ந்தது. இந்த நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து 2010 மே மற்றும் 2012 மார்ச் என்று 2 முறை கிரேக்கத்தைக் கரைசேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, பலனில்லை. கிரேக்கத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு முன்பிருந்ததைவிட 27% குறைந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் 25% ஆனது. இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 60% ஆக இருக்கிறது. கிரேக்கத்தின் கடன் மொத்த உற்பத்தி மதிப்புக்கு இடையிலான விகிதம் 175% ஆக இருக்கிறது.

சிக்கனம் சீர்திருத்தம்தானா?

கடன் சுமையிலிருந்து மீள கிரேக்கம் சுதந்திரச் சந்தைக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று 'மும்மூர்த்திகள்' என்று அழைக்கப்படும் ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகம், ஐரோப்பிய மத்திய வங்கி (இ.சி.பி.), பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) ஆகிய மூன்று அமைப்புகளும் வலியுறுத்தின. அரசின் நிதித்துறைச் சீர்திருத்தங்களாக மேலும் மேலும் சிக்கன நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் பரிந்துரைகளை ஏற்பதன் மூலம் அரசுக்கும் குடும்பங்களுக்கும் செலவிடுவதற்கான தொகை மேலும் குறைக்கப்படுகிறது. அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள் என்ற பெயரில் ஓய்வூதியப் பலன் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை வெட்டுமாறு கூறப்பட்டது. இந்த யோசனைகளால் மக்களுடைய வாங்கும் சக்தி வெகுவாகக் குறுக்கப்படுகிறது. திறமையை அதிகப்படுத்த அரசு நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற யோசனையும் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால், இவையெல்லாம் எந்த அளவுக்கு உருப்படியான யோசனைகள்?

கிரேக்கப் பொருளாதாரம் வளருவதற்குப் பதிலாகப் பொருளாதாரச் சரிவு அதிகமாகவே இவை வழிவகுக்கும். காரணம், எல்லாத் துறைகளும் செலவைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாகச் செலவிட்டால் விற்பனை, கொள்முதல், விநியோகம் என்று அனைத்துமே குறைந்து பொருளாதாரம் முடங்க ஆரம்பிக்கும்.

ஆனால் நவ பழமைவாதச் சிந்தனையாளர்களோ அரசும் குடும்பங்களும் செலவைக் குறைத்தாலும் பொருளாதாரம் மீட்சி பெற்றுவிடும் என்று நம்புகின்றனர். சிக்கனமான தயாரிப்பினாலும் குறைந்த ஊதியத்தாலும் உற்பத்திச் செலவு குறையும், அதனால் லாபமும் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது ஊதியம் குறைந்தாலும் தொழிலாளர்கள் வேறு வேலைக்குப் போகாமல் கிடைத்துக்கொண்டிருப்பார்கள் என்றே அவர்கள் கருதுகின்றனர்.

இப்போதைய உலகச் சூழலில் இவையெல்லாம் வெறும் கற்பனைதான். ஈரோ டாலர் என்பது ஐரோப்பிய நாடுகளின் பொதுச் செலாவணி. எனவே கடன் சுமையில் ஆழ்ந்துள்ள கிரேக்கத்தால் ஐரோப்பிய டாலரின் மதிப்பை மாற்ற முடியாது. அதே வேளையில் கிரேக்கத்துக்கு என்று தனிச் செலாவணி இருந்திருந்தால் அதன் மதிப்பைக் குறைத்து, ஏற்றுமதியையாவது அதிகப்படுத்திச் சிறிது பயன் கண்டிருக்கலாம். இதனால் வேலையும் இல்லாமல் கையில் பணமும் இல்லாமல் பட்டினியால் வாடும் கிரேக்கர்கள், அரசு நடத்தும் சூப் சமையலறைகளுக்குப் படையெடுக்கின்றனர். 1929-ல் உலகப் பொருளாதார வீழ்ச்சியின்போது சூப் சமையலறைகள்தான் மக்கள் பட்டினியைப் போக்கிக்கொள்ளும் பொது இடமாகத் திகழ்ந்தன. இப்போதும் சூப் சமையறைகளுக்கான தேவை அதிகரித்துவிட்டது.

ஏன் இந்த முறுக்கு?

இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துள்ள சுதந்திரச் சந்தை சீர்திருத்தங்களைத்தான் கிரேக்கர்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் நிராகரித்தனர். ஆனால், சிரிஸா கட்சி கருத்தறியும் வாக்கெடுப்புக்கு முன்பு என்ன பேசியதோ, அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை இப்போது எடுத்திருக்கிறது. இதுதான் முடிவென்றால், இந்த முழக்கங்கள், கருத்தறிவும் வாக்கெடுப்பு, முரண்டு எல்லாம் எதற்கு? எல்லாவற்றையும் உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது!

- 'தி இந்து' (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x