Published : 27 Feb 2015 10:35 AM
Last Updated : 27 Feb 2015 10:35 AM

வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ 10

உலகப்புகழ் பெற்ற கவிஞர், கல்வியாளர் ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ (Henry Wadsworth Longfellow) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 அமெரிக்காவின் போர்ட் லேண்ட் நகரில் பிறந்த வர் (1807). பள்ளியில் மிகவும் கெட்டிக்கார மாணவர் என்று பெயர் பெற்றவர்.

 கற்பதிலும் புத்தகம் வாசிப்பதிலும் இவருக்கு இருந்த ஆர்வத்தை அம்மா ஊக்கப்படுத் தினார். பல நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். தனது முதல் கவிதையை வெளியிட்டபோது லாங்ஃபெல்லோவுக்கு 13 வயது.

 போடன் கல்லூரியில் 15 வயதில் சேர்ந்தார். பட்டப் படிப்பு முடிப்பதற்குள் 40 கவிதைகளை வெளியிட்டார்.

 ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுகீசிய மொழிகளைக் கற்றார். தான் படித்த கல்லூரியிலேயே பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில் நிறைய பாடப் புத்தகங்களை எழுதினார். ‘எ பில்கிரிமேஜ் பியாண்ட் த ஸீ’ என்ற பயண நூலையும் எழுதினார்.

 1836-ல் ஹார்வர்டு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1839-ல் ‘வாய்சஸ் ஆப் த நைட்’ கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ‘தி வில்லேஜ் ஆஃப் பிளாக்ஸ்மித்’, ‘த ரெக் ஆஃப் த ஹெஸ்பெரஸ்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றன.

 பேராசிரியர் பணியில் இருந்து 1853-ல் ஓய்வு பெற்று முழுநேர எழுத்துப் பணியில் ஈடுபட்டார். 1859-ல் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 1861-ல் உடையில் தீப்பற்றியதில் மனைவி இறந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

 முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு சவரம் செய்ய முடியாமல் போனதால் நீண்ட தாடி வளர்ந்தது. நாளடைவில் அதுவே அவரது அடையாளமானது.

 இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கை, கலாச்சாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து இருந்தன. புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தினார்.

 ஐரோப்பா, ஆசியா, அரேபிய நாடுகளை சேர்ந்த பல புகழ்பெற்ற கவிதைகளைத் தொகுத்து 31 தொகுதிகளாக ‘போயம்ஸ் ஆஃப் பிளேசஸ்’ என்ற பெயரில் 1874-ல் வெளியிட்டார். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

 வாழும் காலத்திலேயே புகழ்வாய்ந்த கவிஞராகப் போற்றப்பட்டார். அனைத்து தரப்பினரும் விரும்பும் படைப்பாளியாகத் திகழ்ந்தார். இனிமையானவராக, எளிமையானவராக, தன்னடக்கம் மிக்கவராகத் திகழ்ந்த லாங்ஃபெல்லோ 75 வயதில் (1882) மறைந்தார். 2007-ல் அமெரிக்கா இவரது பெயரில் தபால் தலை வெளியிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x