Published : 16 Sep 2014 09:13 AM
Last Updated : 16 Sep 2014 09:13 AM

லீ க்வான் யூ - 10

லீ க்வான் யூவுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து...

* சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக்கிய சிற்பியான ‘லீ க்வான் யூ’, பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார்.

* சிறு வயதில் லீ க்வான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப்போரில் ஜப்பான், இங்கிலாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்கு போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது.

* உலகில் அதிக ஆண்டு காலம் ஜனநாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந்தவர் லீ. டோயின்பீயின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். ‘கற்பனைத்திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை செதுக்குவார்கள்’ என்ற அவரது கருத்தில் நம்பிக்கை கொண்டவர்.

* இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காந்திக்கு எவ்வளவு வருத்தத்தைக் கொடுத்ததோ லீக்கு அந்த அளவு வருத்தம் கொடுத்தது மலேசியா - சிங்கப்பூர் பிரிவினை. இயற்கை வளங்கள் இல்லாத சிங்கப்பூரை மலேசியர்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்த கோபமே லீயின் வைராக்கியமாக மாறி சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்தது.

* ‘அடியாத மாடு படியாது’ என்பதில் நம்பிக்கை கொண்டவர் லீ. ‘‘பள்ளியில் படிக்கும்போது நான் தவறு செய்தால் ஆசிரியர்கள் பிரம்பால் விளாசு வார்கள். அதுவே என்னை ஒழுக்கமாக மாற்றியது. அதனால்தான், தவறு செய்வோருக்கு பிரம்படி கொடுக்கும் தண்டனை அமல்படுத்தினேன்’’ என்பார்.

* விளையாட்டு, பொழுதுபோக்கு பிரியர் லீ. கோல்ப், நடனம், நீச்சல் அவருக்கு பிடித்தமானவை. சிகரெட், பீர் பழக்கம் இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டவர். ஒரு கட்டத்தில் தொப்பை போடுவதால் பீரை நிறுத்தினார். புகைப்பதால் மக்கள் ஓட்டுப்போட யோசிக்கிறார்கள் என்று உளவுத்துறை சொன்னபோது அதையும் நிறுத்தினார்.

* லீயை பொறுத்தவரை புனைவு நூல்கள் குப்பை. அவரே பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் டாம் கிளான்சி.

* இன்றைய அரசியல்வாதிகள் லீயிடம் கற்கவேண்டியதில் முக்கியமானது மதச்சார்பின்மை. ‘அரசியல், பொருளாதாரம் பற்றி ஏதேனும் சொல்ல வேண்டுமானால் உங்கள் மத அங்கிகளை கழற்றிவிட்டு வாருங்கள்’’ என்பார் லீ.

* அவரது ஆட்சியில் கேள்விகள் கேட்ட எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமையாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஊழல், வறுமை, உள்நாட்டு குழப்பம் என்று சிக்கலாக இருந்த சூழலில் நாட்டை முன்னேற்ற தனக்கு வேறு வழி இல்லை என்றார் லீ.

* தன்னைப் பற்றிய சர்ச்சைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார். படித்தவர்கள், படித்தவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற அவரது கொள்கை மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. மனித அறிவு வளர்ச்சிக்கும் மரபணுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதிய லீ அவ்வாறு அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x