Published : 19 Dec 2014 10:26 AM
Last Updated : 19 Dec 2014 10:26 AM

லியோனிட் பிரெஷ்னேவ் 10

ரஷ்யாவின் அதிபராக, இறக்கும் வரை பதவி வகித்த லியோனிட் இலீச் பிரஷ்னேவ் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 சோவியத் உக்ரைனில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதலே உள்நாட்டுப் போர், ரஷ்யப் புரட்சி, முதல் உலகப் போர் என்று மோதல்களைப் பார்த்தும் கேள்விப்பட்டும் வளர்ந்தவர்.

 15 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார். பகுதி நேரமாகப் பயின்று பட்டம் பெற்றார். சிறு சிறு அரசுப் பதவிகளை வகித்தார். சோவியத் தலைவர் ஸ்டாலினின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிச கட்சியில் இணைந்தார்.

 கட்சியின் தீவிர உறுப்பினராகப் பணியாற்றினார். ‘அனைத்தும் அனைவருக்கும் சொந்தம்’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். விவசாயிகள் தங்களிடம் உள்ள உபரி தானியங்களை அரசிடம் விற்குமாறு ஸ்டாலின் அப்போது உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு விவசாயிகளை அடிபணியச் செய்தவர்களில் பிரஷ்னேவ் ஒருவர்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, தன் பிராந்தியத்தில் கட்சியின் முக்கிய தலைவர் ஆனார். ஸ்டாலினின் ‘ரஷ்ய மயமாக்கல்’கொள்கையைப் பரப்ப அமைக்கப்பட்ட சோவியத் செம்படைப் பிரிவில் பணியாற்றினார்.

 உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் குறுகிய காலத்திலேயே இவருக்கு பதவி உயர்வுகள், கூடுதல் பொறுப்புகளை பெற்றுத் தந்தன. விரைவில் மேஜர் ஜெனரல் ஆனார். 1946-ல் ராணுவத்தில் இருந்து விலகி கட்சிப் பொறுப்பை ஏற்றார். 1950-ல் நிகிடா குருஷேவ் இவரை மால்டேவியன் கம்யூனிச கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமித்தார்.

 2 ஆண்டுகள் கழித்து மாஸ்கோ சென்று வலிமைமிக்க செயலகமான கம்யூனிச கட்சியின் மத்திய குழுவில் ஸ்டாலின் தலைமையில் பணிபுரிந்தார். விசுவாசமான தொண்டராக இருந்து அவரது நம்பிக்கையைப் பெற்றார். 1953-ல் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு இவரது அரசியல் வாழ்வு சிறிது காலம் சரிவைக் கண்டது. ஆட்சியைக் கைப்பற்றிய குருஷேவ் இவரை ராணுவம் மற்றும் கடற்படை இயக்கத்தின் தலைமைப் பதவியில் நியமித்தார்.

 1955-ல் கஜகஸ்தானின் கம்யூனிச கட்சியின் முதல் பொதுச் செயலாளர் ஆனார். குருஷேவின் அரசியல் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்தார். 1959-ல் மத்திய குழுவின் 2-வது செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.

 1960-ல் சுப்ரீம் சோவியத்தின் அதிபர் ஆனார். அப்பதவியில் 1964 வரை செயல்பட்டார். 1977-ல் மீண்டும் இப்பதவிக்கு வந்தவர் 1982-ல் இறக்கும் வரை நீடித்தார். இவரது ஆட்சிக் காலத்தில் ரஷ்யா பல போர்களைக் கண்டது.

 உலகம் முழுவதும் சோவியத் யூனியன் தாக்கம் கணிசமாக அதிகரித்தது. ஒரு தலைவராக எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு தன் சகாக்களை கலந்தாலோசிப்பதில் கவனமாக இருந்தவர்.

சோவியத் யூனியனின் வலுவான தலைவராக 18 ஆண்டுகள் செயல்பட்டவர். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் பதவி வகித்த இவர் 76-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x