Published : 28 Sep 2016 10:09 AM
Last Updated : 28 Sep 2016 10:09 AM

லதா மங்கேஷ்கர் 10

பிரபல இந்திபின்னணிப் பாடகர்

இந்திய இசைக்குயில் எனப் போற்றப்படுபவரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் பிறந்தார் (1929). தந்தை, இந்துஸ்தானி சங்கீத மேதை; நாடக நடிகர். லதாவின் பள்ளிக்கல்வி பாதியிலேயே நின்றது.

*தந்தையின் மேடை நாடகங்களில் நடித்தார். இனிய குரலில் பாடி அனைவரையும் அசத்தினார். அமனந்தன்கான் சாகேப்பிடம் லதா, முறையாக சங்கீதம் கற்றார்.

*பதிமூன்றாவது வயதில் தந்தை இறந்து விட்டார். வருமானம் ஈட்டுவதற்காக திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நடிப்பதோடு பாடவும் செய்தார்.

*1942-ல் ‘கிதி ஹசால்’ என்ற மராத்திப் பாடலை முதன்முதலாகப் பாடினார். 1948-ல் இவர் பாடிய ‘மஜ்பூர்’ திரைப்படம்தான் இவருக்குத் தொடர்ந்து ‘பர்சாத்’, ‘அந்தாஸ்’, ‘துலாரி’, ‘மகால்’ உள்ளிட்ட படங்களில் பாட வாய்ப்புகளைத் தந்தது. ‘ஆயகா ஆயகா ஆனேவாலா’ பாடல் இவருக்குப் பின்னணி உலகின் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.

*எந்த மொழியில் பாடினாலும் அம்மொழி உச்சரிப்பில் மிகவும் கவனமாக இருப்பார். அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷண், நவ்ஷாத், எஸ்.டி.பர்மன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என ஏறக்குறைய அனைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.

*‘மெலடி குயின்’ எனப் போற்றப்பட்டார். திரைப்பட உலகில் நீண்டகாலம் முடிசூடா ராணியாக வலம் வந்தார். மராத்தி, குஜராத்தி, வங்காளி, பஞ்சாபி, அசாமி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.

* உலகளவில் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். ‘ஆஜா ரே பரதேசி’, ‘கஹி தீப் ஜலே கஹி தீல்’, ‘ப்யார் கியா தோ’, ‘தியா ஜலே, குச் நா கஹோ’ உள்ளிட்ட ஏராளமான காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியுள்ளார். 1989-ல் தாதாசாகேப் பால்கே விருது, சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகள், பலமுறை ஃபிலிம் ஃபேர் விருதுகள், வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுகள், ராஜீவ் காந்தி விருது, பத்ம விபூஷண், சிறந்த பாடகிக்கான மில்லேனியம் விருது, நூர்ஜஹான் விருது, மகாராஷ்டிரா ரத்னா விருதுகளைப் பெற்றார்.

*2001-ல் ‘பாரத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. மீரா பஜன்கள், பகவத் கீதை ஸ்லோகங்கள், கபீரின் தோஹாக்கள், சூர்தாசின் கவிதைகள், சூஃபி பாடல்களையும், ‘வந்தே மாதரம்’, ‘சாரே ஜாஹான் சே அச்சா’, ‘யே மேரே வதன் கே லோகோ’ உள்ளிட்ட ஏராளமான தேசபக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். சிவாஜி கணேசனை இவர் தனது ‘ராக்கி சகோதரர்’ என்று குறிப்பிடுவார்.

*980-க்கும் அதிகமான இந்தித் திரைப்படங்களில் பாடி சாதனை படைத்துள்ளார். சமூக அக்கறை கொண்ட இவர், ‘லதா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை நிறுவி, பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். ‘இந்தியாவின் இசைக்குயில்’ என்று போற்றப்படுபவர்.

*அமெரிக்கப் பல்கலைக்கழகம் உட்பட ஆறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. 1999-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று 87 வயதை நிறைவு செய்தாலும், குரலுக்கு வயதாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போதும் தேன்மதுர இசையைப் பொழிந்து கொண்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x