Published : 24 Aug 2016 12:08 PM
Last Updated : 24 Aug 2016 12:08 PM

ராஜகுரு 10

சுதந்திரப் போராட்ட புரட்சி வீரரும் பகத்சிங், சுகதேவ் ஆகியோரின் நெருங்கிய தோழருமான ராஜகுரு (Rajguru) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் கேடா என்ற கிராமத்தில் பிறந்தவர் (1908). இவரது முழுப்பெயர் ஷிவ்ராம் ஹரி ராஜகுரு. சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். சத்ரபதி சிவாஜியும் திலகரும் இவரது ஆதர்ச நாயகர்கள்.

*கல்வி கற்பதற்காக பனாரஸ் சென்றார். அங்கே வில் அம்பு, குஸ்தி, துப்பாக்கி சுடுதல் ஆகிய வற்றையும் கற்றார். 1919-ல் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் பிரிட்டிஷ் அரசு மீது வெறுப்புக் கொண்டார்.

*இவரது அண்ணன் அரசாங்க வேலையில் இருந்ததால் இவரது நடவடிக்கைகளைக் கண்டித்தார். அதனால் தனது 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். சந்திரசேகர ஆசாத்தை சந்தித்த இவர், அவர் மூலமாக இந்துஸ்தான் சோஷலிச குடியரசு அமைப்பில் இணைந்தார். இவரை விரைவில் சிறந்த போர் வீரராக மாற்றினார் ஆசாத்.

l *புரட்சிப் படையில் இருந்த ஆப்த நண்பர்களான பகத்சிங், சுகதேவ் இருவரும் இவரையும் தங்களது நெருங்கிய நண்பராக ஏற்றனர். இந்த மூவரும் சந்திரசேகர ஆசாத் உள்ளிட்ட பலருடன் இணைந்து பல புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். லாலா லஜ்பத்ராயின் படுகொலைக்குப் பழிவாங்குவது என சபதமேற்றனர்.

*அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி சான்டர்சனைக் கொலை செய்யும் பொறுப்பு ராஜகுரு, பகத்சிங் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1928-ல் பகத்சிங்குடன் சேர்ந்து லாகூரில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். போலீஸார் நகர் முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதே இயக்கத்தைச் சேர்ந்த புரட்சி வீராங்கனை துர்காவதி தேவியின் துணையுடன் இருவரும் தப்பிச் சென்றனர்.

*வேறு ஒரு புரட்சித் திட்டத்தில் மற்ற இருவரும் கைது செய்யப்பட்டாலும் போலீஸாரிடம் பிடிபடாமல் இவர் தப்பி விட்டார். ஆசாத்தின் அறிவுரைப்படி மகாராஷ்டிரம் சென்று தலைமறைவாக இருந்தார். ஆனால் 1929-ல் புனேயில் ஒரு கவர்னரை கொல்ல முயற்சி செய்தபோது பிடிபட்டார். ஆசாத் இருக்கும் இடத்தைக் கூறுமாறு போலீசார் இவரை சித்ரவதை செய்தனர். ஆனால், இவரோ சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

*மற்ற வீரர்களுடன் இவரையும் லாகூர் சிறையில் அடைத்தனர். அப்போது இவர் மேல் லாகூர் சதி வழக்கும் சேர்த்து போடப்பட்டது. பெயரளவில் நடத்தப்பட்ட வழக்கின் முடிவில் இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

*சிறையில் கைதிகள் மிருகத்தனமாக நடத்தப்படுவதை எதிர்த்து பகத்சிங்குடன் சேர்ந்து இவரும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். மக்கள் பொங்கி எழுந்தனர். நடுங்கிப்போன ஆங்கில அரசு இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றியது.

*தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய சமயத்தில் மக்களின் ஆவேசத்தால் அச்சமுற்ற அரசு, குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய நாள் மாலையே யாருக்கும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக 1931-ம் ஆண்டு மார்ச் மாதம் மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது.

*இவர்களது மரணத்தினால் தேசம் முழுவதும் எழும்பிய புரட்சிக்கனலைக் கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு இவர்களது உடலுக்கு திருட்டுத்தனமாக எரியூட்டியது. ‘அஜேய க்ராந்திகாரி’ என்ற இவரது வாழ்க்கை வரலாறு இந்தி மொழியில் 2008-ல் நூலாக வெளிவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x