Published : 03 Mar 2015 10:26 AM
Last Updated : 03 Mar 2015 10:26 AM

ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா 10



இந்தியத் தொழில் துறையின் தந்தை என்று அறியப்படும் ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா (Jamsetji Nusserwanji Tata) பிறந்த தினம் இன்று (மார்ச் 3). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 குஜராத் மாநிலம், நவசாரி என்ற இடத்தில் பிறந்தவர் (1839). பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களது குலத் தொழில் புரோகிதம். ஆனால், இவரது தந்தை அந்த மரபை மாற்றித் துணிச்சலுடன் வணிகத்தில் ஈடுபட்டார். பம்பாயில் ஒரு ஏற்றுமதி-வணிக நிறுவனத்தைத் தொடங்கினார்.

 ஜம்ஷெட்ஜி 14-வது வயதில் மும்பைக்கு வந்தார். எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே அப்பாவுக்கு வியாபாரத்தில் உதவிவந்த இவர், 1858-ல் படிப்பு முடிந்தவுடன் முழுநேர ஊழியராகச் சேர்ந்தார். அவ்வப்போது இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தனது வர்த்தக அறிவை மேம்படுத்திக்கொண்டார்.

 அங்கெல்லாம் இந்திய நிறுவனங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதைப் புரிந்து கொண்டார். தந்தையின் நிறுவனத்தின் கிளைகள் ஜப்பான், சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக் காவில் உருவாக இவர் பெரிதும் உதவினார். இவர் தனது அப்பாவின் நிறுவனத்தில் 29 வயதுவரை வேலை பார்த்து வந்தார்.

 1868-ல் ரூ.21,000 முதலீட்டில் சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். திவாலாகிப்போன ஒரு எண்ணெய் ஆலையை வாங்கி அதைப் பருத்தி ஆலையாக மாற்றி, அதற்கு அலெக்ஸாண்டிரா மில்ஸ் என்று பெயரிட் டார். இரண்டு வருடங்கள் கழித்து இந்த ஆலையை நல்ல லாபத்துக்கு விற்றார்.

 1874-ல் இன்னொரு பருத்தி ஆலையை நாக்பூரில் நிறுவி னார். தொடர்ந்து பல ஆலைகளை நிறுவினார். இவரது ஆலைகள் வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்து இவரது ஆலைகளில் தயாரிக்கப்பட்ட துணிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டன.

 இரும்பு மற்றும் எஃகு நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம், தனித்துவம் வாய்ந்த ஹோட்டல் மற்றும் நீர் மின் நிலையம் ஆகியவற்றை நிறுவ வேண்டும் என்ற நான்கு இலக்குகளை வகுத்துக்கொண்டு அவற்றை எட்டுவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார். தற்போது இந்தியாவின் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ் யமாகத் திகழும் டாடா குழுமத்துக்கு அஸ்திவாரமாக இவை அமைந்தன.

 எப்போதுமே தன் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வதில் மிகவும் உறுதியாக இருப்பார். 1901-ல் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்குச் சென்று இரும்பு, எஃகு சம்பந்தமான தொழில்நுட்பங்களைக் கற்றார்.

 இந்தியாவின் பெரிய அளவிலான இரும்பு சம்பந்தமான வியாபாரப் பணிகளைத் தொடங்கினார். இவரது வாழ் நாளில் இவரது ஹோட்டல் கனவு நிஜ வடிவம் பெற்றது. மும்பையில் 1903-ல் தாஜ் ஹோட்டல் தொடங்கப்பட்டது.

 1892-ல் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் அமைப்பான ஜே.என். டாடா என்டோவ்மன்ட் என்னும் அமைப்பை நிறுவினார். 1898-ல் பெங்களூரில் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவதற்காக தன் நிலத்தை நன்கொடை யாக வழங்கினார்.

 இந்தியத் தொழிற்துறையின் பிதாமகர் என்று போற்றப்பட்ட இவர், 1904-ம் ஆண்டு தன் 65-வது வயதில் காலமானார். இவரை கவுரவிக்கும் விதமாக ஜார்க்கண்டில் உள்ள ரயில் நிலையத்துக்கும் ஒரு ஊருக்கும் டாடாநகர், ஜம் ஷெட்பூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவரது பெயரில் தபால் தலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x