Published : 16 Jun 2016 05:03 PM
Last Updated : 16 Jun 2016 05:03 PM

யூடியூப் பகிர்வு: தோடர் பழங்குடி கோயில் சுவாரசியங்கள்!

இடையர் குலத்தைச் சேர்ந்த சிறிய இனத்தினர், தோடர் பழங்குடி. இவர்கள் தென்னிந்தியாவின் நீலகிரி மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தங்களின் பாரம்பரிய ஆடையான முண்டுகளைத்தான் இன்று வரை அணிந்து வருகின்றனர். பழங்குடியினரின் வாழ்க்கை முறையைப் போல அவர்களின் வழிபாட்டு முறையும் சுவாரசியம் மிகுந்ததாய் இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், உதகமண்டலத்துக்கு அருகில் உள்ள கோயில் கால் முண்டில் தங்களின் கோயில் புனரமைப்பு விழாவைக் கொண்டாடி இருக்கின்றனர். சுமார் ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு நடைபெற வேண்டும் என்பது இவர்களின் ஐதீகம்.

கோயில் புனரமைப்புப் பணியில், திரும்பவும் கோயிலைக் கட்டுவதற்கு மலையில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே தோடர் பழங்குடியினர் பயன்படுத்துகின்றனர். சுமார் 2 மாதங்களுக்கு புற்களையும், மூங்கில்களையும் திரட்டுகின்றனர். அவற்றை முறையாகப் பதப்படுத்தி, அவற்றின் நார்களைச் சீவி கூரை வேய்கின்றனர்.

கோயிலின் முகப்பு, திருப்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட ஒற்றைக் கல்லால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றைச் சிற்பம் முந்தைய காலங்களில் இருந்த மரத்தாலான வணங்கும் இடத்துக்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் கடவுள் விக்கிரகங்கள் இல்லை.

வழிபாட்டு உருவங்கள் மட்டும் வரையப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு தோடர் கோயிலுக்கும் தனித்தனியான பூசாரிகள் இருக்கின்றனர். அவர்கள் வருடம் முழுவதும் அந்தக் கோயிலில்தான் வசிக்கிறார்கள். கோயிலுக்கோ, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கோ வர பெண்களுக்கு அனுமதியில்லை. தூரத்தில் இருந்து வேண்டுமானால் பெண்கள் கோயிலைப் பார்க்கலாம், வேண்டிக்கொள்ளலாம்.

கோயிலின் காணொளியைக் காண: