Published : 04 Jun 2016 11:12 AM
Last Updated : 04 Jun 2016 11:12 AM

எம்ஜிஆர் 100 | 79 - தொண்டருக்கும் தொண்டர்!

M.G.R.கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அன்றாடப் பணிகளில் அவருக்கு உதவி புரியவும் பாதுகாப்புக்கும் உதவியாளர்களும் பாதுகாவலர்களும் உண்டு. எம்.ஜி.ஆர். எள் என்றால் எண்ணெயாய் நிற்கும் ஆற்றல் மிக்கவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட பணியாளர்களின் தேவைகளை, குடும்பத்துக்கான உதவிகளை முழுமையாக கவனித்து உதவி செய்வதற்கென்று ஒருவர் உண்டு. அவர் எம்.ஜி.ஆர்.!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு முறை மாணவ, மாணவிகளின் கலாசார விழா. அதற்கு சிறப்பு விருந் தினராக எம்.ஜி.ஆரை அழைத்திருந்த னர். விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். உடற்கூறுகள் பற்றி, தான் அறிந்து வைத்திருந்தவை குறித்து அருமையாக உரையாற்றினார். ‘இத்தனை பணிகளுக்கும் நடுவே, இதை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள இவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று பேச்சைக் கேட்டவர்கள் வியந்தனர்.

‘‘மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராக தொழில் செய்பவர்கள் சேவை மனப்பான்மையோடு குறிப்பாக, ஏழைகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். வேண்டுகோள் விடுத்து விட்டு, தனக்கே உரிய அடக்கத்தோடு சொன்னார்… ‘‘மருத்துவம் படிக்காத என்னை சிறப்பு விருந்தினராக ஏன் அழைத்தார்கள்? என்று தெரியவில்லை. ஒரு காரணம் மட்டும் புரிகிறது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புதான் அது. அந்த அன்புள்ளத்தோடு எதிர் காலத்தில் நீங்கள் சமூகத்துக்கு பணி யாற்ற வேண்டும்’’ என்று பலத்த கர கோஷத்துக்கிடையே பேசி முடித்தார்.

எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களை மாணவர்கள் அவருக்கு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு படப்பிடிப் பில் கலந்து கொள்வதற்காக வாஹினி ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு, தன் காரில் இருந்த ஆப்பிள் கூடையை எடுத்து வரச் சொல்லி, படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லா பணியாளர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கச் செய்தார். மருத் துவக் கல்லூரி விழாவில் அன்பைப் பற்றி பேசிய எம்.ஜி.ஆருடைய அன்புள்ளத்தின் வெளிப்பாடு இது.

தென்ஆற்காடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் எம்.ஜி.ஆர். சென்றார். வழியில் பல இடங்களில் மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, நிகழ்ச்சிக்கு தாமதமாகவே சென்றார். அவசரப் பணிகள் காரணமாக, குறித்த நேரத்துக்குள் அவர் சென்னை திரும்பி யாக வேண்டும். நிகழ்ச்சியை முடித் துக் கொண்டு காரில் ஏறிப் புறப்படும் முன் உதவியாளர்களைப் பார்த்து, ‘‘சாப்பிட்டீர்களா?’’ என்று கேட்டார். எல் லோரும் ஒரே குரலில் ‘‘சாப்பிட்டு விட்டோம்’’ என்றனர்.

காரின் சக்கரங்கள் சென்னையை நோக்கி சுழலத் தொடங்கின. நகரத் தைக் கடந்து சாலையில் கார் வேகமாகச் செல்கிறது. திடீரென, ‘‘காரை ஓரமாக நிறுத்து’’ என்று எம்.ஜி.ஆரின் குரல் கடுமையாக ஒலிக் கிறது. ‘ஏன்?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தாலும், எம்.ஜி.ஆர். சொன்னதைச் செய்தே பழக்கப் பட்ட உதவியாளர் கள் காரணம் கேட்க வில்லை. என்றாலும், அவரது குரலில் இருந்த கடுமை அவர்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. சாலையோரமாக கார் நின்றது.

உதவியாளர்களைப் பார்த்து உரிமை கலந்த கோபத்தோடு, ‘‘உங்கள் வாடிய முகங்களைப் பார்த்தாலே நீங்கள் எல்லோரும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது. நான் விரைவில் சென்னை திரும்ப வேண்டும் என்பதற் காக, என்னிடம் சாப்பிட்டதாக சொல்லி யிருக்கிறீர்கள். ஏன் பொய் சொல்கிறீர் கள்?’’ என்று இரைந்தார். குட்டு வெளிப்பட்டதில் அந்த உண்மையான பணியாளர்கள் ஊமைகளாய் நின்றனர்.

அவர்களது நிலைமையை எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். அவரது குரலில் இருந்த தந்தையின் கண்டிப்பு, இப்போது தாயின் கருணையாய் சுரந்தது. ‘‘இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் கள் என்னை வரவேற்று உபசரிக்கும் ஆர்வத்தில் உங்களை கவனித்திருக்க முடியாது. நான் புறப்படத் தாமத மாகிவிடும் என்பதற் காக சாப்பிட்டுவிட்ட தாக நீங்கள் பொய் சொன்னால் எனக் குத் தெரியாதா? நான் சந்தேகப் பட்டுதான் அங்கிருந்தவர் களிடம் இட்லி களை பொட்டலங் களாக கட்டச்சொல்லி வாங்கி வந்தேன். மர நிழலில் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’’ என்று சொல்லி, தான் கொண்டுவந்த பார்சலை எடுத்து உதவியாளர்களிடம் கொடுத்தார்.

நெகிழ்ந்துபோன உதவியாளர்கள், எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிக் கொண்டு ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்து சாப்பிடத் தொடங் கினர். நெய் மணக்கும் காரமான மிளகாய்ப் பொடி தடவிய இட்லி அவர்களுக்கு அமிர்தமாய் இனித்தது. சீக்கிரம் புறப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இட்லிகளை விழுங் கியவர்களில் ஒருவருக்கு விக்கல். எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிவந்த அவசரத்தில் தண் ணீரை எடுத்துவர அவர்கள் மறந்து விட்டனர்.

அப்போது, தண்ணீர் வைத்திருந்த ஜாடியையும் டம்ளர்களையும் ஏந்தியபடி இரு கரங்கள் நீள்கின்றன. உதவியாளர்கள் நிமிர்ந்து பார்த்தால், எம்.ஜி.ஆரேதான்! எல்லோருக்கும் டம்ளர்களில் பொறுமையாக தண்ணீரை ஊற்றி வைக்கிறார். அவரை உப சரிக்க லட்சோப லட்சம் பேர் காத்திருக்கும்போது, அந்த மாமனிதர் தங்களுக்கு பசியாற உணவு தந்து, தாகம் தீர்க்க தண்ணீரும் கொடுத்து பணி செய்வதைக் கண்ட உதவியாளர்களின் கண்கள் பனித்தன.

எம்.ஜி.ஆர். தலைவர் மட்டுமல்ல; தொண்டருக்கும் தொண்டர்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்



ஜூபிடர் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டுடியோவை எம்.ஜி.ஆர். வாங்கி அதற்கு தனது தாயாரின் பெயரை சூட்டி ‘சத்யா ஸ்டுடியோ’ ஆக்கினார். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய ஸ்டுடியோவில் தொழிலாளர்களை பங்குதாரர்களாக்கி, லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்து அளித்த முதலாளி… இல்லை, இல்லை, முதலாளி என்ற பெயரில் வாழ்ந்த தொழிலாளி எம்.ஜி.ஆர்.!

முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x