Published : 13 Feb 2016 10:05 AM
Last Updated : 13 Feb 2016 10:05 AM

முத்துக் குளிக்க வாரீகளா 27: வெள்ளைச் சேலை!

மரத்தடியில் ஊர்ப் பஞ்சாயத்து கூடி யிருந்தது. தலைவர் பேசத் தொடங்கினார்.

’’நாம இங்கே ஏன் கூடியிருக்கோம்னு ஒங்களுக்கெல்லாம் தெரியும். தேர்தல் நெருங்கிக்கிட்டிருக்கு. நம்ம ஊரு ஒட்டுமொத்தமா கூடி ஒரு மனசா ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டு வாரோம். இந்தத் தேர்தல்லே எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடறதுன்னு தீர்மானிக்கத்தான் கூடியிருக்கோம். இப்ப நீங்க ஓங்க கருத்துகளைச் சொல்லலாம்.’’

“புதுசா ஆலோசனை செய்யறதுக்கு என்ன இருக்கு? மூனு தேர்தலா நாம ........ கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டு வாரோம். அதே மாதிரி இந்தத் தேர்தல்லேயும் போட வேண்டியதுதான்.

“நீ அந்தக் கட்சிக்காரன் அதனால இப்படிச் சொல்றே. அந்தக் கட்சிக்கு ஓட் டுப் போட்டு என்னத்தைக் கண்டோம்?’’

“நெசந்தான். நம்மூர்ப் பிரச்சினை களைப் பத்தி அவங்ககிட்ட சொன்னோம். செய்றோம்னாங்க. ஆனா, ஒண்ணுமே செய்யல. திரும்ப அவங்களுக்கு ஏன் ஓட்டுப் போடணும்?’’

“நம்மூர்ப் பிள்ளைங்க எட்டு கிலோ மீட்டர் நடந்துபோய்ப் படிக்க வேண்டி யிருக்கு. ஒரு பள்ளிக்கூடம் கட்டித் தாங் கன்னு சொன்னோம். தர்றோம்னாங்க. தந்தாங்களா இல்லையே?”

“சாலைங்களெல்லாம் குண்டும் குழி யுமா கெடக்குது. சாலை போட்டுத் தாங் கன்னு கேட்டோம். செய்யுறோம்னு சொன் னாங்க. செஞ்சாங்களா? இல்லியே.”

“ஊர்ல குடிதண்ணி வசதியில்லே. பக்கத்திலேதான் ஆறு இருக்கு. குழாய் போட்டுக் கொண்டு வரலாம். சொன் னோம். செய்யுறோம்னாங்க. செய்யல.’’

“குடிக்கத் தண்ணி கேட்டோம். ’டாஸ் மாக்’ தண்ணியெ கொடுத்தானுங்க. கேட்ட தண்ணியெ கொடுக்காம, கேக்காத தண்ணியெ கொடுத்திருக்கானுங்க.”

“டாஸ்மாக் தொறந்ததும் எங்கே தொறந்தானுங்க? கோயிலுக்குப் பக்கத் துல. அதிகாரிகள்ட்ட முறையிட்டோம். ஒண்ணுமே நடக்கலே.”

“நீ விஷயந் தெரியாமெப் பேசுறே. டாஸ்மாக் கடையெ அங்கே தொறந்ததே …………… கட்சிக் கவுன்சிலரு. நீ ரொம்ப வற்புறுத்தினேன்னா அங்கிருந்து கோவிலெ அகற்றுவாங்களே தவிர டாஸ்மாக்கை அகற்ற மாட்டாங்க.”

“டாஸ்மாக் தண்ணிப் பாசனத்துல தான் அவங்க விவசாயம் நடக்குது. அதை எப்படி அவங்க அகற்றுவாங்க?’’

“குடி குடியைக் கெடுக்கும்னு சொல் லிக்கிட்டே விக்கிறாங்களே, என்ன அர்த்தம்?’’

“இது கூடவா தெரியலே? குடி கெடுக்கறதுதான்.’’

“குடிகளைக் காப்பதுதானே அரசின் கடமை; குடியைக் கெடுக்குறது அரசா?’’

“வெவரம் புரியாமெ பேசுறியே, இது குடியாட்சி, ‘குடி’மக்கள்டேதான் அரசை நிர்ணயிக்கிற ஓட்டு இருக்கு. எனவே அவங்களை சந்தோஷமா வெச்சுக்கணும். ‘குடி’மக்களுக்காகக் ‘குடி’மக்களால் அமைக்கப்படுற ‘குடி’மக்கள் ஆட்சி இது.’’

‘‘மதுவிலக்கைச் செயல்படுத்துனா ‘இலவச’ங்களைக் கொடுக்கப் பணம் எங்கிருந்து வரும்?’’

‘‘நல்லாத்தான் இருக்கு. புருஷனைக் கொன்னுட்டு பொண்டாட்டிக்கு வெள் ளைச் சேலை இலவசமாக கொடுக்கறது.’’

‘‘மக்களையெல்லாம் பிச்சைக்காரங் களா ஆக்கிட்டாங்க.’’

‘‘இது பிச்சையில்லேப்பா; லஞ்சம். மீனைப் பிடிக்கிறதுக்குத் தூண்டில் முள்ளுல வெக்கிற இரை.’’

‘‘மக்களைப் பாத்து ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’னாரே பாரதியார்.’’

‘‘இந்த நாட்டை ‘மன்னர்’களா ஆள் றாங்க? மந்திரிகள்லே ஆள்றாங்க!’’

‘‘ஜனநாயகம்ங்கிறாங்க. எங்கே இருக்கு ஜனநாயகம்?’’

‘‘அதான் தேர்தல் நடத்துறாங்களே?’’

‘‘தேர்தல்லே மக்கள் விரும்புறவங்க, மக்களுக்காகத் தொண்டு செய்ய விரும்பு வறங்க நிக்க முடியுதா? முதல்லே கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களைப் பொறுக்கி எடுக்குறாங்க. அவங்களை மக்கள் மீது திணிக்கிறாங்க. இவங் கள்ளே ஒருத்தனைத்தானே மக்கள் தேர்ந்தெடுக்க முடியும்?’’

‘‘அதனாலே இதெக் கட்சிநாயகம்னு தான் சொல்ல முடியும்; ஜனநாயகம்னு சொல்ல முடியாது’’

‘‘தேர்தல் செலவு கோடிக்கணக்கா ஆவுது. அப்படியிருக்கும்போது ஏழை கள் எப்படி நிக்க முடியும்?’’

‘‘கோடிக்கணக்கா செலவு பண்ணி நிக்கிறாங்களே, மக்களுக்குத் தொண்டு செய்ய அவ்வளவு ஆர்வமா?’’

‘‘நல்லா சொன்னே.. இந்தப் பணத்தை ஏதாவது மக்கள் நலத் திட்டத்துக்காகக் கேட்டுப் பாருங்க. அப்ப தெரியும் அவங்க யார்னு?’’

‘‘கோடிக் கணக்கா அவங்க செலவு பண்றது, சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கத்தான்...’’

‘‘கோடிகளே சின்ன மீனாயிட்டுதா?’’

‘‘அதுமட்டுமல்ல; சம்பாதிச்ச பணமும் பதவியும் இருந்தா கோட்டை கட்டி அகழி வெட்டிக்கிற மாதிரி. சூட், கேஸ்னு வந்தா ‘சூட்கேஸ்’கொடுத்தே தப்பிச்சிடலாம்.’’

‘‘பெரிய தொழிலதிபர்கள் தேர்தலுக்கு முன்னாலேயே தேர்தல் நிதிங்கிற பேர்ல லஞ்சத்தை அட்வான்ஸா கொடுத் துர்றாங்க. அது மட்டுமில்லே; புத்திசாலித் தனமா ஆளுங்கட்சிக்கு மட்டுமில்லாமெ எதிர்க்கட்சிக்கும் கொடுத்துர்றாங்க.’’

‘‘லஞ்சம் கொடுக்காம எந்த வேலை யும் நடக்கிறதில்லே. கவுன்ஸிலர் முதல் மேலிடம் வரை பங்கு பிரிச்சிக்கிறாங் களாம். கூட்டுக்கொள்ளை அடிக்கிறா னுங்க. பயப்படாம பப்ளிக்கா கேக்கு றாங்க. தட்டிக் கேக்க ஆளில்லே. ஊடகங் களெல்லாம் மூன்று குரங்குகள் மாதிரி கண்ணைப் பொத்தி, காதைப் பொத்தி, வாயைப் பொத்தி உட்கார்ந்திருக்காங்க.’’

‘‘ஜெயிப்பாங்களாங்கறதே சந்தேகம். அதிலே முதல்வர் வேட்பாளர்னு அறிவிக் கிறாங்க. இதுதான் ஜனநாயகமா?’’

‘‘வாய் கிழியப் பேசுறானுங்க. எவனுக் காச்சும் தனிச்சு நிக்கத் துணிச்சலுண்டா? சிலர் கூட்டணிலே சேர்றதுக்கே பேரம் பெசுறாங்க கோடிக்கணக்கா. இவங் களா வந்து லஞ்சத்தை ஒழிக்கப் போறானுங்க?’’

‘‘வெறும் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லே. மக்களும் சரியில்லே. ஆயிரம், ரெண்டா யிரத்தை வாங்கிக்கிட்டு ஓட்டுப் போடு றாங்க. இது மட்டும் லஞ்சம் இல்லியா?’’

‘‘அவங்க என்ன செய்யறோம்னே தெரி யாமே செய்றாங்க. ஆயிரம் ரெண்டாயிரத் துக்குத் தங்களையே வித்துர்றாங்க.’’

‘‘ஜனங்க சிந்திச்சு ஓட்டுப் போடுற தில்லே. ஒண்ணு சாதிக்காக ஓட்டுப் போடறாங்க, இல்லேன்னா மதத்துக்காக ஓட்டுப் போடறாங்க.’’

‘‘அதிலே கட்சிக்காக ஓட்டுப் போடு றதை விட்டுட்டியே. அதை விட மோசம் நடிகர்களுக்கு ஓட்டு போடுறது.’’

‘‘ஜனங்க ஜனங்களா இல்லே. அப் புறம் எப்படி ஜனநாயகம் இருக்கும்?’’

‘‘நாட்டைப் பிரிக்கிறது குற்றம் கிறாங்க. வறுமைக் கோடுன்னு ஒண்ணைப் போட்டு ஏழை நாடு, பணக்கார நாடுன்னு பிரிவினை செய்திருக்காங்களே, இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்குறது?’’

‘‘லஞ்ச ஊழல் பேர்வழிகளைத் தூக் குல போடணும். வாக்குறுதிகளை நிறை வேத்தாதவங்களைச் சிறையிலே போடணும்.’’

‘‘கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. நடக்குற காரியமா என்ன?’’

தலைவர் செம்பிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டுப் பேசினார்.

‘‘எதுக்குப்பா வெட்டிப் பேச்சு? நாம இப்ப என்ன செய்யணுங்கறதெப் பத்திப் பேசுங்க.’’

‘‘நான் ஒண்ணு சொல்றேன். செய்வீங் களா? இதிலே நம்ம பிரச்சினைகள் தீர வழியிருக்கு.’’

‘‘என்ன செய்யணும்னு சொல்லு.’’

‘‘எதுவும் செய்யாமெ இருக்கணும்னு சொல்றேன்.’’

‘‘என்னப்பா சொல்றே?’’

‘‘யாருக்கும் ஓட்டுப் போடப் போற தில்லே. தேர்தலெப் புறக்கணிக்கிறோம்னு அறிவியுங்க. அற்புதங்கள் நடக்கும். நீங்க கேட்டதெல்லாம் கிடைக்கும்.’’

சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு தேர்தலைப் புறக்கணிப்பதாகத் தலை வர் அறிவித்தார்.

அவ்வளவுதான். அற்புதங்கள் நடக்கத் தொடங்கின.

மக்கள் யார் யாரையெல்லாம் தேடி அலைந்து பார்க்க முடியாமல் திரும்பினார்களோ, அவர்களெல்லாம் மக்களைப் பார்க்க ஓடி வந்தார்கள்.

ஆட்சியர் தலைவரின் காலைப் பிடிக் காத குறையாக அறிவிப்பைத் திரும்பப் பெறக் கெஞ்சினார். விரைவில் பள்ளிக் கூடம் கட்டித் தருவதாக வாக்களித்தார்.

மடமடவென சாலைகள் போடப்பட் டன. அடிகுழாய்கள் அமைக்கப்பட்டன. டாஸ்மாக் அகற்றப்பட்டது.

பெரியவர் ஒருவர் வியப்போடு சொன்னார்: ‘‘போடுற ஓட்டை விடப் போடாத ஓட்டுக்கு சக்தி அதிகமாயிருக்கே!’’

- இன்னும் முத்துக்குளிக்கலாம்…

எண்ணங்களை பகிர்ந்துகொள்ள: Kaviko2003@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x